கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே 


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்

கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்-

பெண்ணே

பேதை என்றழைக்க வைத்து பெருமிதம்

தந்தாய்!



வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய் 

விளையாட்டே உலகமென நினைத்தாய் 

விளையாட்டுக்காட்டி வீதிக்கு இழுத்தாய்- பெண்ணே

பெதும்பையாய்ப் பேரன்பு செய்தாய்!



உணர்ந்ததை உரையாய் உதிர்த்தாய்

உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய்

மமதையில் மனமதைக் கவர்ந்தாய்- பெண்ணே

மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்!


மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய்

மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய் 

மயங்கிட வைத்து மனமதை துவைத்தாய்- பெண்ணே

மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்!


 இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய்

இமையாய் இருந்து எம்மைக் காத்தாய்

இல்லமெங்கும் மகிழ்வால் நிறைத்தாய்- பெண்ணே

அரிவையாகி அன்பால் எம்பால் கலந்தாய்!


 உலக விழுமியம் சொல்லித் தந்தாய்

 உன்னில் எம்மை கண்டிட வைத்தாய்- 

  உலகொடு உடன்  நடைபயின்றாய்- பெண்ணே 

தெரிவை யானென்று  தெரிய வைத்தாய்!


ஊராண்மையோடு வீட்டாளுமை செய்தாய்

பேராண்மையில் பேருவகை கொண்டாய்

போராளியாய்ப் பெரும் பேராழியாய் - பெண்ணே

பேரிளம் பெண்ணாகிப் பேரறம் புரிந்தாய்!




எத்தனை எத்தனை பாத்திரம் ஏற்றாய் 

எப்படி இப்படி  வியந்திட வைத்தாய்

கண்ணின் கருவிழி என்றானாய்- பெண்ணே 

காலமெல்லாம் என் வாழ்வே நீயானாய்!



இனிய மகளிர் தின வாழ்த்துகள்!



                                                  

 

Comments

Popular Posts