மறதி போயே போச்சு
தாமஸ் ஆல்வா எடிசன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் உருவாக்கங்களை உலகிற்கு அளித்த அருமையான அறிவியலாளர்.
அவர் இல்லை என்றால் மின்சாரம் இல்லை.
மின்சாரம் இல்லை என்றால் இன்றைய சொகுசு வாழ்க்கையும் இல்லை.
பத்து நிமிடம் மின்சாரம் இல்லை என்றால்
உஸ்சு புஸ்சு என்று உருண்டுட்டு
வந்து விடுவோம்.
எடிசனுக்கும் ஒருமுறை ஞாபகமறதி
ஏற்பட்டு விட்டதாம். மின்கட்டணம்
செலுத்த அலுவலகம் சென்றாராம்.
மின் கட்டணம் பெறுபவர் உங்க பெயரைச்
சொல்லுங்க என்று கேட்க மலங்க மலங்க
விழித்திருக்கிறார் எடிசன்.
சட்டென்று பெயர் நினைவுக்கு வரவில்லையாம்.
சற்று நேரம் அமைதியாகிப் போன
எடிசன் ஞாபகம் இல்லை என்றாராம்.
தன் பெயரே மறந்து போன ஒரு
ஆளை முதன் முறையாக பார்க்கிற
அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்த்தார்
மின் கட்டணம் பெறுவதற்காக
அமர்ந்திருந்த நபர்..
ஆ..எடிசன். தன் முன்னால் தன்
பெயரையே மறந்து நின்று கொண்டிருப்பவர் மின்சாரத்தையே கண்டுபிடித்த எடிசன்.
எடிசனைத் தெரியாதவர் இருக்க முடியுமா என்ன?
எடிசனுக்கே மறதியா? கேட்டவருக்கு
ஆச்சரியமாக இருந்தது.
விளையாட்டாக கூறுகிறாரோ என்று கூட நினைத்தார். ஆனால் உண்மை அதுதான்.
எடிசனுக்கு உண்மையாகவே தன் பெயர் மறந்து போய்விட்டது.
மறதி எடிசனுக்கு மட்டுமல்ல .
சாதாரணமாக எல்லோருக்கும் நிகழக்
கூடிய ஒன்றுதான்.
இருபத்து நான்கு மணி நேரமும்
ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று தன் முழு கவனத்தையும் வைத்திருந்ததால் எடிசனால் தன்
பெயரை நினைவில் வைத்துக்கொள்ள
முடியவில்லை.
இது பெரிய குற்றமே அல்ல.
இது போன்று மறந்து போன
அனுபவங்கள் நம்மிலும் பலருக்கு
ஏற்பட்டிருக்கலாம்.
நம்மோடு பள்ளியில் படித்த நண்பரை
பல ஆண்டுகளுக்குப் பின்னர்
சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆனால் சட்டென்று பெயர் நினைவுக்கு
வராமல் எத்தனைமுறை தடுமாறியிருப்போம்.
பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று
விட்டு என்ன வாங்க வந்தோம் என்பதை
மறந்து மலங்க மலங்க விழித்திருப்போம்.
இவை யாவும் இயல்பாக அனைவர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வு தான்.
ஆனால் அடிக்கடி நாம் மறந்துவிட்டது...
மறந்துவிட்டது என்ற சொல்லைச்
சொல்வோமானால் சற்று யோசிக்க
வேண்டிய விசயம்தான்.
எது எப்படியோ எங்கோ ஒரு இடத்தில்
தவறு நடக்கிறது என்பதை மட்டும்
நம்மால் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.
மாணவப் பருவத்தில் அனைவர்
வாயிலும் சரளமாக வந்து போகும் ஒருசொல் உண்டென்றால் அது மறந்து விட்டது
என்பதுதான்.
சிறு வயதில் பல் விளக்கினாயா
என்று அம்மா கேட்டதும் மறந்துவிட்டது என்று கூறி மளுப்பியவர்கள் எத்தனை பேர்?
