தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்

"இமிழ் கடல் சூழ் உலகெங்கும்
போய் வாழ்ந்தாலும்
எந்தமிழர் தமிழ் மொழியால்
இணைந்து கொள்க"
என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும்
மொழியால் ஒன்றுபடுவீராக
என்பது பாவலரேறு அவர்களின்
வேண்டுகோள்.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் 
இல்லா நாடுகளே இல்லை என்னும் 
அளவுக்கு உலகெங்கும் உள்ள
எல்லா நாடுகளிலும் தமிழர்கள் 
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வாழ்வைத்தேடி ...
வாழ்வாதாரத்தைத் தேடி..
உலகெங்கும் பணத்திற்காக...
பதவிக்காக ...
குடியமர்ந்து விட்டோம்.
பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது
என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இருக்கவும் முடியாது.
.
வீட்டை மறந்து
நாட்டைத் துறந்து 
உறவுகளை விட்டுவிட்டு
அந்நிய தேசத்தில்
வந்து குடியமர்ந்து விட்டோம்.
அழகான அந்நியமொழியோடு
நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம்.அவர்களோடு நம் பயணம் இனிமையாகத்தான்
போய்க்கொண்டிருக்கிறது.
இருப்பினும் எங்கோ ஒரு நெருடல்.
எதையோ தொலைத்த ஒரு தேடல். 
எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற
ஒரு வெறுமை.

என்னவோ வேண்டும் என்ற ஓர்
ஓட்டம்.நாட்டம்.இவையெல்லாம்
மனதின் ஓர் ஓரத்தில்
அமர்ந்துகொண்டு அப்பப்போ எட்டிப்
பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட
வைக்கிறது.
விரக்தியில் மனம் வெம்புகிறது.

எனக்கு மட்டும் தான் இப்படியா என்று
கேள்வி கேட்டுப் பார்க்கிறேன்.
பலருடைய பதில் எனது பதிலோடு
ஒத்துப் போகிறது.
நம்மில் பலருக்கு இந்த நிலைதான்?
சற்று ஆறுதல்.


சரி....அதற்காக என்ன செய்வது?
ஊரை நோக்கி ஓடவா முடியும்?

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.
வேண்டுமென்று வரவில்லை.
வேண்டியதைப் பெற வேண்டும் என்ற
ஆசையில் வந்தோம்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த
நாம் தாய்மொழியை மட்டும் 
விட்டுவிடவில்லை  என்பதை அங்கங்கே காணப்படும்
தமிழ்ச் சங்கங்கள் நமக்கு 
நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன.

தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர்
என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால்
தமிழ்க் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும்.
திரும்பிப் பார்க்கிறோம்.
அனிச்சை செயலாகவே உதடுகள்
விரிந்து புன்னகை புரிகின்றன.
காரணம் என்ன ? 

அவருக்கும் நமக்கும் என்ன உறவு?
முன் பின் பார்த்திருக்கிறோமா?
இல்லையே....பின்னர் ஏன் இந்த சிலிர்ப்பும் சிரிப்பும் மகிழ்ச்சியும்
உணர்ச்சிப் பரிமாற்றமும்?


நீங்கள் தமிழா
நானும் தமிழ்தாங்க....என்ற
ஓர் அறிமுகத்தை ஏற்படுத்திக்
கொண்டு அவரோடு பேச விரும்புகிறோமே
இவை எல்லாம் எதனால்? 

அத்தோடு விட்டுவிடுவோமா?
அடுத்து எந்த ஊரு? என்று
கேட்டு அவரோடு மேலும் ஒரு தொடர்பை
ஏற்படுத்திக் கொள்ள முனைகிறோமே
அந்த ஆர்வத்தைத் தூண்டியது எது?

முன்பின் தெரியாதவரிடம் வலியச்சென்று
பேச வைத்து ஒரு நட்பை ஏற்படுத்தச் செய்தது எது?

நமது தாய்மொழிதாங்க.
அந்நிய தேசத்தில் இருப்பவர்களுக்கு
தாய்மொழியைக் கேட்பது தாயின்
குரலைக் கேட்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும்.

தாய் என்றால் ஏதோ ஒரு உணர்வுப்
பூர்வமான அன்பு ஏற்பட்டு அந்த அன்பில்
அப்படியே கட்டுண்டு கிடப்போம்.
தாய்க்கு அடுத்து நம்மைக் கட்டிப்போடும்
திறன் தாய் மொழிக்கு மட்டுமே உண்டு.
அந்நிய மண்ணில் வாழும்போது தான்
தாயின் அருமையும் தெரியும்.
தாய்மொழியின் பெருமையும் புரியும்.

தாய் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 
எதை எதையெல்லாமோ
இழந்து நிற்கிறோம் என்று புலம்பினாலும்
அதில் முதன்மையானது 
தாய்மொழி
என்பது மறுக்க முடியாத உண்மை.

நாம் மொழியை உயிராக நேசிப்பவர்கள்.
பெயரில் கூட நம் மொழியை 
வைத்திருப்பவர்கள் நாம்
மட்டும் தானே!
தமிழ்ச் செல்வன்,தமிழ்ச் செல்வி ,தமிழரசன்,
தமிமிழரசி என்று வீட்டுக்கொரு தமிழ்ப்பெயர் வைத்துக் கொண்டிருக்கும்.
நாம் பெயரை மட்டும் சுமந்து
மொழியை விட்டுவிட்டு
உணர்வைத் தொலைத்த மனநிலையில்
இருந்து கொண்டிருக்கிறோம்.

