பணம் பத்தும் செய்யும்

                         பணம் பத்தும் செய்யும்   

" பணம் பந்தியிலே 
குணம் குப்பையிலே"
என்பார்கள்.

கல்லானே ஆயினும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
   எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை 
   இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
    செல்லாது அவன் வாயிற் சொல்"

என்கிறார் ஔவை.

பணம் இல்லாதவரை ஈன்றெடுத்த தாயே
விரும்ப மாட்டாளாம்.
என்ன கொடுமை இது?

பணம் இல்லை என்றால் கட்டிய
மனைவி மதிக்க மாட்டாள்.
பெற்ற தாய் விரும்ப மாட்டாள்.
சமூகம் மதிக்காது.
அவனுடைய பேச்சு சபையில்
எடுபடாது. 
இதுதான் உலக எதார்த்தநிலை.

"பணமில்லாதவன் பிணம்"

பணமில்லாதவன் செயலிழந்தவன்
ஆகிவிடுவானாம். உண்மைதாங்க...
பணம் இல்லாமல் என்ன நடந்துவிடப் போகிறது.?
நீங்களே சொல்லுங்கள்.

"பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர்
பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்"

பணம் இருந்தால்தான் பின்னால்
நாலுபேர் வருவார்கள். பணம் இல்லையா?
அப்படியானால் பதவியாவது இருக்க
வேண்டும். அதுவும் இல்லையா?
நம்மை யார் கண்டு கொள்வார்கள்?

பணம் இருந்தால்தான் நாலுபேர் வந்து
நம்மை எட்டிப் பார்ப்பார்கள்.
பணம் இல்லையா இறுதி யாத்திரையின் போது
தூக்கிச் செல்லகூட நாலுபேர்
இருக்கமாட்டார்கள். இது எத்தனையோ
 இடங்களில் நாம் பார்த்திருப்போம்.

"ஈட்டி எட்டும்வரைதான் பாயும்; 
பணம் பாதாளம் வரை பாயும்."

பணம் இருந்தால் எங்கிருந்தாலும்
இங்கு உள்ளவர்களைக் கைக்குள்
கொண்டு வந்துவிடலாம்.உலகையே ஆட்டிப்
படைக்கும் வல்லமை பணத்திற்கு உண்டு.

"கோவணத்துல காசு இருந்தா
கோழிகூட பாட்டுப் பாடுமாம் "

கோவணம் கட்டி வந்தால்  என்ன...
பட்டு பரிவட்டங்கட்டி வந்தால் என்ன..
பணம் இருந்தால் பின்பாட்டுப்பாட
ஒரு கூட்டம் கூடவே வரும்.
புகழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

"நாய் வித்த காசு குரைக்கவா செய்யும் ? 
கருவாடு விற்றகாசு நாறவா செய்யும்? "

எந்த வழியில் வந்தா என்னங்க...
பணம்...பணம்தாங்க...

"ஒன்று ஜனக்கட்டு வேண்டும் - 
இல்லை என்றால்
பணக்கட்டு வேணும் "

இது ரொம்ப ரொம்ப உண்மைங்க...
இந்த இரண்டும் இருந்தால்தான்
சமுதாயத்தில் மதிப்பும்
மரியாதையும் கிடைக்கும்.
கட்டுக்கட்டாக பணம் வைத்திருக்க
வேண்டும்.
அல்லது மக்கள் கூட்டத்தைச்
சேர்த்து வைக்கத் தெரிய
வேண்டும்.

இப்படி பணமொழிகள் ஏராளம் உண்டு.

இந்த பழமொழிகள் வெறுமனே பணத்தின்மீது
வெறுப்புள்ளவர்களால் சொல்லப்பட்டவையாக
இருக்கும் என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியாது.
அனுபவித்து உணர்ந்த உண்மைகள்தான்
பழமொழிகளாக நம்மோடு உலா வருகின்றன.

ஆளாளாளுக்கு பணத்தைப் பற்றிய
கருத்து மாறுபடலாம்.
ஆனால் பணமில்லாமல் எதுவும் நடக்காது
என்ற கள நிலவரத்தை யாரும் மறுக்க முடியாது.
மறைக்கவும் முடியாது.
பேச்சுக்கு வேண்டுமானால் "பணம்
என்னங்க பணம். குணம்தானே நிரந்தரம் "என்று
சொல்லிக் கொள்ளலாம்.

காசு இன்றைக்கு ஒருத்தன் கையில்
இருக்கும். நாளை இன்னொருத்தன்
கையில் இருக்கும். பணம் நிரந்தரமல்ல...என்று
ஏதேதோ வாய்க்கு வந்ததைப் பேசிக் கொள்ளலாம்.

உறவுகளை நிரந்தரமாக உங்களோடு
ஒட்ட வைப்பதற்கு முழுமுதற் காரணியாக
இருப்பதே பணம் தாங்க...

