கோபத்தோடு பிணக்கு

                                    கோபம்  பாவம்

"மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்தல் அதனான் வரும் "

 என்கிறார் வள்ளுவர்.

"கோபம் தீய விளைவுகளை ஏற்படுத்துவதால்

கோபத்தை மறந்துவிடுக" என்கிறது குறள்.

மறக்கக்கூடியதா கோபம்? 

கோபம் என் பிறவிக்குணம் ஆயிற்றே...

என்று புலம்புகிறவர்களும் உண்டு.

அதனால்தானே சிடுமூஞ்சி என்ற பட்டத்தை

வாங்கி வைத்திருக்கிறோம்.

"தீராக் கோபம் போராய் முடியும் "

என்பார் ஔவை.

கோபம்  மழையாகக் கொட்டிய

நிகழ்ச்சி சாக்ரடீஸ்

சாக்ரடீஷ் உலகின் தலை சிறந்த தத்துவஞானி.

உலகமே கொண்டாடும் அவர்மீதும் கோபம்

கொண்டவர்கள் உண்டு.

சாக்ரடீஸ் கோடிக்கணக்கான  மக்களின்

 நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம் 

 நல்ல பெயர் எடுக்க முடியவில்லை.

அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த 

முக்கியத்துவத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை 

என்பது மனைவியின் குற்றச்சாட்டு.

வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது..

 எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார்.

ஒருமுறை இப்படித்தான் வெகுநேரமாக 

தன் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். 

பலமுறை மனைவி அழைத்துப் பார்த்தார்

அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை.

 வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும் 

வீசி தன் கோபத்தை வெளிப்படுத்திப் பார்த்தார்.

அப்போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

மாடிக்குச் சென்றார். ஆத்திரத்தில்

 ஒரு வாளி தண்ணீரை மொண்டு வந்து 

அப்படியே சாக்ரடீஷ் தலை மீது ஊற்றினார்.

 நண்பர் அப்படியே வாயடைத்துப் போனார்.

சாக்ரடீஷ் முகத்தைப் பார்த்தார்.

அவரோ ஒன்றுமே நடக்காதது போல

" இதுவரை இடி இடித்தது. இப்போது 

மழை கொட்டுகிறது "என்று வேடிக்கையாகச்

சொல்லிச் சிரித்தார்.

இப்படித்தான் கோபம் வந்தால் 

பலருக்கு தாங்கள் என்ன செய்கிறோம் 

என்பதே தெரிவதில்லை.

கோபம் அறிவை மழுங்கச் செய்துவிடும்.

முன்பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க விடாது.

இதைத்தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "

என்பார்கள்.

அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள்? 

என்ற எந்த சிந்தனையுமே மனதில் எழாது.

 ஒரு சிறிய பறவை நாள்தோறும்

கடற்கரை மணலில் முட்டை இட்டு

 அதனைப் பாதுகாப்பாக கடல் மணலால் 

மூடி வைத்து விட்டுச் செல்லுமாம்.

இப்படியாக பலநாட்கள் முட்டையிட்டுப் 

பாதுகாத்து வந்தது.

 ஒருநாள் ஆழிப் பேரலை வந்து 

அத்தனை முட்டைகளையும் மண்ணோடு

மண்ணாக உருட்டிச் சென்றுவிட்டது.

மறுநாள் முட்டையிட வந்த பறவை 

முட்டைகளைக் காணாது பதறிப் போயிற்று. 

அங்கேயும் இங்கேயும் ஓடியது.

யார் எடுத்துச் சென்றிருப்பார்கள்?

இப்போது அந்த சிறிய பறவைக்கு கோபம் 

என்றால் கோபம் செம கோபம்.

அப்போது கடலலை வந்து கடற்கரையில் கிடந்த

பொருட்களை எல்லாம் உள் இழுத்துச்

செல்வதைக் கண்டது.

ஓ...இது உன் வேலைதானா? 

கடலே ! நீ தானே என் முட்டைகளை 

அள்ளிச் சென்றாய்?"

இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்.

நீர்  இருப்பதால் தானே இந்தக் கொண்டாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டம்.

பேரலையை அனுப்பி என் முட்டைகளை 

அள்ளிச் செல்ல உனக்கு என்ன துணிச்சல்?

 உன்னை..உன்னை..

என்ன செய்கிறேன் பார் "

என்று இறகுகள் சிலிர்க்க கோபத்தோடு 

கடல் முன் நின்று கத்தியது.

இந்த சிறிய  பறவையால் என்னை என்ன

செய்துவிட முடியும் என்றுதானே மறுபடியும்

மறுபடியும் கர்ஜித்து மேலெழும்பி வருகிறாய்

இந்த நீர் இருப்பதால்தானே இப்படி

வஞ்சக செயலில் ஈடுபடுகிறாய்.

உன் நீரை எல்லாம் வற்ற செய்துவிட்டால்....

இதோ இப்போதே   உன் நீரை எல்லாம் 

வற்றச் செய்கிறேன் பார் "ஙஎன்று 

தன் சிற்றலகால் கடல் நீரை மொண்டு 

மொண்டு வெளியில் கொண்டு ஊற்றியது.

 கோபத்தில் தான் செய்வது சாத்தியப்படக் 

கூடியதுதானா என்று அந்த பறவையால் 

சிந்திக்க முடியவில்லை. 

பறவையின் மனதில் கோபத்தைத்தவிர 

எதுவும் இல்லை.

பறவைக்கு வந்த கோபத்தைக் கேட்டதும் 

நகைப்பாக இருக்கிறதல்லவா.!

 நாமும் இப்படித்தான் பல நேரங்களில் 

முட்டாள் தனமாக நடந்து கொண்டிருப்போம்.

