மகன் வந்தான்
மகன் வந்தான்
என்றுமில்லாதபடி அங்குமிங்கும் விடியற்காலையிலேயே எழுந்து கதவைத் திறந்தாள் ராசம்மா.
பெருக்குமாறைக் கையிலெடுத்து தரதரவென்று தரையில் நாலு தேய் தேய்த்த மாதிரி இருந்தது.
அதற்குள் கையில் தண்ணீர் சருவத்தைத் தூக்கி வந்து தெளிக்க ஆரம்பித்தாள்.
எங்குதான் படித்து வந்தாளோ ராசம்மா மாதிரி எல்லா இடமும் ஒரே அளவாக கச்சிதமாக ஒரு ரோபோவால் கூட தண்ணீர் தெளிக்கமுடியாது.
ஒருவேலை முடிந்ததும் மறுவேலைக்கு இடையில் ஒருநிமிட இடைவெளி கூட இருக்காது.
கையில் பாத்திரங்களை அள்ளி வந்து முற்றத்தில் போட்டாள்.பலகை கட்டையை எடுத்து வந்து அதில் உட்கார்ந்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.
யாரோ புதுசா ஆள் வருகிறது போல ஏதோ ஒரு பரபரப்பு மனதில் வந்து ஒட்டிக் கொள்ள படபடவென்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.
மனசு பூரா இன்று வரப் போற மகன் மேலேயே இருந்தது.
ரொம்ப நாளுக்குப் பிறகு வருகிறான். என்ன பண்ண... ஏது பண்ண ....ஒன்றும் தெரியல..
கை காலெல்லாம் ஒரு பதற்றம்..
பெத்த பிள்ளைய பாக்கதுக்கு அப்படி என்ன பதற்றம். ....
அவளுக்கே புரியல...
பையன் டவுணுல வேலை பார்க்கிறான்.
திருமணத்திற்குப் பிறகு இந்த பக்கம் அவ்வளவா வர்றது இல்ல...
அடிக்கடி மாமியார் ஊருக்கு மனைவியோடு பைக்கில் போவதாக பார்த்தவர்கள் வந்து சொல்லுவார்கள்.
அப்போதெல்லாம் அங்கு போயிட்டு வரும் போது வருவான் என்று காத்திருப்பா ராசம்மா.
மறுபடியும் எக்கா ஒங்க மவன் வடக்கமாற பொண்டாட்டியோடு போனான இங்கு வரலயா....
கேட்பவர்களுக்கு "அவனுக்கு என்ன சோலியோ அவசரமா போயிருப்பான்... வருவான்... வருவான் "சொல்லி சொல்லி சாமாளிப்பாள்.
அடுத்தமுறை வரும்போது வருவான்... உதடுகள் சொல்லி சமாளிக்கும் வேலையைச் செய்யும். ஆனால் இதயம் அடுத்தமுறையாவது வர மாட்டானா என ஏங்கும்.....
பெத்த மனசு புள்ளைய விட்டும் கொடுக்காம....தொலைக்கவும் மனமில்லாம...தவியா தவிக்கும்.
இப்படி ஒரு முறையா ...இரண்டு முறையா....
பட்டுத் திருந்துவார்கள் என்பார்கள். இந்தத் தாய் மனசு மட்டும் பட்டும் திருந்தாது.
தூக்கிப் போட்டாலும் ....வந்து தூக்கமாட்டானா.... என்று ஏங்கும்.
அந்த ஏக்கத்திற்கு பதிலாக வந்ததுதான் நாளை வரப்போகிறான் என்ற லேட்டஸ்ட் நியூஸ்.
கேட்ட நேரத்திலிருந்து காலும் ஓடல...கையும் ஓடல....
ஒரு நல்ல சோறு குழம்பு வைத்து கொடுப்பதற்கு கையில் கால் காசு இல்ல....
நல்லா விடியட்டும் ...யாருட்டையாது கைமாத்தா பணம் வாங்கி வந்து கறி வாங்கி சமைக்கணும்.
வந்தா எப்படியும் ஒரு ஐந்நூறு ரூபா துட்டாவது கையில தராமலா போயிடுவான்...
சாயங்காலம் திருப்பி கொடுத்துறலாம்...
மனம் என்னென்ன கணக்கெல்லாமோ போட்டு வைத்தது.
