ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவது உண்மையா?

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவான் 


ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது உண்மையா?

உண்மைதாங்க...ஐந்து பெண் பிள்ளைகளைப்

பெற்றால் அரசன் என்ன? யாராக இருந்தாலும்

ஆண்டிதான்.

தங்கம் என்ன வாங்கும்படியாகவா இருக்கிறது?

என்ற உங்கள் புலம்பல் என் காதுகளில்

விழுகிறது.

ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம்

செய்து வைத்து, சீர் செனத்தி என்று

ஒவ்வொவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து

செய்து முடித்து எழும்பும்முன் கூன் குறுக்கு

எல்லாம் ஒடிந்தே போய்விடும்.

அரசனாலேயே இதனை எளிதாகச் செய்துவிட

முடியாது. சாதாரண எளிய மக்களால்

எப்படிச் செய்துவிட முடியும் ? 


கையில் இருக்கும் ஊறுனது பாருனது

எல்லாம் கொடுத்துவிட்டு

ஓட்டாண்டியாகப் போக வேண்டியதுதான்.

இப்படி எத்தனை குடும்பங்களைப்

பார்த்திருப்போம். அதனால்தான் ஐந்து

பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற

பழமொழி சொல்லப்பட்டிருக்கும்.

இதுதானே உங்கள் நினைவில்

ஓடிக்கொண்டிருக்கும்.

உங்கள் நினைவில் என்ன என் நினைவிலும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்தப் பழமொழிக்கான பொருள்

நாம் நினைப்பதுபோல் ஐந்து பெண்

பிள்ளைகளைப் பெற்றால் ஆண்டியாகிவிடுவோம்

என்பதாகத்தான் இருக்குமோ? 

சற்றே சிந்திக்க வேண்டிய பழமொழிதான்.


அப்படிச் சொல்லி இருந்தால் அது

பெண்கள் குலத்திற்கே இழிவு அல்லவா!

பெண்பிள்ளைகள் பெற்றோருக்குத் தொல்லை

 கொடுக்கப் பிறந்தவர்கள் என்பது

 போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிடுமே!

 

எதார்த்தநிலை அதுதானே 

என்று சொல்லாமலும் இருக்க முடியவில்லை .

ஆனால் இன்று ஆண் - பெண் என்ற

வேறுபாடு இல்லாது உழைக்கும் நிலைக்கு

பெண்களும் முன்னேறி வந்துவிட்டனர்.


இந்தக் காலத்தில் போய் பெண் பிள்ளைகளைப்

பெற்றவன் ஆண்டி என்றால் சரியாக

இருக்காது. அதனால் ஐந்து பெற்றால் என்பது

பெண்பிள்ளைகளைக் குறிப்பதாக

இருக்காது.இருக்கவும் கூடாது.


இந்த ஐந்து பெற்றால் என்பதற்கு வேறு

பொருள் இருக்கும். இருக்க வேண்டும்...


அப்படியானால் இந்தப் பழமொழிக்கான

உண்மையான பொருள்தான் என்ன?

எத்தனை நாட்கள் இந்தப் பழமொழியைக்

கேட்டிருக்கிறோம். 

தவறான பொருளிலேயே பயன்படுத்தியும்

வந்திருக்கிறோம்.இப்போதுபோய்

நீங்கள் நினைப்பது போலல்ல.

இந்தப் பழமொழிக்கான பொருள் வேறு 

என்றால் ஏற்போமா? 

மனம்தான் ஒத்துக்கொள்ளுமா?


நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்

பொருள் நீங்கள் நினைப்பது போல

இல்லை என்பதுதான் உண்மை.


இந்தப் பழமொழிக்கான உண்மையான பொருள்

கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குணநலன்கள்

கொண்டோர் குடும்ப உறுப்பினராக

வாய்க்கப்பெற்றிருந்தால் அந்தக் குடும்பம்

தலை நிமிர வழியே கிடையாது என்பதுதானாம்.

இந்த ஐந்து குணங்கள் இருந்தால் வறுமை வாசலருகே வந்து நின்று

பல்லைக்காட்டிச் சிரித்துக் கொண்டிருக்குமாம்.

எந்தெந்த குணங்கள் ?

யார்... யார் ... அவர்கள் 

அறிந்துகொள்ள ஆசையா? 

வாருங்கள். தெரிந்துகொள்வோம்.


வீட்டுத் தலைவியில் இருந்தே

தொடங்குவோம்.

1 ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் குடும்பத்தலைவி:

 குடும்பத்தின் பொருளாதாரம்

தெரியாமல் ஆடம்பரமாக குடும்பத்தை நடத்தி

வீட்டை வறுமையில் கொண்டுவிடும் மனைவி

ஒருவனுக்கு அமைந்துவிட்டால்....

அவன் ஆண்டியாவது உறுதி.


