கனவுக்காரி
கனவுக்காரி
நார்க்கட்டிலில்
நாடி வானம் பார்க்க
மூடி கண்கள் இருக்க
மெல்ல தொட்டதொரு விரல்
விழிகள் திறக்க மறுக்க
கைகள் மட்டும் சிலிர்க்க
கேள்வி கேட்க
மனம் நினைக்க
நா எழும்ப மறுக்க
செவிமடலுக்குக்குள்
ஒரு சலசலப்பு
சிற்றெறும்பு கடித்ததொரு
சிலுசிலுப்பு
செவி மடலைத் தழுவி
செவி தீட்டி
கவனம் திரட்டி
குரல் அடையாள
வகுப்பு நடத்தி
குழம்பிய மனதோடு
காத்திருந்தேன்
வெற்றுக் காற்று
வெப்பமொடு வந்து முட்ட
கண் முன் ஏதோ
அசைவாடும் உணர்வு கிட்ட
யாரென்று குரல் அதட்ட
முட்ட வந்தவள்
இதழ் குவிக்க
முத்துச் சிதற
வேசக்காரியோ
இவள் மோசக்காரியோ
என்று மயங்கிய வேளையில்
தமிழ் மகள் நான்
வேசக்காரியுமல்ல
மோசக்காரியுமல்ல
யாரென்று நீர் உரைத்தால்
சாகா மருந்தொன்று தருவேன்
வேகா வெயிலில்
சுட்டப் பழம் எடுத்து வந்தேன்
சுவைத்திட விருப்பமோ
எனக் கரம் நீட்ட
சாகா மருந்து தர இவள்
சஞ்சீவி பர்வதத்துக்
காரிகையா?
முட்டுக் கொடுத்து நடக்கும்
இவள் மூதுரை
தந்த முதுமகளோ?
மனம் ஆறேழு
கேள்வி கேட்டு
அலைக்கழிக்க
விடுகதை அவிழ்ப்பில்
சிந்தை சிதற
வானம் வெள்ளியை
அள்ளித்தூவி
மெல்ல கண் சிமிட்ட
விடியல் வந்துவிடுமோ?
கனவில் வந்த தாரகை
காணாமல் போய்விடுவாளோ?
அச்சத்தில் அடியெடுத்து
அடுத்த கேள்விக்
கணை தொடுக்க
நான் முனைய
அச்சமில்லா குலமகள்
மிச்சமில்லாமல் முழு வசனம்
பேசி நின்றாள்
கொன்றை மரத்தை
வேந்தனென்று சொல்லி
குறுகுறுவெனப்
பார்த்திருந்தாள்
"பேதையென்று
உனை நினைத்தேன்
பேச்சில் புலமை
தெரிகிறது யாரென்று
நானறியேன்
புலமை நிற்கும் இடத்தில்
பதுமை நிற்கிறது
பணிவும் தெரிகிறது
மூதுரையின் முழுப் பொலிவும்
மிளிர்கிறது
ஞானக்குறளாய் வாய்மொழி
கேட்கிறது
ஆத்தி....யாரென்று
தெரியலியே" என்றேன்
"ஆத்திசூடி வந்தேன்
நாலு கோடி வாங்கியும்
நா கூழுக்கு அலைகிறது
நல்வழி சொன்ன எனக்கு
அவ்வழி தெரியவில்லை
அதியனொடு
எனக்குண்டு அதிநெருக்கம்
ஆற்றுப்படுத்துவாரின்றி
விழி பிதுங்கி
நிற்கிறேன்" என்று
சிற்றுரை முடித்து
கச்சிதமாய்க்
கண் சிமிட்டி நின்றாள்
இத்தனையும் கேட்ட பின்னர்
யார் நீ என்று
கேட்கத் தோன்றவில்லை
அசதிக்கோவை அறியாது
போனதால்
நல்வழி நாற்பது
தந்த உமக்கு
எவ்வழி உரைப்பதென்றே
யானறியேன்
நெல்லிக்கனி உண்டோ
எனக்கென்றே கரம் நீட்டி
பணிந்து நின்றேன்
என் கவி யாவும்
நெல்லிக்கனி தருசாகா
வரம் என்று கைகளில்
ஏடொன்று தந்து
மறைந்து போனாள்
அந்தக் கனவுக்காரி !
கவிதை மிகச் சிறப்பு.வாழ்த்துகள்.
ReplyDelete