அவ்வை என்று எழுதுவது சரியா
அவ்வை என்று எழுதுவது சரியா
ஔவை என்பதை அவ்வை
என்று எழுதுகின்றனர்.
மையம் என்பதை மய்யம் என்று
எழுதுகின்றனர்.
இதெல்லாம் சரிதானா?
இப்படியொரு கேள்வி நம்
அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
இருந்தாலும் யாரிடம் போய்க் கேட்பது?
சரி எப்படியாவது எழுதிவிட்டுப்
போகட்டும் என்று கடந்து
சென்று விடுவோம்.
ஆனாலும் அவ்வப்போது
அந்தக் கேள்வி வந்து
தட்டி எழுப்பத்தான் செய்கிறது.
பிழையான ஒரு சொல்லைப் பேரறிஞர்கள்
கையாளுவார்களா?
இருக்காது ஒருபோதும் பேரறிஞர்கள் எழுத்தில்
பிழை இருக்காது என்று மனம்
ஒப்புதல் வாக்குமூலம்
அளிக்கும்.
அவ்வாறு எழுதுவது பிழையன்று
என்று நினைக்கிறோமல்லவா?
நாம் நினைத்தால் அது பிழை இல்லாமல்
இருக்குமா?அதற்கு ஆதாரம் வேண்டாமா?
வேண்டும் . ஆதாரம் வேண்டும்.
இதோ தொல்காப்பியம்
தொல்காப்பியம் கூறுவது என்ன?
என்று பார்ப்போம்.
"அகர உகர மௌகார மாகும் "
அதாவது அகரமும் உகரமும்
கூட்டிச் சொல்ல ஔகாரம்போல
இசைக்கும்
என்பது இதன் பொருள்.
ஔவை- அவ்வை
"அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ் சினை மெய்பெறத் தோன்றும்"
மையம்- மய்யம்
எனவே ஔவை என்பதை
அவ்வை என்றும்
மையம் என்பதை மய்யம்
என்றும் எழுதலாம் என்பது புரியும்
"அகர இகரம் ஐகாரம் ஆகும்"
தொல். எழுத்ததிகாரம் நூற்பா 54
அ + இ = ஐ. a+i=ai
"அகர உகரம் ஔகாரமாகும் "
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 55
அ + உ= ஔ a+u=au
இலக்கணம் இருக்கிறது. இலக்கியத்தில்
ஆதாரம் இருக்கிறதா என்றால் அதற்கும்
ஆதாரம் உள்ளது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
அவ்வை உயிர்வீயுங் கேட்டாயோ தோழி
அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி
என்று கூறியிருப்பார்.
அதுபோல தேம்பாவணியில் வீரமாமுனிவர்
"மய்யம் தாவிய மனத்தெழு அம்பு"
என்று எழுதியிருப்பார்.
இதன்மூலம் அவ்வை ,
மய்யம் போன்ற சொற்கள்
இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது
தெரிய வந்துள்ளது.
இனி எப்போதாவது ஐயம்
ஏற்பட்டால்
வீரமாமுனிவரே மய்யம்
என்று எழுதிவிட்டார்
இளங்கோவடிகளும் அவ்வை என்று எழுதியிருக்கிறார் என்று சொல்லாமல்
அல்லவா!
Comments
Post a Comment