உலக மகிழ்ச்சி நாள்

 உலக மகிழ்ச்சி நாள்


கொண்டாட்டங்களும் குதுகலமும்
இல்லாமல் வாழ்க்கை இல்லை.
பிறந்த நாளில் நாலுபேர் 
வாழ்த்திவிட்டால் அதில் மனம்
மகிழ்ச்சியடைகிறது.
விரும்பிய உணவுப் பொருளை வாங்கி
உண்டுவிட்டால் ....
கையை மணத்துப் பார்த்து பார்த்து
மகிழ்கிறோம்.
உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால்...
விழுந்து விழுந்து உபசரித்து
நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.
தேர்வில் வெற்றிபெற்று விட்டால்...
 துள்ளிக் குதித்து
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.

இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும்
ஊரில் மூன்று குடம் தண்ணீர் 
கிடைத்துவிட்டால்....
நான் மூன்று குடம் தண்ணீர் எடுத்துவிட்டேன்
என்று சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம்.
புது சட்டை அணிந்துவிட்டால்....
நாள்முழுவதும் ஏதோ ஒரு மகிழ்ச்சி
வந்து தொற்றிக்கொண்டு 
ஆகாயத்தில் மிதப்பது போன்று
உணர்கிறோம்.
புதிதாக குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால்....
திறந்து திறந்து பார்த்து
காற்றைத் குடித்து குடித்து மகிழ்கிறோம்.

வாடகைவீட்டில் வாழ்ந்த நாம்
சொந்தவீடு வாங்கி குடியேறிவிட்டால்...
ஒரு வாரத்திற்குக் கால் தரையில்
படுவதே இல்லை.
துடைத்துத் துடைத்து வீட்டைச்
சுற்றிச் சுற்றி வருகிறோம்!

இப்படி சின்னச்சின்ன மகிழ்ச்சியோடு தான்
நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து
கொண்டிருக்கிறது.

நான் இப்போது எழுதியிருப்பவை எல்லாம்
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்
செயல்களா?
இதுக்குப் போய் மகிழ்வார்களா?
என்றுகூட ஒரு சிலருக்குத் தோன்றும்.
எண்பது விழுக்காடு மக்கள் இப்படிப்பட்ட 
சின்னச்சின்ன
மகிழ்ச்சியை மட்டுமே நுகர முடிகிறது.


மகிழ்ச்சி என்றால் என்ன?
மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது?
மகிழ்ச்சி ஒரே மாதிரியாக 
இருக்கிறதா?

இப்படி நமக்குள் பலகேள்விகள்
எழுதல் உண்டு.

எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான
விடை சொல்லிவிட முடியாது.

மகிழ்ச்சி ஆளாளாளுக்கு 
வேறுபட்டுக்கொண்டேதான்
இருக்கும்.

ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
ஒரு செயல் இன்னொருவருக்கு மகிழ்ச்சி
தராமல் இருக்கலாம்.

பணம்தான் மகிழ்ச்சியைத் தரும்
என்றால் எல்லா பணக்காரர்களும் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமே!

நூறு கோடி வைத்திருப்பவரைப் பார்த்து
அவனுக்கு என்னப்பா....கையில் பணம்தான்.
காருதான்....சொத்தும் சுகமாக வாழ்கிறான்
என்று நினைக்கிறோம்.
ஆனால் அவரிடம் கேட்டால்
நிம்மதியே இல்லை என்கிறார்.

அதற்காக ஒரேயடியாகப் பணம் மகிழ்ச்சியைத்
தரவில்லை என்று ஒதுக்கி வைத்துவிட
முடியாது.
ஒரு பொருட்காட்சி சாலைக்குப் போகிறோம்.
கையில் பணம் வைத்திருப்பவர் தான்
விரும்பிய பொருட்களை கைநிறைய வாங்கி
மகிழ்ச்சியாக வீடு திரும்புகிறார்.
கையில் பணம் இல்லாதவர்
எதுவும் வாங்க முடியவில்லை. ஆசைப்பட்ட
உணவைக் கூட வாங்கி சாப்பிட
முடியவில்லை.
மனம் விரக்தியடைந்து வீடு திரும்புகிறார்.
இங்கே பணம் மகிழ்ச்சியைத் 
கொடுக்கிறது.

