தமிழரசன்

பள்ளி வாசல் வரை உற்சாகமாக வந்த 

தமிழரசனுக்கு அதற்கு மேல் பள்ளிக்குள்

செல்ல கால் எழவில்லை.

ஒரு கணம்  அப்படியே நின்று 

பள்ளியையே பார்த்தான்.

" பள்ளிக்குள் செல்வதா ?வேண்டாமா?"

 என்று ஒரு தாவா மனதிற்குள் வந்து

அவனை அப்படியே நிறுத்தி வைத்தது.

கால்கள் தள்ளாடின.

மனசுக்குள் ஒரு படபடப்பு.

 நாலு நாளாக பள்ளிக்கு வரவில்லை.
             
 ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது ? 

எப்படி சமாளிப்பது.?

 மற்ற மாணவர்களைப் போல சட்டென்று

 பொய் பேசி பழக்கம் இல்லை.

 உண்மையைச் சொல்லி விடலாமா?

ஐயோ...வேண்டாம்.

மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

நினைப்பதோடு மட்டும் விட்டு விடுவார்களா?

பிச்சைக்காரன்... பிச்சைக்காரன்...

என்று சொல்லி சொல்லி கூனிக்குறுக 

வைத்துவிடுவார்களே!

நினைத்துப் பார்க்கவே உடலெல்லாம் கூசியது.

நான் என்ன வேண்டும் என்றேயா பிச்சை

எடுக்கிறேன்...

எங்கள் வீட்டு நிலைமை அப்படி.

இரண்டு பிள்ளைகளைக் கையில் கொடுத்துவிட்டு

ஓடிப்போன அப்பா .

அம்மா  என்னதான் செய்வார்? 

இருக்க வீடு கிடையாது.

பாலத்துக்குக் கீழே ஒரு தார்ப்பாய் 

போட்ட வீடு. அதுவும் அப்பப்போ முனிசிபாலிட்டி

அண்ணன்மார் வந்து பிச்சு போட்டுருவார்கள்.

எல்லா சாமான்களையும் அள்ளிகிட்டு

இன்னொரு பாலத்துப் பக்கம் ஒண்ட

இடம் கிடைக்காதா என அலைவோம்.

நிரந்தரமாக தங்க இடம் கிடைத்தால்தான்

வீட்டு வேலையாவது கிடைக்கும் என்று

அம்மா சொல்லிச் சொல்லி புலம்புவார்கள்.

எங்களைப் பட்டினிப்போட மனம் இல்லாமல்தான்

அங்கங்கே கடைகண்ணி பக்கம் கையை நீட்ட

வேண்டியதாயிற்று.

அதுவே இப்போ அம்மாவின் தொழிலா போச்சு.

ஒவ்வொரு நேரம் நினைத்து நினைத்து

வருத்தப்பட்டிருப்பேன்.வெட்கப்பட்டிருக்கிறேன்.

நான் வளர்ந்த பிறகு அம்மாவை இந்த

தொழில் செய்யவிடக் கூடாது என்று

நினைப்பேன்.

அம்மா கையை நீட்டிப் பிச்சை கேட்பதைப்

பார்க்க பார்க்க எனக்கு அவமானமாகத்

தெரியும்.

ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு ஆட்கள்

பேசுவதைப் பார்த்தால் இப்பவே போய்

ரெயில் தண்டவாளத்தில் போய் விழுந்திருவோம்மா

என்று சொல்லுவேன்.

அம்மாதான் "உங்க இரண்டு பேரையும்

 வளர்த்துவிடதான்

இந்த பாடுபடுகிறேன் .

இந்த வயசுல இப்படி எல்லாம் பேசக்கூடாது

தம்பி "என்பார்.

பிச்சை எடுத்து எங்களை வளர்த்து

என்ன பெருசா படித்து சாதித்துவிடப்

 போறோம்? 

படிக்காமல் வீட்டில்தான் இருந்தேன்.

ஒரு நாள் ஒரு டீச்சர் வந்து எங்களைப்

பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள்.

அதனால் படிக்க முடிந்தது என்பதைவிட

என் வயித்துப்பாட்டுக்கு 

ஒரு வழி கிடைச்சது என்பது நிஜம்.

மதிய சாப்பாடு பள்ளியில் கிடைத்ததால்

அம்மாவுக்கு ஒரு பாரம் கொஞ்சம்

குறைந்தது.

பள்ளியில் போடுகிற சாப்பாட்டைக் காணாமல்

வீட்டுக்குக் கொண்டு வந்து தங்கைக்கும்

கொடுப்பேன்.

இப்போ ஒரு நாலுநாளா அம்மாவுக்கு

உடம்புக்குச் சரியில்லை.

தங்கச்சியைப் பார்த்துக்கணும்.

அம்மாவையும் பார்க்கணும்.

அதனால் பள்ளிக்கூடத்துக்குப்

போக முடியல.

அன்றைய பாடே பிச்சை எடுத்தால்தான்

கழியும் என்ற நிலை.

