பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
செ.. முத்தையா MA.B.Ed,
ஆசிரியர்,
நவாப் டேங்க் தமிழ்ப்பள்ளி,
மும்பை.
பணி ஓய்வு நாள்: 01. 04. 2023
செந்தமிழ்ச் செல்வர் நிறை கூடங்குளம் வனப்பு
செவ்வியர் செல்வநாயகம் பாக்கியம் தாலசைப்பு
செவியில் முத்தையா நாமமோதி வளர்த்த வளர்ப்பு
செந்தமிழ் உரமேற்றி மலர்ந்து நிற்பது பேருவப்பு!
அல்லியன்ன ரேணுகாவோடு கொண்டதோர் இணைப்பு
மல்லியன்ன மலர்ச்சிதரு பிள்ளைகளால் பூரிப்பு
நல்லியன்ன இல்லாள் வாழ்க்கையின் சிறப்பு
வல்லியாள் வனைந்ததால் வந்தது முதலிருப்பு!
முதலடி ஷஹாஜிநகர்ப் பள்ளியில் கிடைத்த வரவேற்பு
ஈரடி சீத்தாகேம்ப் பள்ளியில் தொடர்த் தடம்பதிப்பு
மூவடி நவாப்டேங்க் பள்ளி நிகழ்வெல்லாம் முத்தாய்ப்பு
நாலடி நாடறிய கிடைத்ததொரு நல்வாய்ப்பு!
கலைகளின் நினைப்பு அய்யாவின் உயிர்த்துடிப்பு
கலைக்கூடமாய்க் கல்விக்கூடத்தை மாற்ற காட்டினார் முனைப்பு
தலையாயக் கற்பித்தலில் உண்டு என்றும் அர்ப்பணிப்பு
மலையாய்ப் பரிசுகள் குவித்தது இவரின் பேருழைப்பு!
நாலேழு ஆண்டு நற்பணிக்கு மகுடம் பதிப்பு
நாளேடு புகழ நல்லாசிரியர் விருது முதற்சிறப்பு
ஏடேடெங்கும் படைப்பாளியின் கவி அணிவகுப்பு
ஏடாக வரலாற்றில் பேரெழுதிச் செல்லும் அரியவாய்ப்பு!
ஓய்வறியா உழைப்பால் வந்திடும் களைப்பு
ஓதிவைத்தவர் எவரோ பணிநிறைவு வெறும்விடுப்பு
ஓயா உழைப்புக்கு ஓய்வளித்த தமிழ்ப்பள்ளிகளுக்குப் பேரிழப்பு
ஓயாது தமிழ்ப்பணியாற்றிடுக அதுதான் தங்களின் தனிச்சிறப்பு
குறையில்லாக் கற்பித்தலால் கிடைத்த இச்சிறப்பு
நிறைவாகத் தொடர்ந்திட வேண்டுமென்பது எம்விருப்பு
பறையிசை தந்த பாவலனின் பணி நிறைவுநாள் பாராட்டு
மறையாக என்றென்றும் நிலைத்திருக்கும் வரலாற்றுப்பதிவு!
நல்வாழ்த்து உரைப்பு நல்லவர் பொறுப்பு
நட்பின் பிரிவு நவில இயலாக் கனப்பு
நாளும் நின் நினைப்பு நவிலும் நற்படிப்பு
நற்கரம் குவிப்பு சிறப்பமை நிறைவுநாள் மகிழ்வு!
- செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment