இணைப்பு மொழி என்றால் என்ன?

இணைப்பு மொழி என்றால் என்ன?


இணைப்பு மொழி என்றால் என்ன?
என்ற கேள்வியைத் கேட்டுப் பாருங்கள்.
பலருக்குப் புரியவில்லை.

இணைப்பு என்றால் ஒரு பாலம்.
மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக
இருவருக்கு  இடையே ஒரு பாலமாக இருந்து
செயல்பட வேண்டும்.

நாம் பேசும் மொழி கேட்பவர்களுக்கும்
புரிந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அவரால் எதிர்வினையாற்ற
முடியும்.

நம்மாலும் நாம் சொல்ல வந்த கருத்தை
எதிராளிக்குப்  புரிய வைக்க முடியும்.

அப்படி இருவருக்கும் புரிந்த ஒரு மொழி
ஒன்று உண்டென்றால்
அதுதான் இணைப்புமொழியாகும்.

அதுதான்  இணைப்பு மொழியாக இருக்க
வேண்டும்.இருக்க முடியும்.
நடைமுறைக்கும் ஒத்துவருவதாகவும்
இருக்கும்.

அப்படி இல்லாமல் இருவருக்குமே 
புரியாதமொழி
எப்படி இணைப்புமொழியாக 
இருக்க முடியும்?

அவர் பேசும் மொழி நமக்குத்
தெரியாது.
நாம் பேசும் மொழி அவருக்குத் தெரியாது.
அப்படி இருக்கும்போது 
இணைப்பு மொழியாக
எந்த மொழி இருக்கும்?
சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சைகைமொழியாகத்தான்
இருக்கும்.
கைகளை ஆட்டி ...மண்டையை ஆட்டி...
கண்களை உருட்டி ...பேச வேண்டியதுதான்.
வேறு வழியே கிடையாது.

நான் சொல்வது உண்மையா?
இல்லையா?

இதுதாங்க உண்மை.

ஆங்கிலம் ஓரளவுக்கு படித்த
அனைவருக்கும் தெரியும்.
அதனால் அலுவலகங்களில்
வடநாட்டவருக்கும் தென்நாட்டாவருக்கும்
தெரிந்த ஆங்கிலம் இணைப்பு மொழியாக
இருந்து வருகிறது.

அதனால்தான் ஒன்றிய அரசு 
அலுவலங்களிலிருந்து
வரும் சுற்றறிக்கைகளை வாசித்து
நம்மால் பதிலனுப்ப முடிகிறது.
நமது கருத்தைத் தெரிவிக்க முடிகிறது.
கோரிக்கைகளை முன் வைக்க முடிகிறது.

இருவருக்கும் பொதுவான ஒரு மொழி
இணைப்பு மொழியாக இல்லாதிருந்தால்
என்ன நடக்கும்?

படித்து ....பொருள் கண்டுபிடித்து ...தவறாகப்
புரிந்து கொண்டு ...தப்புப் தப்பாக
எழுதி அனுப்பி ....
இப்படி எத்தனை சிக்கல்கள்?

 நாம் ஒன்றுசொல்ல ....அவர்கள்
வேறுமாதிரி புரிந்துகொள்ள...
அதனால் இருவருக்கும் இடையில்
சிக்கல் எழ....

இந்தச் சிக்கல்கள் எல்லாம் எழக்கூடாது
என்பதற்காகத்தான்  இணைப்பு மொழியாக
ஆங்கிலத்தை வைத்திருக்கிறோம்.

ஏதோ தெரிந்த மட்டும் பேசியோ...வாசித்தோ
தெரியவில்லை என்றால் படித்தவர்களின்
கேட்டோ ....ஏதாவது ஒரு வழியில்
ஆங்கிலத்தில் அலுவலகங்களுக்கு வரும்
சுற்றறிக்கைகளைப் புரிந்து
பதிலனுப்ப முடிகிறது.

இனி எந்தக் காலத்தில் இந்தி படித்து
எந்தக் காலத்தில் புரிந்துகொண்டு
எந்தக் காலத்தில்
பதிலளிக்க முடியும்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மகாராஷ்டிராவில்
இருக்கும் நான் தத்துக்கு பித்தக்கு என்றுதான்
இந்தியும்  மராட்டியும் பேசுகிறேன் .
எழுதுகிறேன்.

உங்களை மாதிரியா எல்லாரும் இருப்பார்கள்?
என்று எதிர்க் கேள்வி கேட்டுவிடாதீர்கள்.
பெரும்பாலானவர்களின் நிலை
என்னை மாதிரித்தான் இருக்கிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.

