இலவு காத்த கிளி போல....

 

தமிழில் உவமைகளுக்குப் 

 பஞ்சம் இருக்காது.

 ஆனால் அவை யாவும் வெறுமனே 

பொழுதுபோகிற்காகச்

சொல்லப்பட்டவை அல்ல.

மக்கள் உள்ளங்களின் 

பழுதை நீக்கி

மனிதகுலம் பண்படுத்தப் பட வேண்டும்.

நல்வழிப்படுத்தப்பட வேண்டும்.

மக்களிடையே

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே சொல்லப்பட்டவை.

நேரடியாக ஒரு கருத்தைச்

சொல்லும்போது எளிதில்

புரிந்து கொளாள முடியாது.

சில செயல்களைப் புரிய வைக்க 

வேண்டும் என்றால்

தெரிந்த ஒரு பொருளை 

உவமையாக கூறி

புரிய வைக்க வேண்டும்.


அது இது போல 

இது அது போல

என்று தெரிந்த ஒரு பொருளை

முன்னிருத்திப் புரிய வைப்பது

வழக்கம்.

 

அவ்வாறு சொல்லப்பட்டவை தான்

பழமொழிகளும் பழக்கமொழிகளும்.

 புரிய வைப்பதற்குத்தான் 

பழமொழிகள் உவமைகளைச் சுமந்து வருவதுண்டு.

அதுவும் நம் கண்முன்னால் 

இருக்கும் ஒரு பொருளை

உவமையாகச் சொல்லும்போது

நம்மால் எளிதில்

 புரிந்து கொள்ள முடியும்.

அப்படிச் சொல்லப்பட்ட எல்லா பழமொழிக்குப் பின்னாலும்

ஒரு கதை இருக்கும்.

இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் அதை

முழுமையாக நம்புவோம்.

அப்படி இல்லை என்றால்

 ஏதோ நேரம் போகாமல்

சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று

 அலட்சியமாக கடந்து போய்விடுவோம்.

 

ஒரு காட்டில் ஒரு அழகிய பச்சைக்கிளி

இருந்தது.

இந்தப் பச்சைக்கிளி மற்ற கிளிகளை விட

சற்று மாறுபட்ட குணம் 

கொண்டது.


எதைப் பார்த்தாலும் எனக்கே

 எனக்குத்தான் என்று

பிடிவாதம் பிடிக்கும்.

அதாவது சுயநலவாதி என்று 

வைத்துக் கொள்வோம்.


ஒருநாள் ஒரு மலையடிவாரமாகப்

பறந்து சென்றது அந்தப்

பச்சைக்கிளி.

மலையைக் கடந்துசெல்லும்போது ஒரு

இலவ மரத்தைப் பார்த்தது.


மரத்தில் பிஞ்சும் காயுமாக

கொத்துக் கொத்தாக 

காய்த்துத் தொங்குவதைப்

பார்த்ததும் ஒரு பேராசை வந்து

ஒட்டிக் கொண்டது.


இந்தப் பிஞ்சும் காய்களும்

பழுத்தால் பல நாட்கள்

வயிறார உண்ணலாம்.

அங்குமிங்கும் என்று 

வயிற்றுக்காக எந்த 

அலைச்சலும் வேண்டாம்.

இவை அனைத்தும்

 எனக்கே எனக்குத்தான்

என்று முடிவு செய்து கொண்டது.

அதனால் எந்தப்

பறவையையும் இலவ மரத்துக் கிட்ட

அண்டவிடாமல் துரத்தித்துரத்திக்

கொத்தி விரட்டி 

இலவங்காய்களைப் பாதுகாத்து

வந்தது.

இப்படியாக நாட்கள் பல

கடந்தன. காய்கள் பழுப்பதாயில்லை.

ஒருநாள் மரத்திலிருந்த

காய்கள் வெடித்துப் வெள்ளை

வெள்ளையாக பஞ்சுகள் சிதறி

விழுந்தன.


ஆ....என்ன இது?


மனதிற்குள் பூத்திருந்த மகிழ்ச்சி

மத்தாப்பு ஒரு நொடியில் வெடித்துச் 

சிதறியது போன்று இருந்தது..

பழம் தின்ன காத்திருந்த

கிளிக்கு அன்று தான் 

உண்மை புரிய வந்தது.

நாம் இதுவரை காத்திருந்தது இலவம்

பழத்திற்காகவா?..

இலவம் பழம் எங்காவது பார்த்ததுண்டா?

இல்லையே....

பழுக்காத மரத்திலா இத்தனைநாள் காத்திருந்தேன்.

இந்த உண்மை இதுவரை

தெரியாமல் போயிற்றே "என்று

வருந்தியபடி சோகமாக 

மரத்தில் அமர்ந்திருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த

 நரி ஒன்று"என்ன

பச்சைக்கிளியாரே

இலவம் பழத்திற்காக காத்திருந்து

ஏமாந்து போனீரா?

இலவங்காய் எங்காவது பழுக்குமா.?

இதுகூடவா தெரியாது "

என்று கேட்டு நமட்டுச்

சிரிப்பு சிரித்தது.


பச்சைக்கிளிக்கு அவமானம்

தாங்க முடியவிலலை.


 இதுதாங்க இலவு காத்தக் கிளி போல

 என்ற பழமொழி வரக் காரணமாக 

 இருந்திருக்கலாம்..


ஒரு பொருள் நமக்கு வேண்டும் 

என்று நெடுநாளாக காத்திருப்போம்.

அது ஒருநாள் கிடைக்காமல் போய்விடும்.


காரணம் அதன் உண்மைத் 

தன்மையை ஆராயாமல்

எந்த ஒரு பொருளுக்காகவும்

காத்திருந்தால் ஒருநாள்

 ஏமாந்துதான் போக நேரிடும்.


இலவுகாத்த கிளி போல

ஏமாந்து போய்விடாதீர்கள்.

எந்த ஒரு பொருளின்மீதும் 

ஆசைப்படாவதற்கு முன்னால் இது நமக்கு

சாத்தியப்படுமா என்பதை

ஆராய்ந்து சாத்தியப்படுமானால்

மட்டும் ஆசைப்படுங்கள்.

அல்லது காத்திருந்து காத்திருந்து

காலமெல்லாம் போன பின்னர்

இலவு காத்த

 கிளி போல ஏமாந்து

வேதனைப்பட வேண்டியிருக்கும்"

என்று எச்சரிக்கை மணியடித்துச்

செல்கிறது இந்தப் பழமொழி.


நல்ல பழமொழி இல்லையா?


வரட்டா....









 


Comments

Popular Posts