எங்கேயாவது மராட்டிச்சி,
இந்திச்சி,சிந்திச்சி என்று பெயர்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நாம் தான் தமிழச்சி,தமிழன்
என்ற பெயரோடு அனைவரையும் 
திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி ஓர் உறவு தமிழுக்கும்
நமக்கும் உண்டு.
அந்தத் தணியாத உறவு எந்த நாட்டிற்குச்
சென்றாலும் தணிந்து போவதில்லை.


காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு
என்பதுபோல அவரவர்க்கு அவரவர்
மொழி உயர்ந்தது. சிறப்பானது என்பதை
நாமும் ஒத்துக் கொண்டுதான்
ஆக வேண்டும்.

இந்தியாவின் பெருமையே
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான்.
பன்மொழி பேசும் மக்கள் இருந்தாலும்
நாம் அனைவரும் இந்தியர் என்னும்
ஒற்றைச் சொல்லைச் சொல்வதில்
பெருமிதம் கொள்கிறோம். பெருமகிழ்ச்சி
அடைகிறோம். மாற்றுக்கருத்து இல்லை
இருக்கவும் கூடாது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்குக்
காரணம் நிர்வாகம் சீராக நடைபெற வேண்டும்.
அந்தந்த மொழி பேசும் மக்களின்
கலை, கலாச்சாரம் பேணப்பட வேண்டும்.
இன்னபிற முக்கிய காரணங்களுக்காகத்தான்
இருக்க வேண்டும்.
முன்பு கன்னியாக்குமரி மாவட்டம்
கேரளாவோடு இருந்தது.
அது தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக
வாழும் மாவட்டமாக இருந்ததால் 
மார்சல் நேசமணி
போன்றோரின் போராட்டங்களாலும்
முயற்சியாலும் தமிழ் நாட்டோடு
சேர்க்கப்பட்டதற்குக் காரணம்
மொழியால் இணைய வேண்டும் என்ற
ஒற்றைக் காரணமாகவே இருக்க
முடியும்.

மொழி ஒருவருக்கொருவர் கருத்துப்
பரிமாற்றத்திற்காக மட்டும் பயன்படுத்தப்
படுவதல்ல. 
ஒரே மொழி பேசும் மக்களை
உணர்வுப்பூர்வமாக கட்டிப் போட்டு
வைக்கும் வல்லமை மொழிக்கு உண்டு.
கலாச்சாரம் மொழியோடு பிணைக்கப்பட்ட ஒன்று.
எங்கிருந்தாலும் தமிழ்க் கலாசார
முறைப்படிதான் நமது வாழ்க்கைமுறை
நடைமுறை எல்லாம் இருக்கும்.

தமிழ் பேசும் நம் யாவரும் 
ஓர் உணர்வால் கட்டுண்டிருக்கிறோம்.
இதனை தமிழ் நாட்டில்
இருப்பவர்களை விட அந்நிய மாநிலத்தில் நாடுகளில் வாழ்கிற
நாங்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறோம்.

தமிழர் என்பதே நம் ஒற்றுமையில்தான்
இருக்கிறது.அது மொழிக்குள்
பொதிந்து கிடக்கிறது.
மொழியைப் பேச வைத்து
நம்மைக் கட்டி இழுக்கிறது.
காவல் தெய்வமாக நம்மை
ஒன்றுபட வைத்துக் காத்து
நிற்கிறது.

தமிழர்களாகிய  நம்மிடமிருந்து
இந்த மொழி உணர்வை யாராலும்
பிரித்துவிட முடியாது.

நம்மிடமிருந்து நம்மமொழியைப்
பிரித்துப் பாருங்கள்.
நாம் உணர்வற்றவர்களாக தன்மானம்
குன்றியவர்களாக மாறிவிடுவோம்.

மொழி உணர்வு ஒருபோதும் குறைந்து
போய்விட அனுமதிக்கக்கூடாது.

மொழிப்பற்று குறைந்து போனால்
மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடும்
என்பது மட்டுமல்ல. அது அந்த
மொழி பேசும் அனைவரையுமே பாதிக்கும்.மொழி வளர்ச்சி நின்றுபோனால் நம் வளர்ச்சியும்
குன்றிபோகும்.

மொழியோடு நமக்குள்ள தொடர்பு
தாயோடு நமக்குள்ள பந்தம் போன்றது.
தாய்மொழி உறவு தவிர்க்க முடியாத தவிர்க்கக் கூடாத உறவு.


"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா "
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழர்களாகிய நாம் நம் தமிழினத்தோடு  இணைந்து இருந்தால் எந்த இடத்திலும்
பின்தங்கிப்போக வாய்ப்பு ஏற்படாது.
யாரும் நம்மை குப்புற தள்ளி விடவும்
முடியாது.

ஒரு கையால்  செய்யும் செயலை விட
இரு கையும் சேர்ந்து செய்தால்
அந்தச் செயலைத் திறன்படச் செய்ய முடியும்.

அது போன்றுதான் மொழியும்
உணர்வும்.
மொழியும் உணர்வும் பிரிந்து போய்விடக்கூடாது.

"யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம் "என்று பாரதி
சும்மாவா சொல்லியிருக்கிறார்.

இனிய மொழி நமக்குண்டு.
என்பதில் பெருமை உண்டு.

தமிழன் என்ற சொல்லே 
தமிழ்மொழியால் நமக்குக் 
கிடைத்த பெருமையல்லவா! 

இத்தகுத் தமிழ்ச் சொந்தங்களோடு இணைந்திருப்போம்.
தமிழருக்குத் தோள் கொடுப்போம் .உற்ற நற்றுணையாக  உடன் நடப்போம்.

தமிழால் கட்டுண்டோம்.
தமிழராய் ஒன்றிணைவோம்.



Comments

Popular Posts