வீட்டில் இருந்து தின்ன பிச்சைக்காரங்க

நாங்க என்ன சேர்த்து வைத்திருப்போம்

என்று நினைக்கிறீங்க?

காய்ந்த ரொட்டியும் ஊசிப்போன 

குழம்பும்தான் அன்றாட சாப்பாடு.

இனி அதற்கும் வழி இல்லை.

அதற்காக வயிறு சும்மா கிடக்குமா ? 

அம்மா செய்த வேலையை நான் செய்ய

வெளியில் வந்தேன்.

அம்மாவுக்கும் தங்கைக்கும் ஏதாவது வாங்கி

வந்து கொடுக்கணுமே என்ற பொறுப்பு

என் தலையில் விழுந்தது.

அதனால்தான் நாலுநாளா அம்மா பிச்சை எடுக்கும்

இடத்தில் போய் நிற்க வேண்டியதாயிற்று.

பள்ளிக்கு எப்படி போக முடியும் ? 

நாலுநாளும் பள்ளியில் படிக்கும் 

யாரும் பார்த்திடப்பிடாது என்று

தலையில் ஒரு பிய்ந்த தொப்பியை

வைத்துக் கொண்டேன்.

அப்பவும் எப்படியோ எங்க பள்ளியில்

படிக்கும் ஒரு பெரிய அண்ணன் என்னைப்

பார்த்துவிட்டான்.

என்னைத் திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே 

போனான். யாருகிட்டேயும் சொல்லி 

இருப்பானோ என்று பயமாக இருக்கிறது.

சொல்லியிருந்தால்.....நினைத்துப்

பார்க்கவே அவமானமாக இருக்கிறது.

இப்போது அம்மா உடம்பு கொஞ்சம் 

தேறிட்டு.அதனால நீ பள்ளிக்கூடத்துக்குப்

போப்பா என்று சொன்னாவ.

அதனால்தான் பள்ளிக்கு வந்தேன்.

அந்த அண்ணன் சொல்லியிருப்பானோ?

சொல்லியிருந்தால்....

மற்ற மாணவர்கள் கிண்டலாகப் பேசுவது

 இப்போதே காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.

"போதும் நிறுத்துங்கள் "என்று கத்த 

வேண்டும் போல் இருந்தது.

 இத்தனை தயக்கத்திற்குப் பின்னரும்

 பள்ளிக்குப் போவதா?

 வேண்டாம்... என முடிவெடுத்த தமிழரசன் 

அப்படியே திரும்பினான்.

 அங்கே பள்ளி ஆசிரியை ஒருவர்  

 வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

 இனி கையில் புத்தகப் பையோடு

 திரும்ப முடியாது.

 பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும்.

 அல்லது ஆசிரியர் கண்ணிலிருந்து  தப்ப

வேண்டும்.

தப்புவது முடிகிற காரியமாகத் தெரியவில்லை .

என்ன நடந்தாலும் நடக்கட்டும்.

 எதுவுமே நடக்காது போல விறு விறுவென்று

 பள்ளிக்குள் நுழைந்தான்.

 நேராக தன் வகுப்பறைக்குச் சென்று

 தன் இடத்தில் அமர்ந்தான்.


"இத்தனை நாள் பள்ளிக்கு  ஏன் வரவில்லை  ? "

மாணவன் ஒருவன் முதல் கேள்வியைக் 

கேட்டு வைத்தான்.

 பதில் சொல்வதற்குள் மற்றொரு மாணவன் 

" டீச்சர் வந்ததும் உனக்கு நன்றாக 

அடி கிடைக்கும்" என்று கட்டியம் கூறினான்.

 தமிழரசனால் ஒன்றுமே பேச முடியவில்லை.   

 நெஞ்சுக்குள் ஒரே படபடப்பு.

அடியை வாங்கிவிடலாம். அவமானத்தைத்தான்

தாங்க முடியாது.

முகமெல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது.

 ஏதோ நெஞ்சுக்குள் அடைப்பது போல இருந்தது.

  எதையும் வெளிக்காட்டாமல் பைக்குள்ளிருந்து 

புத்தகத்தை எடுப்பது போல முகத்தைப் 

பைக்குள் மறைத்துக் கொண்டான் தமிழரசன்.

"குட்மானிங் டீச்சர்.... "என்ற குரல் கேட்டதும் 

பட படவென்று எல்லா மாணவர்களையும்போல

எழும்பி நின்றான்.

வாயிலிருந்து குட்மானிங் வர மறுத்தது.

அனைவரையும் அமரச் சொன்னார் ஆசிரியை.

அதற்குள் ஒரு முந்திரி கொட்டை

 முந்திக் கொண்டான்.

" டீச்சர் தமிழரசன் நாலு நாளா பள்ளிக்கு

 வராம இன்று தான்வந்திருக்கான் "

என்று தமிழரசனை ஆசிரியர்

 முன் ஆஜர்படுத்தினான்.