எவ்வளவு நேரமாயிற்று....பாத்திரத்து முன் அமர்ந்ததும் நேரம் போனதே தெரியல..
கையில் பாத்திரங்களை அள்ளி வந்து அடுக்கினாள்..
முந்தானையில் கையைத் துடைத்தபடி வெளியில் வந்தாள்...
யாரிடம் போய் ரூபாய் கேட்பது....கேட்க கூச்சமாக இருந்தது.
இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழி தெரியல்ல...
நேரே தம்பி வீட்டுக்குப் போனாள்..
காலையிலேயே அக்காவைக் கண்டதும்" என்னக்கா காலையிலயே வந்திருக்கா..."
" இல்ல தம்பி என் மவன் வர்றான்... "
" அப்பிடியா இன்றைக்கு கண்டிப்பாக வர்றானாக்கும்....யார் சொன்னா" தம்பியின் பேச்சில் ஒரு எளக்காரம் தெரிந்தது.
"யார் சொல்லுவா.. நம்ம பெருமாளுதான் நேற்று ரோட்டுல பார்த்தானாம்..."
"எந்த ரோட்டுல... "
"நம்ம மேல ரோட்டுலதான்"
" அதான கேட்டேன்... மாமியார் வீட்டுக்குப் போயிருப்பான்..."
ராசம்மாவால எதுவும் சொல்ல முடியல...
" சரி உக்காரு.. நிக்க வச்சே பேசி கிட்டு இருக்கேன் பாரு....ராணி அக்காவுக்கு ஒரு தம்ளர் காப்பி கொண்டா..."
"வேண்டாம் தம்பி..காப்பி குடிச்சுட்டுத்தான் தந்தேன்..."
"ஒருவாய் குடிச்சதுல வயிறு நெறஞ்சு போச்சாக்கும்..."
" இல்ல.. தம்பி..."
தம்பியிடம் கேட்கவா வேண்டாமா?
மனத்துக்குள் ஒரு தாவா ஓடிக்கொண்டிருந்தது.
கேட்டால். ..உனக்கென்ன புள்ள பெரிய பதவியில இருக்கான்
என்று சொல்லிடுவானோ...இருந்தாலும் கேட்டுத்தானே ஆவணும்... ஒரு
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
" தம்பி... ஒரு ஐந்நூறு ரூபா இருக்குமா....சும்மா தராண்டாம் கைமாத்தாதான்..."
கம்மியக்குரலில் பம்மியபடி கேட்டாள்.
அதற்குள் காப்பியை நீட்டிய ராணி, "கையில ஒத்த ரூபா இல்ல...கையில இருந்த பணத்த எல்லாம் போட்டு நேத்துதான்
நன்செய்க்கு யூரியா வாங்கிட்டு வந்துபுட்டாவ..."என்றபடி கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
"ஆமாக்கா...கையல இருந்தா தரமாட்டேனா....நீ ஒரு நாளும் கேட்காதவ கேக்குற..."
தம்பியும் மனைவியோடு சேர்ந்து
இல்லை என்பதை உறுதிப்படுத்தினான்.
ராசம்மாவுக்கு இதுக்கு மேல எங்கு போய் கேட்க என்று தெரியல...
"வர்றேன் தம்பி...."எழும்பினாள்.
" காப்பிய குடிச்சிட்டுப் போ...".
என்றான் தம்பி.
காப்பியை வாயில் வைத்தாள். காப்பி தொண்ட குழிக்குக் கீழ இறங்க மாட்டேன்னுட்டுது...
ஒருவழியா மருந்து குடிப்பதுபோல ஒரே மடக்காக குடித்துவிட்டு எழும்பினாள்.
" மைனி...அந்த சின்னத்தாயி வட்டிக்குக் கொடுக்காளாம்...கேட்ட உடனே தந்துருவா... யாருக்கும் போய் கேட்டுப் பாருங்க...ஆனால்..."
என்று இழுத்தாள்.
என்ன ஆனால் ....என்பது போல தம்பி பொஞ்சாதி முகத்தைப் பார்த்தாள் ராசம்மா.
" ரொம்ப கறார்காரி.பத்து வட்டிதான் ...தரும்போதே வட்டிய பிடிச்சுட்டுதான் தருவாளாம்.. அப்படி பேசிக்கிட்டாவ."
" ஆமாக்கா நானும் சொல்லணும்னு நெனச்சேன்... ராணி சொல்லிபுட்டா...நீ போய் அவகிட்டேயே கேட்டுப் பாறேன்
ஒருவேளை தந்தாலும் தருவாள்."