யாருக்கு?எப்போது?
பணம் மகிழ்ச்சியைத்
தருகிறது என்பதில் வேறுபாடு உண்டு.

தேவை இருப்பவனுக்கு அந்தத்
தேவையைப் பூர்த்தி செய்ய
பணம் கிடைக்கும் போது 
மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தேவைக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு
பணத்தால்  மகிழ்ச்சி இல்லை.
இதுதான் வேறுபாடு.

பண்டிகை காலங்களில் மட்டும்
இட்லி தோசை தின்ன காலத்தில்
அதைத் தின்றதைச்  சொல்லிச் சொல்லி
மகிழ்ந்திருக்கிறோம்.
இன்று இட்லி தோசை மகிழ்ச்சி தருமா
என்றால் இல்லை என்பேன்.
ஆனால் இன்றும் அது கிடைக்காதவர்கள்
இருக்கலாம். அவர்களுக்கு
அது கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

கிடைக்காமல் கிடைத்துவிட்டால் அதில்
அதிகப்படியான மகிழ்ச்சி இருக்கும்.
ஒத்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியை விரும்பாதவர்
எவரும் இலர்.

ஆண்டின் முந்நூற்று அறுபத்தைந்து
நாட்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்பதுதான் அனைவரின் விருப்பம்.
ஆனால் அது முடியாத காரியம் .

அதனால்
 மார்ச் 20 ஆம் நாளை உலக மகிழ்ச்சி 
நாளாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.

சிரிப்பு நாள்,சிந்தனை நாள் என்று
நாளுக்கு ஒரு சிறப்பைக் கொடுத்துவரும்
ஐக்கிய நாடுகள் சபை
 மகிழ்ச்சிக்கும் ஒரு நாளை அறிவித்து 
 நம்மை மகிழ்ச்சியடைய 
 வைத்துள்ளதில் நமக்கு
மகிழ்ச்சிதான்.அந்த ஒருநாள்
மகிழ்ச்சி போதுமா?

 மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்
என்று அலசி ஆய்வு செய்தால்
நம் எண்ணத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின்  
மகிழ்ச்சியைப் பற்றிய கணிப்பிற்கும்
 நிறைய வேறுபாடுகள்
உண்டு.

தனிமனித சுதந்திரமும் உடல் நலமும்
 சமூக நலனும்  நன்றாக இருக்கும் போதுதான்
 ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதாக
 உணரமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதனை நாமும்
 ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு 
 உலக மகிழ்ச்சி நாளிலும் ஐ.நா
சபை உலக நாடுகளை ஆய்வு செய்து
ஓர் அறிக்கை வெளியிடுகிறது.
அதன்படி மகிழ்ச்சியான நாடுகளின்
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.


அவர்களுடைய கண்ணோட்டத்தில்
மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசைப்
பட்டியலில் இந்தியாவுக்கு கடந்த
ஆண்டு 139 வது இடம்தான் கொடுக்க முடிந்தது.

மொத்த தர வரிசைப் பட்டியலுக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட
நாடுகளின் எண்ணிக்கை
 149.

அதில் நமக்கு 139 வது இடம்.

பின்லாந்துதான் மகிழ்ச்சியான நாடுகள்
பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து,
நெதர்லாந்து ஆகிய நாடுகள் முறையே
இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம்
இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஆண்டும் அதாவது 2022
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
இப்போதும் தொடர்ந்து
ஐந்தாவது முறையாகவும் 
பின்லாந்துதான் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தமுறை  150 நாடுகள் பட்டியலில் இடம்
பிடித்தன.
இந்தியா கடந்த ஆண்டைவிட 
சற்று முன்னேறி 136 வது
இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எத்தனையாவது
இடம் என்று அறிய ஆசையாக
உள்ளதல்லவா?
அமெரிக்காவுக்கு 16 வது இடம்தான்
கிடைத்துள்ளதாம்.
அதற்கு அடுத்த இடம் அதாவது
17 வது இடம் இங்கிலாந்து
பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான்தான் கடைசி நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் மகிழ்ச்சியான நாடு
எது என்று தரவரிசைப்படுத்துவதற்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட காரணிகள்
எவை எவை என்று கூறுகின்றனர்
என்பதைப் பார்ப்போம்.