 கோபப்பட்டு என்னத்தைச் சம்பாதித்தோம் 

என்றால் கோபக்காரன் என்பதைத் தவிர

 வேறொன்றும் இருக்காது.

 தம்பி தங்கைகள் மீது கோபம்.

நண்பர்கள் மீது கோபம்.

அம்மா மீது கோபம்.

 அம்மா மீது அதிகமாக நாம் காட்டுவது 

அன்பா?...கோபமா? என்று வாக்கெடுப்பு

நடத்தினால் கோபத்திற்குத்தான் அதிக

வாக்குகள் விழும்.

யார் என்ன சொன்னாலும் மொத்த

கோபத்தையும் அம்மாமீதுதான் காட்டுவோம்.

 கோபக்காரனாக இருந்து என்ன சாதித்தோம்? 

 ஒருமுறை நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்.

 நம்மீதே நமக்கு கோபம் வந்துவிடும்.

கோபக்காரனாக இருந்து பெற்றதைவிட

 இழந்தது ஏராளம்.

 நட்பை  இழந்திருப்போம்.

உறவுகளை இழந்திருப்போம்.

நிம்மதியை இழந்திருப்போம்.

ஏன் உடல் நலத்தைக் கூட இழந்திருக்கிறோம்.

இப்படி எல்லாவற்றையும்

நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளக்கூடிய

கோபம் தேவைதானா?

 கோபப்பட்டால் உடலில்ஏற்படும் 

காயம் விரைவில் ஆறுவதில்லையாம்.

உடலில் சுரக்கும் கார்டிசோல் என்ற திரவம் 

கோபப்படுவதால் கட்டுப்படுத்தப் படுகிறதாம். 

அது சரியாக சுரக்க முடியாமல் போனால்

 காயங்கள் எளிதில் ஆறுவதில்லையாம்.

 பார்த்தீர்களா ....இந்தக் கோபம் 

இழைத்து வரும் கொடுமையை?

பக்கவாத நோய் வருவதற்குக் காரணம்கூட

கோபம் என்கின்றனர்.

படிக்கிற பருவத்தில் ஏற்படும் கோபம்

உங்கள் படிப்பிற்குத் தடையாக அமையும்.

அரைமணி நேரம் படித்தாலும்

ஆறு வார்த்தை கூட மனதில் பதியாது.

 இப்படிப்பட்ட கோபம் நமக்குத் தேவைதானா?

கோபம் ஒருவரையும் நம்மிடம் அண்டவிடாது.

ஒற்றை மரமாக நிற்க வைத்துவிடும்.

உங்களுக்கு உதவ ஒருவர்கூட இருக்க

மாட்டார்கள்.

கோபம் பெருங்காற்று போன்றது.

அகப்பட்டதை எல்லாம் அள்ளிவீசி

அலங்கோலப்படுத்திவிடும்.

கோபத்தை அடக்கமுடியாமல் செயலில்

இறங்கியதால்தான்  பலர் சிறையில்

கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

கோபம் என்ற தீப்பொறி பற்றிக் கொண்டால்

அது நம்மை அழிகாமல் விடாது.

பிறர் செய்யும் தீங்குக்கு நமக்கு நாமே கொடுக்கும்

தண்டனைதான் இந்தக் கோபம்.

"கோபம் ஒரு குறுகிய காலப் பைத்தியக்காரத்தனம்.

அதை நீ கட்டுப்படுத்தாவிட்டால் அது உன்னைக்

கட்டுப்படுத்திவிடும் "என்பார் ராம கிருஷ்ண

பரமஹம்சர்.

கோபம் எல்லா நற்குணங்களையும் தன் காலுக்குக்

கீழ் போட்டு நசுக்கி அதற்கு மேல் ஏறி அமர்ந்து

கொக்கலிக்கும் கொடிய விலங்கு.

ஒரு கொடிய விலங்கு நம்மை அடிமைப்படுத்த 

விடலாமா?

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் "

என்றார் வள்ளுவர்.

உன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமா?

கோபம் வராமல் காத்துக்கொள் என்பதுதான்

பெரியவர்கள் சொல்லும் அறிவுரை.

வாழத்தானே இந்த வாழ்க்கை.

அப்படியானால்  உங்கள் முன்னேற்றத்திற்கு 

முதல் ஆளாக வந்து  முட்டுக்கட்டையிடும் இந்தக்

 கோபக்காரனைத் தூக்கி வீசுங்கள்.

 கோபம் வந்தால் மடமடவென்று தண்ணீரைக் 

குடித்து விட்டு அந்த இடத்தைவிட்டு

கடந்து போய்விடுங்கள்.

 கோபமும் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்

 என்று எதிர் திசையை நோக்கி 

நடையைக் கட்டிவிடும்.

 கோபத்தைத் தூக்கி எறிந்து விட்டீர்களல்லவா|

கோபப்பட்டு பைத்தியக்காரன் என்ற பட்டம்

வாங்கி அவமானப்பட்டது போதும்.

கோபத்தில் தொடங்குவது அவமானத்தில்தான்

முடியும் என்பதை மனதில் எழுதி வைத்துக்

கொள்ளுங்கள்.

இனி அந்தக் கோபம் வந்தாலே காததூரம்

ஓடுவீர்கள்.

கோபத்தை விட்டுவிட முடிவு செய்து

விட்டீர்களல்லவா!

 இனி சுற்றமும் நட்பும் சூழ

 நீங்கள் வலம் வரலாம்.

 உப்பு சப்பு இல்லாத கோபத்தால்

 நீங்கள் இழந்து போதும்.

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.

 இன்று முதல் கோபத்தோடு கொள்ளுங்கள் பிணக்கு. 

வெற்றியோடு தொடங்கட்டும் உங்கள் கணக்கு.   
       
         

Comments

Popular Posts