சபையில் முன் வரிசையில் துண்டு போட்டு
இடம் பிடித்து வைப்பதும் பணம் தாங்க...
இதை யாராலும் மறுக்க முடியாது.

"காசேதான் கடவுளடா- அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா"
சும்மாவா பாடி வைத்தார்கள்.

"தட்சணை இன்றி அர்ச்சனை இல்லை."

சாமியைப் பார்க்கவும் பணம் வேண்டும்.

"முட்டாப்பயலை எல்லாம் 
தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா 
தாண்டவக்கோனே! 
.
கட்டியழும்போதும்
தாண்டவக்கோனே- பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமீது கண்வையடா 
தாண்டவக்கோனே!"

 என்ற பராசக்தி படத்தில் உடுமலை
நாராயணகவி எழுதிய பாடல்
பணம் எவ்வளவு அவசியமான ஒன்று
என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

இப்படி பணமே எல்லாம் என்று
ஒருசாரார்.

இன்னொரு சாரார் ஒரேயடியாக
பணம் பணம் என்று பேசாதீர்கள்.
பணம் வந்தால் என்னென்ன
கெட்ட குணங்கள் எல்லாம்
வரும் என்று தெரியுமா?
என்று கேட்கிறார்கள்.

திடீரென பாதை மாறி எதிர்த்திசையை
நோக்கி திருப்பியடிக்கக் காரணம் என்ன?

காசுக்கு  நாணயம் என்ற பெயர் உண்டு.
நாணயம் உருண்டோடுவதுபோல
பணம் கைமாறிப் போகும் 
என்பதால்தான் அதற்கு நாணயம்
என்ற பெயர் வந்ததாம்.

நாணயத்திற்கு மற்றுமொரு பொருளும்
உண்டு. 
கொஞ்சமாவது நாணயம் இருக்கிறதா?என்று
ஊர்ப் பக்கம் பேசுவார்கள்.

இந்த நாணயத்திற்குப் பணம்
என்பது பொருளல்ல.

நேர்மை இல்லாதவரைத்தான்
நாணயமில்லாதவன் 
என்று சொல்வார்கள்.

பணம் அதிகமானால் 
அந்த நேர்மை இல்லாமல்
போக நிறைய வாய்ப்பு ஏற்பட்டுவிடுமாம்.
பணம் பேசும்போது மனிதப் பண்பு
காணாமல் போவது இயல்புதானே!

பணம் வந்தால் 
பத்து கெட்ட குணங்கள் 
 கூடி வந்து கும்மாளமிடுமாம்.
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும் "என்று
 சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பத்து கெட்ட குணங்கள்
என்னென்ன என்று பார்ப்போமா?


     1.  பேராசை

      2.    தீய இச்சை ( தவறுதலாக  ஆசைகள் )
      
      3.    கஞ்சத்தனம்
        
      4.    காதல்
        
      5.   அகம்பாவம் அதாவது ஈகோ
        
       6.  பொறாமை 
          
        7.    ஆடம்பரம்
        
        8.  அகங்காரம்  ( தனக்கு நிகர் எவரும் 
            இல்லை என்ற மேட்டிமை)
        
       9   கர்வம் ( தற்பெருமை)
        
       10.    கெடுமனம் (அதாவது பிறருக்கு
                 கேடு விளைவித்து இன்பம் காணும்
                 கொடிய எண்ணம் )  

 போன்ற பத்து தீய குணங்களும்
 வந்து சேர்ந்து விடுமாம்.

பணம் வந்தால் இத்தனை தீய குணங்கள்
வந்து விடுமா? 

பணம் இருந்தால் உலகையே 
வாங்கிவிடலாம்.
தவறு செய்தாலும் பணத்தைக் கொடுத்து
சரி செய்து கொள்ளலாம்.
நினைத்ததை முடித்துவிடலாம்.
நினைப்பதை அடைந்துவிடலாம்
என்ற நினைப்பு குடிவந்துவிடுவதால்
தீமை செய்யும் எண்ணமும் சேர்ந்தே
குடி உரிமை வாங்கி வந்து குடியேறிவிடுகிறது. 


இதைத்தான் பணம் பத்தும் செய்யும்
என்று சொன்னார்களா?
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

"பணம் பத்தும் செய்யும்" 
என்பது  நமது முன்னோர்கள்
கணித்து அறிந்து சொன்ன
அனுபவமொழி.

பெரியவர்கள் சொன்னால் உண்மை
இல்லாமலா இருக்கும்?

 பணம் எதிர்மறை தாக்கத்தையும்
உண்டுபண்ண வல்லது 
என்பதை நாமும் ஒத்துக் கொண்டுதான் 
ஆக வேண்டும்.


சற்று சிந்திக்க வேண்டிய 
பழமொழி தான் இல்லையா?

                

Comments

Post a Comment

Popular Posts