என் அப்பா

    என் அப்பா

முந்நூறு நாள் சுமந்து

முழு உருவம் தந்து

 தாலசைத்துத்

 தமிழ்ப் பாலூட்டி

  எட்ட நிற்கும் நிலவினை

  கட்டி இழுத்து வந்து

  கட்டில் அருகில் வைத்து

  கதைகள் பல பேசி

  காதோடு உறவுகூறி

  கன்னம் உரசி

  கன்னல் மொழி கூறி

  கலையாத கவினோடு

  நிறைந்த உணர்வோடு

  நம்மில் கலந்திருப்பவர்  அம்மா .


அம்மாவின் முதல் அறிமுகம் 

 என் அப்பா

பெண்  எந்தன் குரல் கேட்டு

அப்பாவும் முகம் சுழித்து

முத்தாய்ப்பாய் யாத்திரைக்கு

நேர்த்தியாய்    வழி

ஒன்று சொல்ல....

அடங்காத நானும்

ஓயா குரல் குரலெழுப்பி

உறங்கவிடாது ஊறு செய்ய 

தாங்காது இனி என்றெண்ணி

குரல் நிறுத்தம் செய்ய 

காந்தியார் வழியில்

ஆட்டுப்பால் அருந்திட வைத்து

என் இறுதி யாத்திரைக்குத்

தற்காலிக தடையிட்டவர் அப்பா



 அந்திப்பொழுதினிலும்

அரசியல் அரட்டையில்

பங்கு கொள்ளவரும்

பெரியோர் முன்னிலையில்

தந்தியின் உலக அரசியலை

உரக்க உச்சரிக்க வைத்து

வாசிப்புப் பயிற்சிக்கு

வாய்க்கால் அமைத்துத் 

தந்தவர் அப்பா!


வெள்ளந்தியாய் வெகுளியாய்

வெளுத்ததெல்லாம் பாலென

உலகம் தெரியாமல் வாழ்ந்தவர்

என்னை மட்டும் அருந்தமிழ்

படிக்க வைத்து  தமிழுலகைக்

காண வைத்தவர்

அப்பா!

அப்பாமீது எப்போதும்

பெருமதிப்பு எமக்குண்டு!

பெண்ணை எட்ட வைக்கும்

பழக்கம் இருந்ததால்

கிட்டவர முடியாமல்

முட்டவும் முடியாமல்

முடங்கிக் கிடந்தோம்.


இதுதான் என் அப்பா.


பொதுவாக அப்பா என்றால்...

தோளைக் குறுக்கி

தோள்மீது சுமந்து  

தோழனாய் உடன் நடந்து

தொடர் பயிற்சி தந்து

 நன்மை தீமை அறிய வைத்து 

காலமெல்லாம் கை கோத்துக்

தலையெழுத்தைக்  கொடுத்து

தலைநிமிர வைக்க 

தன்னால் இயன்றவரை

உழைப்பவர்.

  

அப்பாவின் உயிர்துடிப்பில்

இயங்குவது குடும்பம்

அப்பாவின் சமபாதி அம்மா.

அன்பில் சமபாதி கிடைக்காத 

ஆதரவற்ற குழந்தை அப்பா.

அம்மாவிற்கு கிடைக்கும் அன்பு

அப்பாவுக்குக்‌ கொடுப்பதில் மறுப்பு

அப்பா என்றால் கண்டிப்பு.

அதனால் அப்பாவுக்கு வீட்டில் 

எப்போதும் இருக்கும் எதிர்ப்பு.


அப்பா ஓர் அபூர்வ ராகம்

விலகியே நிற்பார்

விழிகளால் பேசுவார்

தொடர்பு எல்லைக்கு அப்பால் 

தொலைவில் இருக்கும்

தொலைத்தொடர்பு சாதனம் அப்பா. !


கையில் கிடைத்ததைக்

கை நனைக்க விரும்பாமல்

கையோடு கொண்டு வந்து தந்து

கடைசிவரை உண்பதைக்

கண்குளிர பார்த்திருப்பவர் அப்பா


விரல்கள் காய்த்துப் புடைத்து

வியர்வை குளியல் நடத்தி

வீதியில் வாழ்க்கை 

நடத்துபவர் அப்பா


இப்படிப்பட்ட அப்பாக்களைக் கொண்டாட

வேண்டாமா?

அம்மாவுக்கு ஒரு தினம்

இருக்கும்போது அப்பாவுக்கு

ஒரு தினம் கொடுக்க வேண்டாமா?


 அப்பாவுக்கு ஒரு தினம்

வேண்டும் .....

.வேண்டும் 

என் அப்பாவைக் கொண்டாட ஒரு நாள் வேண்டும்.

இப்படி ஒரு பெண் நினைத்தார்.