மனநிறைவும் நேர்மறையான
எண்ணமும் இருந்தாலே போதும்.
மகிழ்ச்சியாக வாழலாம் . மகிழ்ச்சி
தனிப்பட்ட மனிதன் சம்பந்தப்பட்ட
விசயம் என்பது நமது நினைப்பாக
இருக்கும்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை
 தனிப்பட்ட மனிதன் மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல என்கிறது.

தனிமனித சுதந்திரம்,
உள்நாட்டு உற்பத்தியின் அளவு,
ஊழல் குறைவு, 
அரசு எடுக்கும் சமூக நடவடிக்கைகள்,
நல்வாழ்வு,
மக்களிடம் இருக்கும் பெருந்தன்மையான
குணம்,மக்களின் ஆயுட்காலம் ஆகியவற்றின்
 அடிப்படையில்  மகிழ்ச்சியான
 நாடுகளின் பட்டியல்
தயாரிக்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் 
சபை தெரிவித்துள்ளது.


தனிமனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு
அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும்
பாதுகாப்பு உணர்வும் இருந்தாக
வேண்டும் என்கிறது ஐக்கிய நாட்டு
 சபை.இதுவும் மறுக்க முடியாத
உண்மைதான்.

போர் சூழல் உள்ள
நாடுகளில் மக்கள் எப்படி 
மகிழ்ச்சியாக வாழ முடியும்?
என்ற கேள்வியும்  எழாமலில்லை.

ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும்போது
மனம் தானாக மகிழ்ச்சி அடைவது
இயல்பு.மக்களுக்கு அரசு
ஒரு பாதுகாப்பு உணர்வைத் தர வேண்டும்.
இது மிகமிக முக்கியமான ஒன்றாகப்
பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக ஊழல்.
ஊழலில்லா நாட்டில் நேர்மை
இருக்கும். அரசின் திட்டங்கள் எந்தவித
தங்கு தடையுமின்றி மக்களைச்
சென்றடையும்.மக்கள் மகிழ்ச்சியாக 
வாழலாம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின்
கருத்து.

இந்தக் கணிப்பும்
சரியாகத்தான் படுகிறது.

ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்.
உடல் நலம் நன்றாக இருந்தால்தான்
மனநலம் நன்றாக இருக்கும்.

இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துதான்
உலக மகிழ்ச்சி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலில்லா நாடாக இருக்க
வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்கு
உறுதி செய்யும் அரசு வேண்டும்.
அரசின் செயல்பாடுகள் தங்குதடையின்றி
மக்களைப் போய்ச் சேர வேண்டும்.
மக்கள் பணி செவ்வனே நடைபெற 
வேண்டும்.மக்கள் ஆரோக்கியமாக
வாழ வேண்டும்.

 மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு
அரசும் அரசுத்துறை அலுவலர்களும்
சமூகமும் முக்கிய காரணங்களாக
இருக்கின்றன
என்பது மறுக்க முடியாத உண்மை 
என்பது ஐக்கிய நாடுகளின் 
சபையின் கருத்து.

நம் மகிழ்ச்சி நம் கைகளில்
மட்டும் இல்லை.

அரசும் மக்களும் பொறுப்புணர்வோடு
கடமையாற்றும் போதுதான்  நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக வாழமுடியுமாம்.

இந்த வருடம் ஏதோ ஓரிரு இடம்
முன்னேறி விட்டோம்.
மகிழ்ச்சிதான்.இருந்தாலும்
136 வந்து இடம் என்பது மிகவும்
பின்தங்கிய இடம்தான்.
போகட்டும்.வரும் வருடம்
கூடுதல் மகிழ்ச்சி வராமல் 
எங்கே போய்விடும்?

நம்பிக்கையோடு  காத்திருப்போம்.
மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

உலக மகிழ்ச்சி நாள் நல்வாழ்த்துகள்!
வாழ்க மகிழ்ச்சியாக!



Comments

  1. அனைவரும் விரும்புவது மகிழ்ச்சியைத் தான். தமக்கும் ,மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts