கண்ணான கண்ணே



கண்ணான கண்ணே 


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்

கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்-

பெண்ணே

பேதை என்றழைக்க வைத்து பெருமிதம்

தந்தாய்!



வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய் 

வளர் பருவ குறும்புகள் செய்தாய்  

விரல்பிடித்து வீதிக்கு அழைத்தாய்- பெண்ணே

பெதும்பையாய்ப் பெருமிதம் செய்தாய்!



உணர்ந்ததை உணர்ந்தபடி உரைத்திட நினைத்தாய்

உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய்

உயர் உயரப் பறந்திட விழைத்தாய் - பெண்ணே

மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்


மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய்

மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய் 

மயங்கிட வைத்து மனமதைத் துவைத்தாய்- பெண்ணே

மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்


இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய்

இமையாய் இருந்து எம்மைக் காத்தாய்

எம்பால் அன்பால் உன்பால் ஈர்த்தாய் - பெண்ணே

அரிவையாகி அளவிலா ஆனந்தம் 

தந்தாய் 


உலக விழுமியம் உரைத்திட வந்தாய்

உன்னில் எம்மை உணர வைத்தாய்- 

உலகொடு நன்நடை பயிற்சி தந்தாய்- பெண்ணே 

தெரிவையாகி தெரியாதன தெரிந்திடச் 

செய்தாய்


போராளியாய் நின்று வீட்டாளுமை செய்தாய்

பேராண்மையில் பேருவகை கொண்டாய்

பேரறம் பேணிப் பேர்சொல்ல வைத்தாய் - பெண்ணே

பேரிளம் பெண்ணாகிப் பேரன்பு தந்தாய்


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்

கண்ணின் கருவிழி எனதானாய் -பெண்ணே

காலமெல்லாம் என் வாழ்வே நீயானாய்!



இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!


 

                                                  

 

கருத்துகள்

Popular Posts