அவருக்கு இப்படிப்பட்ட சிந்தனை உதயமானதே ஓர்

அன்னையர் தினத்தில்தான் என்பது

சுவாரசியமான வரலாறு.


அமெரிக்காவின் வாசிங்டன் நகருக்கு

 அருகிலுள்ள ஸ்போகன் என்ற இடம்.

 நாள் ஞாயிற்றுக்கிழமை.

 தேவாலயத்தில் அன்னையர் தின

 சிறப்பு பிராத்தனைக் கூட்டம்

 நடைபெற்றது.

 அனைவரும் தங்கள் அன்னையர்

 கைகளைப் பற்றிக் கொண்டு

 உற்சாகமாகக் காணப்பட்டனர்.

   

தேவாலயத்திற்கு சோனோரா என்ற

 பெண்ணும்  வந்திருந்தார்.

அன்னை பற்றிய சிறப்புப் பாடல்கள்

பாடப்பட்டன.

போதகர் அன்னையின் பெருமைகளைப்பற்றி

அழகாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அன்னை என்றால் அன்பு.

அன்னை என்றால் தியாகம்.

அன்னை என்றால் கனிவு.

அன்னை என்றால் பாசம்.

அன்னை வாய்ப்பது வரம்.

இப்படி அன்னைக்கான பண்புகளை

அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே

போனார்.

கேட்ட சோனோரா அசந்து போனார்.

மெய் மறந்து போனார்.

அன்னை என்றால் இத்தனை சிறப்புமிக்கவரா ?

இத்தகைய சிறப்புமிக்க அன்னையைக் 

கொண்டாடும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை.

அப்படியானால்.... அப்படியானால்...

இத்தனைக்கும் பொருத்தமான

ஆள் யார் என்ற கேள்வி மனதிற்குள்

அவளுக்குள் எழுந்தது.


தன் அப்பாவைத் தவிர வேறு

யாராக இருக்க முடியும்? 

பதினாறு வயதில் அன்னையை 

இழந்து அரவணைக்க ஆளின்றி

நின்ற போது தோளோடு கரம்

கொடுத்து தோழனுக்குத் தோழனாய்

தாய்க்குத் தாயாய்

நின்றிருந்தவர்  என் அப்பா.

அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி எம்மை உடனிருந்து காத்து

வந்த தெய்வம் என் அப்பா.

எனக்கும் என் தம்பி தங்கைகளுக்கும்

அப்பாவும் அம்மாவும் ஆசானும்

ஆண்டவனுமாய் இருந்து

அரவணைத்து வழி நடத்திய என் அப்பாவுக்கு

நான் ஏதாவது செய்தாக வேண்டும்.


ஊரெல்லாம் மனைவி இருக்கும்போதே

மறுமணம் செய்யும் ஆண்கள்

இருக்கும் நாட்டில் தன் இளமையை

எங்களுக்காக தியாகம் செய்தவர்

என் அப்பா.


நினைத்து நினைத்து நெஞ்சம்

நெகிழ்ந்து போனார் சோனோரா.


அம்மாவின் அத்தனை தகுதிகளும் கொண்ட

என் அப்பாவிற்கும் அம்மாவுக்குக்

கிடைக்கும் இத்தனை 

பெருமைகளும் கிடைத்திட வேண்டும்.

இதற்கு நான் ஏதாவது 

செய்தே ஆக வேண்டும் என்ற

எண்ணம் உள்ளுக்குள் அனலாக எழுந்தது.


ஆறு உடன்பிறப்புகளையும் வளர்க்க

அப்பா பட்ட கஷ்டங்கள்

நெஞ்சில் நினைவலைகளாக

வந்து முட்டி மோதி 

முன்னே தள்ளியது.


என்  அப்பா வில்லியம் சாக்சனை 

கௌரவிக்க நான் ஏதாவது 

செய்ய வேண்டுமே...என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்ற சிந்தனையில்

பல நாள் தூக்கத்தைத் தொலைந்தார்.


அதனால் 1910 ஆம் ஆண்டு 

ஜூன் மாதம் 

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நாளில்

அப்பாவின் நினைவாக தனது வீட்டில் 

ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு 

செய்திருந்தார்.


அன்றைய நிகழ்ச்சியின்போது

தனது அப்பாவைப் பற்றி வந்திருந்தவர்கள் மத்தியில் நிறைய

பேசினார்.பேசிக் கொண்டே இருந்தார்.


அப்போதுதான் இந்தநாள் என் அப்பாவுக்கான

நாளாக ஏன் இருக்கக் கூடாது?

இப்படி ஒரு கேள்வி மனதிற்குள்

மாறிமாறி வந்து கொண்டிருந்தது.


அதைப்பற்றி அறிந்தவர்கள்

தெரிந்தவர்களிடம் கருத்து

கேட்க ஆரம்பித்தார்.


