கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 


பேரும் புகழுமாய் வாழ வேண்டும்.
சீரும் சிறப்பும் பெற வேண்டும்.
பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும்.
பதவி வந்து அணி செய்ய வேண்டும்.
இவைதான் அனைவரின் ஆசையாக
இருக்கும்.


இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

"ஏழையையும் நல்ல
பணக்காரன் ஆக்கும் படிப்பு"
என்றார் பாரதி தாசன்.
பணக்காரன் ஆக வேண்டுமா?
படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் .

பணக்காரன்  என்ற ஒன்றை மட்டுமா
தரும் கல்வி?

சீரும் சிறப்பும்  தருவதும்
கல்வி இல்லையா?


பணக்காரன் உள்ளூர்விட்டு 
வெளியில் சென்றுவிட்டால்...
யாருக்குத் தெரியும்?
நாலுபேருக்குத் தெரிய வேண்டும்.
நல்லவர் மதிக்க வேண்டும்.
என்று சொன்னால் கல்வி வேண்டும்.
கல்வி இருந்தால் ...
எங்கே சென்றாலும் மதிப்பு கிடைக்கும்.

பணம் இருந்தால் மதிப்பு இல்லையா?

இல்லை.

நிலபுலன் ஏராளம் இருந்தாலும்?

ஆமாம்...அப்படியானால் மன்னனுக்குமா?

ஆமாம்...மன்னனாக இருந்தாலும்
 இதேநிலைதான்.

உள்ளூரில் மன்னனை மதிக்கலாம்.
ஆனால் அவன் நாட்டைவிட்டு வெளியேற
சென்றுவிட்டால்....
அவன் மன்னனுக்கு இருந்தாலும்
மதிப்பு இல்லை.
மன்னனுக்கே மதிப்பு இல்லை என்றால்...
வேறு யாருக்குத்தான் மதிப்பு?

கேட்டுவிட வேண்டியதுதான்.
யாரைக் கூப்பிடுவது?

ஔவையைவிட்டால் வேறு யார்
தெரியும்?

இப்படிப்பட்ட நமது ஐயங்களோடு
கையைப் பிசைந்து நிற்கின்றேன்.

அதோ ஔவையே வந்துவிட்டார்.
அவரிடமே கேட்போமா.....

"என்ன நெடிய சிந்தனை?"

"அப்படி ஒன்றுமில்லை.
ஒரு சின்ன ஐயப்பாடு."

"அப்படி என்ன ஐயப்பாடு?

"ஔவையே.....மன்னன் கற்றவர் இவர்களில்
யார் சிறந்தவர்?"

"இதிலென்ன ஐயம்?
கற்றவர்கள்தான் சிறப்பானவர்கள்."

"அதெப்படி? கற்றவரும் கல்லாதவரும்
மன்னரின் கீழ்தானே....
இப்படியிருக்க கற்றவர் தான் சிறந்தவர் என்று
எதை வைத்து இப்படி 
நீங்கள் முடிவு செய்தீர்கள்?"


நாட்டிற்குத் தலைவன் மன்னன்.
முதன்மையானவர்.
மதிப்பிற்குரியவவர்.
சிறந்தவர்.
மறுப்பதற்கில்லை.
ஆனால் வெளியில்....
மன்னனுக்கு மதிப்பு இருக்காது.

ஆனால் கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு....மதிப்பு....

அரசனையும் கற்றவரும்
ஒப்பிட்டுப் பார்த்தால் கற்றவரே மேலானவர்.
சிறப்புக்குரியவர்.


மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-
மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு"
   மூதுரை : பாடல் 26

 
என்ற பாடலைப் பாடிவிட்டு
அவர் பாட்டுக்குக் கடந்து சென்று
விட்டார்.
நான் இன்னும் அங்கேயே நின்று
கொண்டிருக்கிறேன் கையில் பாடலோடு!


மன்னனுக்கு தன் தேசம்
அல்லாது சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற 
இடமெல்லாம் சிறப்பு.

Comments

Popular Posts