 தலை குனிந்தபடி நின்று 

கொண்டிருந்தான் தமிழரசன்.

"தமிழரசன் ...இத்தனை நாட்கள் 

ஏன் வரல? கேட்டார் ஆசிரியை.

தமிழரசனால் பதில் சொல்ல முடியவில்லை.

 கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

"என்ன சொல்வது? எப்படி சொல்வது? 

அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லாமல்

 போனதால் நான்தான் பிச்சை

 எடுக்க வேண்டியதாயிற்று என்பதை

 எப்படி கூற முடியும்?"

உதடுகளில் வார்த்தைகள் உணர்ச்சிப்

போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன.

 ஆசிரியருக்கு தமிழரசனால் சொல்ல முடியாத

அளவுக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கு

என்பது புரிந்து போயிற்று.

அருகில் அழைத்தார். 

"என்னப்பா ...என்னாயிற்று .

ஏன் இத்தனை நாள் வரல..

சொல்லு  ..".கையைப் பிடித்தபடி 

அன்பாகக் கேட்டார்.


அவனால் கண்ணீரை மட்டுமே 

விடையாகத் தர முடிந்தது.

 உடம்புக்குச் சரியில்லையா? 

மறுபடியும் கேட்டார் ஆசிரியை.


"டீச்சர் அவன் நன்றாகத் தான்

இருந்தான் .

மார்க்கெட் பக்கம் பிச்சை எடுத்துக்

 கொண்டிருந்தான் என்று எங்க அண்ணன்

சொன்னான்."..எல்லோர் முன்னிலையிலும்

போட்டு உடைத்தான் ஒரு மாணவன்.


 தமிழரசன் அப்படியே கூனிக் குறுகி 

நின்றான். எது தெரிந்துவிடக்கூடாது 

என்று இத்தனை நேரம் தயங்கினானோ

 அது அத்தனை பேருக்கும் தெரியும்படி

ஆகிவிட்டது.கண்கள்  கண்ணீர் 

வடிப்பதைத் தவிர வார்த்தையால்

எதுவும் பேச முடியவில்லை.

ஒரு சிறுவனின் உணர்ச்சிப் போராட்டத்தை

ஆசிரியையால் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழரசனுக்காகப் பரிதாபப்பட்ட

ஆசிரியை அவனிடம் மெதுவாகப் பேசி

வீட்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.

 

கண்ணீரோடு பாடம் ஒப்பிப்பது போல் 

 நிலைமையை ஒன்று விடாமல்  

ஆசிரியையிடம் ஒப்பித்தான் தமிழரசன்.


 சரி பார்த்துக்கலாம் .நீ நன்றாக 

படிக்கிற பையன். இப்படி அடிக்கடி 

விடுப்பு எடுத்தால்   படிக்க முடியாது.

ஏதாவது ஒரு விடுதியில் சேர்த்து விடட்டுமா? 

கரிசனையோடு கேட்டார் ஆசிரியை.

பதறிப் போனான் தமிழரசன்.

 வேண்டாம் டீச்சர் ...வேண்டாம் .

என் அம்மாவை விட்டுவிட்டு 

நான் எங்கும் வரமாட்டேன்.

இங்கேயே இருந்து நல்லா

 படிக்கிறேன் டீச்சர்.

 
என் அம்மாவுக்கு அடிக்கடி

 உடம்பு சரியில்லாம போகுது டீச்சர்.

 நானும் இல்லாம போயிட்டா 

யாரு டீச்சர் எங்க அம்மாவ 

பார்த்துக்குவா?

எங்க அம்மாவுக்கு சாப்பாடு யார் தருவா?"

சொல்லி அழுதான்.

அழாத....கையைப்பிடித்து

தேற்றினார் ஆசிரியை.

"எனக்கு என் அம்மா கூட தான்

 இருக்கணும். என் அம்மாவை நான்

நல்லா பார்க்கணும் டீச்சர் '"

கண்கள் தாரைதாரையாக 

கண்ணீர் வடித்தன.

 அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?


தமிழரசனின் தாய்ப் பாசத்தைப்

 பார்த்த ஆசிரியருக்கு அதற்கு மேல் 

எதுவும் பேச முடியவில்லை.
     

 தமிழரசன் மாதிரி மகன் கிடைப்பதற்கு 

என்ன தவம் செய்தாரோ 

அந்த ஏழை தாய் என்று 

பெருமிதப்பட்டுக் கொண்டு 

முதுகில் தட்டிக் கொடுத்து இடத்தில்போய்

அமரச் சொன்னார் ஆசிரியை.

கும்பிட்டுக் கொண்டே இடத்தில்

போய் அமர்ந்தான்.

ஒட்டு மொத்த வகுப்பும் தண்டனை

பெறாமல் தப்பிக்க ஆசிரியரிடம் தமிழரசன்

என்ன பேசியிருப்பான்? என்ற சிந்தனையில்

அப்படியே உட்கார்ந்திருந்தது.
           
           
             

Comments

Popular Posts