என்றான் தம்பி.
'" அவ வீட்டுல இருப்பாளா?
நூறுநாள் வேலைக்குப் போவாள்ன்னு கேள்விப்பட்டேன்."
"வேலைக்கு எங்க போவா...
இப்படித்தான் கையெழுத்துப் போட்டுகிட்டு வந்துடுவாள்....நாள் முழுக்க
ஊருல கொடுத்த பணத்துக்கு வட்டி பிடிச்சுகிட்டு அலைவா"
"சரி ...அவளையாவது போய் பார்க்கிறேன்'என்றபடி வெளியில் வந்தாள்.
போறேன் என்று சொல்லிவிட்டு தம்பி வீட்டைவிட்டு வந்தாலும்
சின்னத்தாயி வீட்டுக்குப் போவோமா...
வேண்டாமா கால்கள் கீழத் தெருவுக்குப் போகத் தயங்கின.
சின்னத்தாயி கறார்காரி.
"வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசுவா ...பணத்த சரியா திருப்பி கொடுக்கலன்னா...
நீங்க சோறு திங்கல என் பணத்த வச்சிகிட்டு மறு சோலி பாரு என்று வீட்டு வாசலுல நின்னு கத்துவா..."
வேண்டாம்...வீட்டை நோக்கி நடந்தாள்.
பாதி வழிதான் போயிருப்பாள் கால்கள் திருப்பி இழுத்தன.
போய் கேட்டுதான் பார்ப்போம...
நம்மதான் நாளைக்கே திருப்பி கொடுத்துறலாம...
திருப்பி கொடுத்துட்டா அவள் ஏன் பேசப் போறா...
ஏதோ ஒரு உந்துதலில் சின்னத்தாயி வாசலில் போய் நின்றாள்.
ராசம்மாவை பார்த்த சின்னத்தாயி மவள்"அம்மா புளியமரத்து வூட்டு காரக வந்துருக்காவ..."
என்று குரல் கொடுத்தபடி வீட்டுக்குள்
ஓடினாள்.
"அது யாருல ....அம்மா இல்லன்னு சொல்ல வேண்டியதுதான ..."
"அம்மா...சத்தம் போடாத கேட்கப்போவுது..
அவிய வாசலில் நிற்காவ"
என்று அம்மாவுக்கு பதில்கொடுத்தாள் மகள்.
" கேட்கட்டும்....அது எந்த வூட்டுக்காரக ... நானும் பாத்துபுடியேன்..."கொண்டையை முடித்தபடியே வாசலுக்கு வந்தாள் சின்னதாயி.
"எக்கோ நீங்களா....
புளியமரத்து வூட்டுக்காரவன்னதும்
நான் மேலத்தெரு
தங்கம்மன்னு நினைச்சேன்.
.என்ன ஒருநாளும் வராதவுக வந்துருக்கிய....
வெளியிலே நிக்குறிய வாங்க வீட்டுக்குள்ள..." என்று அழைத்தாள் சின்னத்தாயி.
"இல்ல சும்மாதான்... இந்தப்பக்கமா வந்தேன்"வார்த்தைகள் வெளி வர முடியாமல் தொண்டைக்குள்ளே திக்குமுக்காடின.
" என்னக்கா எதும் பணம் கிணம் வேணுமா...உங்களப் பாத்து அப்படி கேட்கப்புடாது... உங்கப்புள்ள நல்ல வேலையில இருக்காவ.என் வீட்டுக்கு வந்திருக்கியள அதான் கேட்டேன்..."
என்று பணம் கொடுக்கல் வாங்கல்காரிக்கான
சாமர்த்தியமான பேச்சில் தொடங்கினாள்.
" ஆமா...அது ஒண்ணும் இல்ல.ஒரு ஐந்நூறு ரூபா கிடைக்குமா... இரண்டு நாளையில தந்துருவேன்...."
கேட்கும்போதே உடலெல்லாம் அவமானத்தால் குறுகிப் போனது.
"நீங்க தந்துருவிய...உங்க பிள்ள நல்ல வேலையில இருக்காவுள...
எக்கோ மகன் வந்துபோயி இருப்பாவளா..."
என்று ஒரு தயக்கத்தோடு பேச்சைத் தொடர்ந்தாள் சின்னத்தாயி.
