பிழையின்றி எழுதுவோம்
பிழையின்றி எழுதுவோம்
உளமார /உளமாற இந்த இரு சொற்களும்
உச்சரிப்பில் அதிக வேறுபாடு இருக்காது. ஆனால் பொருளில் இரண்டு சொற்களும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்..
அவற்றை எந்தந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உள்ளம் என்பதுதான் உளம் என்றும்
சொல்லப்படுவதுண்டு .
அச்சொல்லோடு சேர்கின்ற ஆர, ஆற ஆகிய இரு சொற்களும் தனித்தனியாக இணையும்போது பொருள் மாறுபடும்.
ஆனால் பலர் மாறுபாடு அறியாது பயன்படுத்துவதைக் காணலாம்.
பொருள் அறிந்து வைத்திருந்தால் தவறான பொருளில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடலாம்.
ஆர்தல் என்பதற்கு நிறைதல், பொருந்துதல், ஒத்துப்போதல் போன்ற பொருள்கள் உண்டு. 'ஆறுதல்' என்றால் தணித்தல்
ஆறுதல் படுத்துதல் தேற்றுதல் என்ற
பொருளிலும் சொல்லப்படும்.
“மனம் நிறைந்து ஒன்றைச் சொல்கிறேன், மனத்தில் வேறுபாடுமின்றி முழுமையாய்ப் பொருந்திப்போய் இதைச் சொல்கிறேன்” என்ற பொருளில்
சொல்லும்போது ‘மனமாரச் சொல்கிறேன்”.
என்று சொல்ல வேண்டும்.
எழுத வேண்டும்.
மாற்று எண்ணமோ வேறுபாடோ இல்லாமல் மனம் நிறைந்த நிலையில் ஒன்றைச் சொல்வது - மனமாரச் சொல்வது என்பதாகும்.
'ஆர 'என இடையின 'ர' பயன்படுத்தி
எழுத வேண்டும்.
'மாற 'என்று வல்லின'ற' பயன் படுத்தினால் மாறுபாடுகொண்டு என்று பொருள்படும்.
மனமாற வாழ்த்துகிறேன் என்றால் மனம் மாறுபாடு கொண்டு வாழ்த்துகிறேன் என்று பொருள்படும்.
உளமாற என்று வாழ்த்துகிறேன் என்றால்
உள்ளம் மாறுபாடு கொண்டு வாழ்த்துகிறேன் என்று பொருள்படும்.
அதனால் உளமாற
மனமாற என்று வல்லின றகரம் பயன்படுத்தி எழுதக்கூடாது.
கண்கள் நிறைந்துவிடுமளவுக்கு ஒன்றைக் காண்பது ‘கண்ணாரக் காண்பது’.
என்பதாகும்.
முழுமையாய்க் கேட்டால் அது ‘காதாரக் கேட்பது’ என்பதாகும்.
வேறு சொற்களுக்கு இடமே இல்லாதபடி வாய் நிறைந்து கூறுவதே ‘வாயாரச் சொல்வது’.
வாயார வாழ்த்துவது என
இடையின ' ர'கரம் பயன்படுத்தி எழுத வேண்டும்.
நெஞ்சத்தோடு அணைப்பதனை ‘நெஞ்சாரத் தழுவினான்’ என்று
எழுத வேண்டும்.
"நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்".
மனமார, உளமார, வாயார, கண்ணார, நெஞ்சார என்பனவற்றை
கையாளுமிடத்தில் இடையின ரகரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் எழுதி வைத்துக் கொண்டால் மாறுபாடான
பொருள்படும்படி வல்லின றகரம் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடலாம்.
உளமார ✓
உளமாற ×
கருத்துகள்
கருத்துரையிடுக