முல்லையும் பூத்தியோ?

முல்லையும் பூத்தியோ?


நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்து இவ் வுலகு"
என்றார் வள்ளுவர்.

நேற்று இருந்தவன் இன்று இல்லை
என்று சொல்லப்படும் நிலையாமை 
ஆகிய பெருமை உடையது இவ்வுலகு.

எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார்.

உலகம் என்றால் ஆயிரம் இருக்கும்.
எதையும் தூக்கிச் சுமந்து
மனதில் பாரத்தை ஏற்றிக் கொள்ளாமல்
 சாதாரணமாக கடந்து போக வேண்டும்.
இது பெரியவர்கள் சொல்லித் தரும் பாடம்.

ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா
நேரங்களிலும் எல்லாவற்றையும் எளிதாக
எடுத்துக்கொண்டு நம்மால் கடந்து செல்ல
முடிகிறதா?

சில இழப்புகள் நம்மை புரட்டிப்
போட்டு விடுகின்றன.
காலனையே கேள்வி கேட்க
வைக்கின்றன.
காலத்தின் மீது கோபம்கொள்ளச் 
செய்கின்றன.

தாங்க முடியாமல் விம்மி விம்மி 
அழ வைக்கின்றன.
உள்ளுக்குள்ளேயே வெதும்ப 
வைக்கின்றன.
புலம்பி தவிக்க வைக்கின்றன.
புரியாமல் விழிக்க வைக்கின்றன.
இனி எனக்கு என்ன இருக்கிறது என்று
புலம்ப வைக்கின்றன.

சில நேரங்களில் இறைவனையே 
கேள்வி கேட்க வைக்கின்றன.

இவற்றையெல்லாம் கடந்து ஒருவர்
இயற்கையையே கேள்வி கேட்கிறார்.

ஏன்...ஏன் மகிழ்ந்து மலர்ந்து
சிரிக்கிறாய்?
என்று வெம்புகிறார். வெதும்புகிறார்.
கோபம் கொள்கிறார்.

யாரிவர்? யாரிவர்?

முல்லையும் பூத்தியோ? என்று
முல்லைக்கொடியைப் பார்த்துக் கேள்வி
கேட்கும் யாரிவர்?

எதற்காக இந்தக் கேள்வி?

அறிய வேண்டும் என்று ஆவலாக
உள்ளதல்லவா!

குடவாயில் கீரத்தனார் என்ற புலவர்தான்
இந்தக் கேள்வியை முல்லைக்கொடியைப் 
பார்த்துக் கேட்கிறார்.

முல்லைக்கொடி அதுபாட்டுக்குப்
பூத்துக் கிடக்கிறது.
இவரும் இவர் பாதையில்
செல்ல வேண்டியதுதானே!

முல்லைப் பூத்ததில் இவருக்கு என்ன
கவலை வந்துவிட்டது
என்கிறீர்களா?

அதுதான் பாடல்.
இதோ பாடல் உங்களுக்காக:


"இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் !பாடினி அணியாள்!
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்னை
முல்லையும் பூத்தியோ !
ஒல்லையூர் நாட்டே!"
          -.   புறநானூறு

ஒல்லையூர் கிழான் என்ற மன்னனின்
மகன் பெருஞ்சாத்தன்.

நல்ல வீரன். பாணரும் பாடினியரும்
மகிழும் வண்ணம் வாரி வழங்கும் வள்ளல்.
இனிய பண்பாளன். அவன் இறந்துபோய்
விட்டான் என்ற செய்தி கிடைக்கிறது.
அதிர்ந்து போகிறார்.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து
நிற்கிறார்.
எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது?
கடைசியாக ஒருமுறை என் மன்னனைக்
கண்டுவிட வேண்டும்.
கண்ணீரால் கவிதை எழுதி
காலடியில் வைத்துவிட வேண்டும்
என்று
ஒல்லையூர் நோக்கி விரைகிறார்
குடவாயில் கீரத்தனார் .

காட்டு வழி.
காடெங்கும் முல்லைப்பூ பூத்துக் 
குலுங்கிக் கிடக்கிறது.

தனது மன்னன் மகன் 
இறந்துவிட்டானே என்ற
கவலையில் வந்த புலவருக்கு
பூக்கள் பூத்துக்கிடக்கும்
அழகைக் கண்டு
மகிழ முடியவில்லை.
மாறாக, கோபம் வருகிறது.
இரக்கம் இல்லாது இந்த
முல்லை பூத்துக் கிடக்கிறது
என்று நினைக்கிறார்.

ஊரே கவலையில் இருக்கிறது.
இந்த நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே!
இனி யார் உன்னைத் தீண்டப் போகிறார்கள்?
என்று கேட்கிறார்.

எங்கள் நாட்டு இளம் வயதினர்
உன்னைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்.

வளையல் அணிந்த மகளிர் உன் பூக்களைக்
கொய்துச் செல்ல வரப்போவதில்லை.
யாழைக் கையில் வைத்துப் பாடலிசைத்துக்
கொண்டே வரும் பாணர்கள்
தங்கள் யாழின் தண்டால்
உன்னை வளைத்துப் பறித்து 
தலையில் சூடிக் கொள்வார்களே
அந்த நிகழ்வும் இனி நடைபெறப் போவதில்லை

பாணனே சூடாதபோது 
பாடினி எப்படிச் சூடுவாள் ?
அவளும் உன்னைக் கொய்து
சூடிக் கொள்ளப் போவதில்லை.
பிறகு எதற்காக  யாருக்காக
நீ மலர்ந்திருக்கிறாய்?
என்று ஆத்திரமாகக் கேட்கிறார் .

கேட்பது ஞாயம் தானே!

தன் கவலையை யாரிடம்
சொல்லி ஆறுதல் தேடுவது?
 எனத் தெரியாமல்
முல்லைக்கொடியின் முன்னால்போய்
நின்று நீ செய்வது முறையோ? என்று
முறையிட்டு நிற்கும் புலவரின்
நிலையை என்னவென்பது?

கையறு நிலை பாடவேண்டும்.
அது யாரைப் பார்த்துப் பாடினால் என்ன?
தன் உள்ளக் குமுறலைச் சொல்லி
ஆற்றிக் கொள்ள ஓர் ஆள் வேண்டும்.

காடெங்கும் முல்லையைத் தவிர
வேறொன்றுமில்லை.
முல்லைக்கொடி முன்வந்து
 நிற்கிறார்.
 
முல்லையும் பூத்தியோ?
என்று கேட்டுவிட்டார்.


ஒல்லையூர் நாட்டில் உன்னைச் சூடுவதற்கு
யாருமே இல்லையே!
அப்படியிருக்க நீ ஏன் பூத்தாய்?
எவ்வளவு அருமையான கேள்வி!

 மொத்த உணர்வினையும் சுமந்து,
இலக்கிய இன்பத்தை அனைவரிடமும்
கொண்டு சேர்த்த வரி
முல்லையும் பூத்தியோ?

முல்லையும் பூத்தியோ?  என்று
மறுபடியும் மறுபடியும் நம்மைக்
கேட்கத் தூண்டிய வரி!

புலவரின் உணர்வுகளோடு நம்மை
ஒன்ற வைத்து ஒட்டுமொத்தப் பாடலையும்
தூக்கிப் சுமக்கும் ஒற்றை வரி
முல்லையும் பூத்தியோ!


Comments

Popular Posts