பலரும் சோனோராவின் இந்த

எண்ணத்திற்குப் பாராட்டும் ஆதரவும்

தெரிவித்தனர். எதிர்த்தவர்களும் உண்டு.


எனினும் தான் எடுத்த முடிவில் சோனோரா பின்வாங்க வில்லை.


தன் கருத்தை இன்னொரு நிகழ்ச்சியின்போது

அனைவர் மத்தியிலும் முன்மொழிந்து

வைத்தார். ஆதரவு பெருகியது.

இப்படி சோனோராவால் 

தொடங்கப்பட்டதுதான் தந்தையர்தினம்.     

     

 ஆனால் இது அதிகாரப் பூர்வமாக

 அறிவிக்கப்பட பல ஆண்டுகள் 

 காத்திருக்க வேண்டியதிருந்தது.

 

 ஆரம்ப காலத்தில்  தந்தையர் தினம்

 என்றதும் வேடிக்கையாகப்

 பேசியவர்கள் உண்டு.

விமர்சையாகக் கொண்டாட

எவரும் முன் வரவில்லை.

 சில பத்திரிகைகள்கூட

 தந்தையர் தினத்தை விமர்சித்ததோடு

 கிண்டலும் நையாண்டியும் செய்து 

 செய்திகள் வெளியிட்டன.

 

ஆனால் 1913 ஆம் ஆண்டு இதற்கான 

மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில்

 தாக்கல் செய்யப்பட்டது.

 

 முதன்முதலாக  அமெரிக்க ஜனாதிபதி 

 கால்வின் கூலிட்ஜ் என்பர் 1924 ஆம் ஆண்டு

தந்தையர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்துப்

பேசினார்.


இதனைச் சட்டமாக கொண்டுவர 

1930 ஆம் ஆண்டு ஒரு தேசிய குழு  

ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் அதுவும் சில காரணங்களால்

நடைமுறைப்படுத்த

முடியாமல் போயிற்று.

சட்டப்படி நடைமுறைக்கு வர 

1966 ஆம் ஆண்டு வரை காத்திருக்க 

வேண்டியதாய் இருந்தது.


 ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 

 தந்தையர் தினத்திற்கு பெடரல் விடுமுறை 

 என அறிவித்தார்.

 

 1972ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த 

  ரிச்சர்டு நிக்சன் ஜூன் மாதம் மூன்றாவது

  ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக 

  கொண்டாடப்படுவதை உறுதி செய்தார்.

  

அந்தநாள் முதல்   இன்றுவரை தந்தையர்தினம் 

  ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில்

  கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தையர் தினத்தை

 அன்னையர்தினம் போன்று பிரமாண்டமாகக்

கொண்டாடுகிறோமா என்றால் ....

 இல்லை என்றுதான் சொல்லுவேன். 

 அம்மாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  

 பல வீடுகளில் அப்பாவுக்குக் கொடுப்பதில்லை.

அதனால் தந்தையர் தினம் தனிக்கவனம் 

பெறுவதில்லை.


வேராக இருந்து நாம் விழுந்து

விடாமல் காத்தவரைப் பெருமைப்படுத்த

ஏன் இன்னும் தயக்கம் ?


சுணக்கம் இல்லாது

 இணக்கமாய் அப்பாவின்

 கரம் பிடித்து

 அப்பா உங்களை நேசிக்கிறேன்

 என்ற ஒற்றை வரியை 

 உள்ளன்போடு உரைத்து

 அப்பாவோடு நடந்து பாருங்கள்.

 அதுவே அவருக்குச் செய்யும்

 முதல் மரியாதையாய் இருக்கட்டும்.


  "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

  என்நோற்றான் கொல்எனும் சொல் "

  

  என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க 

  தந்தைக்குப் பெருமை பெற்றுத்தர

  வேண்டும்.


 "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை "

 என்பதை நினைவில் வைப்போம்.

    

தாயோடு ஆறுசுவைபோம்

தந்தையோடு கல்விபோம்....

என்பதைப் படித்திருக்கிறோம்.


நாம் பெற்ற அறிவு  நம் அப்பாவால்

கொடுக்கப்பட்டது என்பதை மறவாதிருப்போம்.   கல்வி அறிவைத் தந்த தந்தையைக் காலமெல்லாம் 

உடன் வைத்துப்   பாதுகாத்திருப்போம்.

 நம்மை உயர வைத்து அழகு பார்த்த அப்பாவை உள்ளத்தில் வைத்து

தொழுதிருப்போம்.

பழுதில்லா அன்புடன் பக்கம் வைத்து பார்த்திருப்போம்.

நாளும் அன்பை தந்திருப்போம்.

அனைவருக்கும்     தந்தையர்தின நல்வாழ்த்துகள்.

         

    

    

    

Comments

Popular Posts