 
மகாராஷ்டிராவில் வந்ததும்
மராட்டி படித்தால்தான்
வேலை நிரந்தரம் ஆக்குவோம்
என்றார்கள்.
அதனால் மராட்டி படித்தோம்.
.
அப்படிப் படித்து தான் வேலை நிரந்தரம்
வாங்கினோம்.

சுற்றறிக்கை மராட்டியில் வரும்.
முழுவதும் படிக்காமலே அதாவது படித்துப்
பொருள் தெரியாமலேயே கையெழுத்துப்
போட்டு அனுப்பிய நாட்கள் உண்டு.

எங்களை மாதிரி சூழ்நிலையில் வருகிறவர்கள்
இந்தியையோ மராட்டியையோ
அல்லது எந்த மாநிலத்திற்குச் செல்கிறார்களோ
அந்த மாநில மொழியைப் படித்துக் 
கொள்ளட்டும்.
அதற்கு மறுப்பு சொல்லவில்லை.

இந்தியைப் படிப்பதில் தப்பில்லை.
தேவைப்பட்டவர்கள் தேவைப்பட்ட
காலத்தில் கற்றுக் கொள்ளட்டும்.

 நாம் உலகமயமாதல் கொள்கையைக்
கையிலெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்போது இணைப்பு மொழியாக 
இருந்து செயல்பட்டு வருவது ஆங்கிலம் 
ஒன்று மட்டும்தான்.
வேறு எந்த மொழியும் இணைப்பு மொழியாக
இருக்கமுடியாது.


தொழில் ,வர்த்தகம் ,கல்வி ,கலாச்சாரம்
எல்லாவற்றிலும் வளர்ச்சி கண்டு வருகிறோம்.
உலக நாடுகள் அனைத்திலும் இந்தியர்கள்
வேலை பார்க்க முடிகிறது என்றால்
அதற்கு காரணம் இணைப்பு மொழியான
ஆங்கிலத்தைப் படித்து வைத்திருந்ததாலேயே
இவை சாத்தியமாகிறது.

ஆங்கிலம் தெரியவில்லை என்றால்
நாம் குண்டு சட்டிக்குள்ளேயே
குதிரை ஓட்டிக்கொண்டு 
கிடக்க வேண்டியதுதான்.


இப்போது அப்படியே இந்தி பக்கம்
திரும்புங்கள்.

இந்தி மட்டுமே இணைப்பு மொழியாக இருந்தால்
 என்னென்ன கிடைக்கும் என்று
நினைத்துப் பாருங்கள்...!

பிற இந்தி பேசும் மக்களோடு
பேச முடியும். வேறென்ன செய்துவிட
முடியும்.?

இந்தி படித்தால் இந்தியா முழுவதும்
எங்கும் வேலை செய்ய
முடியுமா?

அதற்கு  உத்திரவாதம்
இல்லையே.

அவரவர் மொழி அவரவர்க்கு
உயர்வானது தான். எந்த மொழியையும்
அந்த மொழியைப் பற்றிய முழுமையான அறிவு
பெறாமல் குறைத்து மதிப்பிடுதல் தவறு.

ஆனால்  ஒரேயடியாக ஆங்கிலம்
இணைப்பு மொழியாக இருக்கக்கூடாது
என்று சொல்லும்போது தான்
நாலாப்பக்கமும் திரும்பிப் பார்த்து,
அப்படி இந்தி இணைப்புமொழியானால்
எழும் நடைமுறை சிக்கல்களைச் பற்றி
சிந்திக்க வேண்டியுள்ளது.
பேச வேண்டியுள்ளது.

அதனால் இந்தியைத் குறைவாக
மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அரசு எடுக்கும் எந்தத் திட்டமும்
மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மக்களுக்குச் சுமையாக இருந்துவிடக்கூடாது.
அனைத்து மக்களும் புரிந்து
கொள்ளும்படி இருக்க வேண்டும்.

இந்தியை விருப்பப்பட்டவர் படித்துக்
கொள்வார்கள்.

ஒரு நாட்டின் இணைப்புமொழி
அனைத்து மாநில மக்களும் புரிந்து
கொள்ளும் மொழியாகத்தான் 
இருக்க வேண்டும்.

இணைப்பு மொழி  சைகைமொழியாக
இருந்துவிடக்கூடாது.
அனைவரையும் இணைக்கிற
மொழியாக இருக்க வேண்டும்.
தகவல் பரிமாற்றத்திற்கு உதவும்
மொழியாக இருக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக 
இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்
தருவதாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட தகுதி எந்த
மொழிக்கு இருக்கிறது 
என்பதை நீங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள்.







Comments

Popular Posts