" இன்றைக்கு வர்றான்.." இப்போது
சொல்லும்போதே குரலில் சற்று தெம்பு வந்தது.
"எவ்வளவு ரூபா வேணுங்கா .ஐந்நூறு போதுமா..".தாய் தராட்டும் மகன்கிட்ட ஒருநாள் வாங்கிபுடலாம் என்ற நம்பிக்கையில் பேசினாள் சின்னத்தாயி.
"ஐந்நூறு ரூபா..போதும்"
கூடுதல் வாங்கினால் திருப்பி
கொடுக்க முடியுமோ முடியாதோ என்ற
அச்சம் இருந்தது.
"இவ்வளவுதானா....இதக்கேக்குறதுக்கு ஏன் தயக்கம்.."கேட்டபடியே சுருக்கு பையைப் பிரித்து பணத்தை எடுத்தாள்.
"எல்லாருக்கும் வட்டிய புடிச்சுட்டுதான் கொடுப்பேன்... ஒருநாளும் கேட்காதவுக கேக்குறிய. அதான் வட்டி புடிக்கல.."என்றபடி பணத்தை எடுத்து ராசம்மாவிடம் நீட்டினாள்
சின்னத்தாயி.
பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட ராசம்மா" உடனே தந்துருவேன்.பயப்படவேண்டாம்."என்றாள்.
"அட...போக்கா...நீ தந்துருவ...
எனக்குத் தெரியாதா"
" வாறேன்.. சின்னத்தாயி ..."வாய் சொன்னாலும் மனசுக்குள் ஏதோ ஒரு கவலை வந்து அப்பிக் கொண்டது.
வர்ற வழியிலேயே சமையலுக்கு வேண்டிய எல்லா சாமானும் வாங்கினாள் .
நேரே கறிக்கடைக்குப் போய்
அரைக்கிலோ
ஆட்டகறியும் வாங்கினாள்.
ஓடி வந்து தடபுடலாக வேலையைப் பார்த்தாள்.
ஒருமணி நேரத்துக்குள்ள எல்லாம் முடித்தாயிற்று...
மணியும் பன்னிரண்டு ஆயிற்று..
கையைத்துடைத்தபடி தெருவை...தெருவை எட்டிப் பார்த்தாள்.
அவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல கார் ஒன்று வாசலில்
வந்து நின்றது.
ராசம்மாவுக்கு உடம்பெல்லாம் படபடத்தது.ஓடிப் போய்
"வாய்யா..வா. .".என்றபடி கையைப் பிடித்தாள்.
" நல்லா இருக்கியாம்மா..."மருமகளையும் அழைத்தபடி வீட்டுக்குள் சென்றாள்.
"எம்மா...வீட்டுக்குள்ள வருமுன்ன வாசன வாசல்வர வருது...
கறிக்குழம்பா அம்மா...
என் அம்மா வச்சா இப்படித்தான் நாலு தெருவுக்கு மணக்கும் ."வந்ததும் வராததுமாக அம்மா சமையலுக்கு வாழ்த்துப்பா வாசிக்க ஆரம்பித்தான் மகன்.
'ம்ஊம்...'மனைவியின் முக்கல் காதில் விழவே அப்படியே அடங்கிப் போனான்.
"அப்பா.... எங்க அப்பாவ காணோம்..."
மகனின் கண்கள் அப்பாவைத் தேடின.
" வேறு எங்க போயிருப்பாரு... தோட்டத்துப் பக்கம் போயிருப்பாரு..."
" ஆமா... தோட்டத்துல என்ன பயிர் போட்டுருக்கும்மா '
விசாரித்தான் மகன்.
என்ன பயிர் போட.....
கிணத்துல தண்ணி சரியா இல்ல.
ஒரு அரைமணி நேரம்தான் தண்ணி பாய்க்க முடியுது.அதுதான் கிணத்தச் சுத்தி
ஒரு வயலுல வீட்டுக்குப் போல
காய்கறி நட்டுப் போட்டுருக்கோம்.
வேறு ஒண்ணும் இல்ல.."
என்று விவசாயம் சரியில்ல என்பதை
சொல்லி வைத்தார் ராசம்ம.
"காய்கறி கிடக்குதா ..அப்பாகிட்ட பறிச்சுட்டு வரச் சொல்லணும..." என்றான் மகன்.