வரவு எட்டணா...செலவு பத்தணா

என்று வரவுக்கு அதிகமாக செலவு

 செய்பவளாக  குடும்பத் தலைவி இருந்தால் 

கடைசியில் குடும்பம் கடனில் மூழ்கி, கதிகலங்கி

நிம்மதி இழந்து 

வாழ வேண்டியிருக்கும்.

ஆடம்பர நாட்டம் கொண்ட மனைவி  அமைந்துவிட்டால்...

தேட்டம் வீட்டில் தங்காமல் ஓட்டம்

பிடித்துவிடும்.

பிறகு குடும்பம் எப்படி தலை நிமிர்ந்து

வாழ முடியும்?


2. பொறுப்பில்லாத தந்தை:

இரண்டாவதாக குடும்பப் பொறுப்பில்லாமல்

திரியும் தந்தை அமைந்து விட்டால்...

குடும்பம் ஆண்டியாவது உறுதி.

தந்தை என்றால் குடும்பப் பொறுப்பு 

அத்தனையையும் கையில் எடுத்து

நடத்துபவராக இருக்க வேண்டும்.

தந்தை குடும்பப் பொறுப்பை உணராது

தான்தோன்றித் தனமாகத் திரிந்தால்

குடும்பம் எப்படி தலைநிமிர்ந்து வாழும்?

பிள்ளைகள் வாழவழி தெரியாது திணறிப் போய்விடுவர்.. எங்கே செல்ல வேண்டும்  எப்படி நடக்க வேண்டும் என்ற வழிகாட்டி இல்லாது தடுமாறிப் போவர்.

பாதை வகுத்துக் கொடுக்கும்  தந்தை சரியில்லை என்றால் குடும்பம் எதை நோக்கிச் செல்லும்?

3. கணவன் சொல் கேளாத மனைவி

மூன்றாவதாக கணவன் சொல் கேளாத

அடங்காப்பிடாரி மனைவியாக வாய்த்துவிட்டால்......

அந்தக் குடும்பம் சின்னாபின்னப்பட்டுப் போகும்.

கணவன் ஒன்று சொல்ல

 மனைவி நான்கு பேச

நீ என்ன சொல்ல?

 நான் என்ன கேட்க

என்று ஏட்டிக்குப் போட்டியாக குடும்பம்

நடத்தும் மனைவி அமைந்துவிட்டால்

குடும்பம் எப்படி உருப்படும்.

குடும்பத்தில் எப்படி நிம்மதி

இருக்கும்?

4. கூடப் பிறந்தவர்களுக்குத் துரோகம்
செய்யும் 
உடன்பிறப்புகள்:

நான்காவதாக உடன்பிறந்தவர்களை ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் உடன் பிறப்புகள்

அமைந்துவிட்டால்....

உடன்பிறப்புகள் நம்பிக்கைத் துரோகம்

செய்பவர்களாக ,அன்பில்லாதவர்களாக

வாய்த்துவிட்டால் ....

அது ஒரு சாபமாகவே  கருதப்படும்.

அப்படிப்பட்ட குடும்பம்

பேர் சொல்லும்படி வாழமுடியாது.

தான் ...தனது என்ற சுயநலம்

உடன்பிறப்புகளிடம் மிகுந்திருந்தால்

உறவுகளுக்குள் நெருக்கம் இருக்காது.

உறவுகளுக்குள் ஒரு போலித்தனம் வந்து

ஒட்டிக் கொள்ளும். சுயநலத்திற்காக

உடன் பிறப்புகளுக்குத் துரோகம் செய்யவும் அஞ்ச

மாட்டார்கள்.

அப்படிப்பட்ட குடும்பமானது தனித்தனியாகச் சிதறுண்டு

சிதறு தேங்காய்போல் சிதறிப் போகும் .


5. பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகள்:

ஐந்தாவதாக பெரியவர்களை மதிக்காத,

பெற்றோர் சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் இருந்தால்...


பெரியவர்களை மதித்து அவர்கள் 

சொற்படி நடக்கும் பண்பு பிள்ளைகளிடம்

இல்லாது போனால்....

தன் மனம்போன போக்கில் ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் பிள்ளைகளால் குடும்பத்திற்கு நற்பெயர் ஏற்படாது.

குடும்பம் பெயர் சொல்ல பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் .


ஆடம்பரப் பிரியையான 

குடும்பத் தலைவி

குடும்பப் பொறுப்பில்லாத அப்பா

ஏறுக்குமாறாகப் பேசும் மனைவி

கூடப்பிறந்தவர்களுக்குத் துரோகம் செய்யும் உடன் பிறப்புகள் 

பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகள்

இந்த ஐவரும்  அரசாட்சி செய்யும்

வீடு ஆண்டியாகிப் போகும்.

அரசனாக இருந்தால்கூட ஆண்டியாவது

உறுதி. இதுதான் இந்தப் பழமொழிக்கான

பொருளாக இருக்க வேண்டும் .

உண்மைதான். சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது புரிகிறது .

ஐந்து பெற்றால்  அரசனும் ஆண்டியாவான்.

உண்மை.உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.



 

Comments