வீட்டுப்பாடம் எழுதி வரவில்லையா
மாணவர்கள் வாயிலிருந்து வரும்
ஒரு சொல் உண்டென்றால் அது
மறந்துவிட்டது என்பதுதான்.
உண்மையாகவே மறந்துவிட்டதா?
இல்லை மறந்து விட்டது என்று கூறி
ஏமாற்றினீர்களா?
அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.
யாரை ஏமாற்றுவதற்காக இந்த சொல்லைப் பயன் படுத்தினீர்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏமாற்றுவது நீங்களாக இருந்தாலும்
இதில் ஏமாற்றப்பட்டிருப்பதும் நீங்கள் தான்.
புரிய வில்லையா? உங்கள் தவறை
மறைப்பதற்குத் தானே மறதி என்ற
சொல்லை சாட்சிக்கு அழைத்து வந்தீர்கள்.
சாட்சி பிறழ் சாட்சியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதல்லவா !
எத்தனை நாளைக்குத்தான் இந்த விளையாட்டு?
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் ஒருநாள் அம்பலம் ஆகத்தானே செய்யும்.
அப்போது முகத்தை எங்கே கொண்டு வைக்க முடியும். உண்மையாகவே மறந்து விட்டதா?
அது ஒன்றும் இமாலய குற்றமே் அல்ல.
ஆனால் மறதி என்ற போர்வையைப்
போர்த்திக் கொண்டு நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ளலாமா?
அக்கறை இன்மைதான் மறதிக்கான காரணம்.
எதிலும் சிரத்தை இல்லாதிருந்தால்
மறதிதான் ஏற்படும்.
மறதி பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்குத்
தடையாக அமையும்.
மறந்துவிட்டது என்ற சொல்லையே
மறந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டுங்கள். தடைகளைத்தாண்டி
வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம்.
அப்படியானால் அந்த சொல்லைப்
பயன்படுத்தி இதுவரை நீங்கள்
இழந்தது போதும்.இனி இழப்பதற்கு
ஒன்றும் இல்லை.
உண்மையாகவே மறந்து விட்டதா?
நினைவூட்டலுக்காக எழுதி வைக்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எழுதி வைப்பதை உங்கள் கண்ணில்
படும்படியான ஓரிடத்தில் வையுங்கள்.
அதைப் பார்க்கும் போது எல்லாம்
என்னென்ன செய்ய வேண்டும்
என்பதை அது நினைவுபடுத்தும்.
அடிக்கடி நம் கண்முன் காணும் காட்சி
ஒரு போதும் மறந்துபோக வாய்ப்பே இல்லை.
எடுத்து வைக்கப்பட்ட புகைப்படமாக
நம் கண் முன்னால் வந்து நிற்கும்.
மறதி மறதி என்று சொல்லி நம்
முன்னேற்றத்திற்கு நாமே தடை போட்டுக்
கொள்ளலாமா?
இழந்தவை இழந்தவையாகவே இருக்கட்டும்.
இனி இழப்பு அந்த சொல்லுக்கு
மட்டுமே ஏற்படட்டும்.
மறப்பதற்கு ஒன்றும் இல்லை என்று
உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டிய அத்தனை செயல்களும்
உங்கள் முன் வரிசை கட்டி வந்து நிற்கும்.
உங்கள் அகராதியில் இருந்த மறந்தது விட்டது
என்ற சொல்லை நீக்கி விட்டீர்களல்லவா?
உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக
இருந்த ஒரு எதிரி இன்றோடு வீழ்ந்தான்.
எதிரியை வீழ்த்தி விட்டீர்கள் என்றால்
வெற்றி உங்களுக்குத்தானே !
இன்றுமுதல் மறதியோடு கொள்ளுங்கள் பிணக்கு.தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு !
Comments
Post a Comment