" பறிச்சுட்டு வருவாரு...நீ கேக்கணுமா...அதுக்குத்தான் தோட்டத்துக்குப் போயிருப்பாரு..."
" வா...நேரம் ஆகுதுல்ல...நீ சாப்பிடு... அப்பா வந்துடுவாரு..."
" எம்மோ உன் சாப்பாட்ட ஒரு புடி புடிச்சிற வேண்டியதுதான்..."சொல்லிவிட்டு நேரே போய்
சாப்பிட உட்கார்ந்தான்..
அதற்குள் அப்பாவும் கையில் கோணிப் பை நிறைய காய்கறிகளைச் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தார்.
"தம்பி எப்புடிப்பா இருக்க....அம்மாதான் சதா புலம்பிகிட்டு இருப்பா...அப்பப்போ ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப்போப்பா...ஒரே தேட்டமா இருக்கு "என்றார் அப்பா.
"ம்..."என்றபடி அம்மாவைப் பார்த்தான்.
அம்மா திரும்பி நின்றபடி தோள் சீலையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
"அம்மா...கொஞ்சம் குழம்பு ஊற்றுங்க..".பக்கத்தில் இழுத்தான்.
"என்னம்மா...கண்ணு சிவந்துருக்கு..."
"ஒண்ணுல்லப்பா...நீ வாறான்னு கையால மசாலா அரைச்சேனா...ஒரப்பு கண்ணுல பட்டுட்டு..."மறுபடியும் கண்களைத் துடைத்தார்.
"கண்ணை கசக்காதுங்க....தண்ணி வச்சி கழுவுங்கம்மா..".எழும்பி வந்து கையைப் பிடித்தான்.
"கழுவுறேன்....கழுவுறேம்பா நீ சாப்பிடு..."என்றபடி வீட்டிற்குப் பின்னால் போய் நின்று முகத்தைத் துடைத்தாள்.
துடைக்கத் துடைக்க கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.
ஒரு செம்பு தண்ணீர் எடுத்து கழுவினாள். கண்ணீர் வந்த சுவடு தெரியாதபடி முந்தானையால் நன்றாக துடைத்தாள்.
"ராசம்மா அங்க என்ன செய்யுற... புள்ளக்கு இன்னும் சோறு வேணுமான்னு கேட்டியா"...
குரல் கொடுத்தார் அப்பா.
இதோ வந்துட்டேன்.".கொஞ்சம் கறி வைக்கட்டுமாப்பா"
"போதும்மா... திருப்தியா சாப்பிட்டாச்சி.."
எழும்பி கை கழுவி விட்டு வந்தவன் "அப்போ நான் புறப்படட்டுமா அம்மா... "என்றபடி மனைவியைப் பார்த்தான்.
கணவன் சொல்லுக்குக் காத்திருந்தவள் போல "வரட்டுமா அத்த"..என்றாள் மருமகள்.
ராசம்மா மகனின் முன்னால் வந்து நின்றாள். அப்பா கோணிப்பையைத் தூக்கி காரில் வைத்தார்.
" அம்மா அப்போ கிளம்பட்டுமா....உடம்ப பத்திரமா பாத்துக்க..."
என்று சொன்னபடியே மனைவியைப் பார்த்தான்.
" இந்தாங்க அத்த...கைச்செலவுக்கு வச்சுகிடுங்க.."200 ரூபாவைக் கையில் திணித்தபடி காரை நோக்கி நடந்தாள் மருமகள்.
மனைவியின் பின்னால் போய் காரில் அமர்ந்து கொண்டு கையை அசைத்தான்
மகன்
அம்மாவும் பதிலுக்கு மருமகள் தந்த இருநூறு ரூபா நோட்டோடு சேர்த்து கையை அசைத்தாள்.
தெரு மறையும் வரை கையசைந்து
கொண்டே இருந்தது.
அவன்தான் போயாச்சே இன்னும் நின்னு
யாருக்குக் கையாட்டுற... என்ற குரல் கேட்டுத்
திரும்பிய ராசம்மாவின் கண்கள்
இருநூறு ரூபாய் நோட்டை
மறுபடியும் பார்த்தன.
முந்நூறு ரூபாய் யாரிடம் வாங்கி கடனை அடைப்பது என்பது மட்டுமே இப்போது ராசம்மா மனதிற்குள்
ஓடிக்கொண்டிருந்தது.
Comments
Post a Comment