கொன்றை மலர் சொன்ன பொய்

சங்க இலக்கியப்  பாடல்களில்  கொன்றை
மலருக்கு என்று  தனி இடம் உண்டு.
காட்டில் கொன்றை மலர்கள் பூத்துக்
குலுங்கும் அழகிய காட்சியைத் தம்
கவிதைகளில் கொண்டு வந்து காட்டி
நம்மையும் கொன்றை மலர்களைத்
திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமை பல
புலவர்களுக்கு உண்டு.

தத்தமது கற்பனைக்கு ஏற்ப தாம்
சொல்ல வந்த கருத்தை தமது
கதாப்பாத்திரங்கள் மூலமாக
அழகுபடக் கூறி நிற்பர்.
 அந்த வகையில் ஓதலாந்தையார் என்ற
 புலவர் கொன்றை மலரைப் பற்றிப்
 பாடிய பாடல் இப்படியும் பாடமுடியுமா?
 என வியக்க வைக்கிறது.

கார்காலத்தை வரவேற்பதற்காக 
கொன்றை மரங்கள் பூக்களைத் தலையில்
சுமந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சிதான்.
மறுப்பதற்கில்லை.

ஆனால் அந்தப் பூக்களின் புன்சிரிப்புக்குள் 
ஒரு பொய்யல்லவா
மறைந்து கிடந்திருக்கிறது!

கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள்.

அந்தப் பொய்யைக் கொன்றை மலருக்குள்
பொதிந்து வந்து தந்த பெருமை 
ஓதலாந்தையாருக்கு உண்டு.

கொன்றை மலர்கள் பூத்துவிட்டாலே
கார்காலம் வந்துவிட்டது
என்று நினைத்துவிட வேண்டியதுதான்.

தோழி ஒருத்தி தன் தலைவியோடு 
காட்டிற்குச் செல்கிறாள்.
காடெங்கும் கொன்றை
மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்துத்
தொங்குகின்றன.
வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து
தேனுண்ட மயக்கத்தில்
 ரீங்காரமிட்டு களிப்பேருவகை
கொண்டு சுற்றித் திரிகின்றன.
இந்தக் காட்சி பெண்கள் 
மலர்களோடு பொன்னிற அணிகலன்களையும்
அணிவித்து நிற்கும் கவின்மிகு காட்சியாக
இருக்கிறது.
காட்சி பார்ப்பதற்கு அழகானதுதான்.

ஆனால் என் தலைவி தலைவன் வருகைக்காகக்
காத்திருக்கிறாளே!
இது கார்காலக் காட்சி ஆயிற்றே!
கார்காலத்தில் வந்துவிடுவேன்
என்று சொல்லிப் போன தலைவன்
இன்னும் வரவில்லையே!

தலைவி் கார்காலம்
வந்துவிட்டது என்பதை அறிந்தால்
ஆற்றாமையால் துவண்டு போவாளே !
என் தலைவியும் என்னைப்போலவே
கார்காலம் வந்துவிட்டது என்பதை
உணர்ந்திருப்பாளோ ?
தலைவிக்குத் தெரிந்துவிடக் கூடாதே
என மனதிற்குள்ளேயே
வருந்துகிறாள் தோழி.

தோழியின் உள்ளக் கிடக்கையை அறிந்து
கொண்டாள் தலைவி.

வருந்திய தோழிக்கு என்ன பதில் சொல்லி 
இருப்பாள் தலைவி என்று
நினைக்கிறீர்கள்.
சொல்கிறாள் நீங்களே கேளுங்கள்.

வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் ;அவர் பொய் வழங்கலரே !

குறுந்தொகை பாடல் எண் :21

பொருள் :

ததைந்த -மலர்ந்த
இணர் - கொத்து
இடை இடுபு -தழைகளிடையே இட்டு
கதுப்பு - கூந்தல்
தேறேன் - ஒத்துக் கொள்ள மாட்டேன்

கொன்றை மலர்கள் பூத்துக் கிடக்கின்றன.
அதனால் கார்காலம் வந்துவிட்டது
என்று நினைக்கிறாய். 
அப்படி நீ நினைப்பதில் தவறேதும் இல்லை. 

 கார்காலம் வந்ததென்று கொன்றை
பொய் சொல்கிறது .

அப்படி என்ன பொய் சொல்லி
விட்டது கொன்றை மரம்  என்கிறாயா?

கார்காலத்தில் வருவேன் என்று 
சொல்லிச் சென்ற என் தலைவன் 
இன்று வரை வரவில்லை.

என் தலைவன் வரவில்லை என்றால்
கார்காலம் வரவில்லை 
என்றுதானே அர்த்தம்.

கார்காலத்தில் பூக்கும் 
கொன்றை மலர்கள் பூத்துக்
குலுங்கிக் கிடப்பதால் மட்டும்
கார்காலம் வந்தது என்று எப்படி
சொல்லிவிட முடியும்?

எனக்குக்  கொன்றை மலர் 
கார்காலத்தில் பூக்கும் 
என்பதிலேயே இப்போது ஒரு சந்தேகம்
வந்துவிட்டது.

நம்பமாட்டேன்....நான் நம்பமாட்டேன்.
கொன்றை மரம் தன் பூக்களைப்
பரப்பி கார்காலம் வந்துவிட்டது 
என்று சொல்லி நிற்பதை நான்
ஒருபோதும் நம்ப மாட்டேன்.

அவர் பொய் வழங்கலரே
 
என் தலைவன் ஒருபோதும் பொய்
சொல்ல மாட்டான்...அவன் வரவில்லை 
என்றால் இது கார்காலமாக 
இருக்க முடியாது.

இந்தக் கொன்றை மரங்கள்தான்
தவறான காலத்தில் 
பூத்துக் கிடக்கின்றன.

இந்தக் காடு முழுவதும் கார்காலம்
வந்துவிட்டது என்று கூறினாலும்
நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

கானம் கார் எனக்கூறினும் யானோ
தேறேன் தோழி!

தலைவன்மீது பழி சுமத்த
மனமில்லாது
கொன்றை மீது பழி சுமத்தி
நிற்கிறாள்  தலைவி.

தலைவன்மீது எவ்வளவு அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள்
பாருங்கள்.!

கவிதைக்கு மட்டுமா பொய்யழகு?
கொன்றை மலரும் அல்லவா இங்கு
பொய்யால் அழகு பெற்று நிற்கிறது!







Comments

  1. இன்றும் அநேக பெண்கள் தம் தலைவன் மீது குற்றம் கூறுவதை விரும்பார்.அதை குறுந்தொகை பாடல் மூலம் பதிவிட்டது மிகச் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts