சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமா
சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமா
சொர்க்கத்திற்குச் செல்ல யாருக்குத்தான் ஆசை இல்லை. அனைவர்க்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வழியைத்தான் சொல்லித் தருவார் இல்லை.
என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன் தான தர்மம் செய்கிறேன்.
ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கிறேன்.ஆனாலும் சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா என்று குழப்பமாகவே இருக்கிறது.
இப்படி குழம்பிய மனநிலையில் இருக்கிறீர்களா?
ஒன்றுக்கும் கவலை வேண்டாம். சொர்க்கத்துக்குத் தானே போக வேண்டும். சரியான வழி இது என்று காட்டுகிறார் ஒரு புலவர். வாருங்கள் அந்த வழிதான் என்ன என்று பார்த்துவிடுவோம்.
"குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப்
பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகுஞ் சுவர்க்கத் தினிது"
- சிறுபஞ்ச மூலம்
பொருள் புரிகிறதா?
இல்லையா?
உங்களுக்கு சொர்க்கத்திற்குத்தானே செல்லவேண்டும்...உடனே இதைச் செய்யுங்கள் .
நேரே சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம் என்கிறார் செய்யுங்கள் என்கிறார் காரியாசான்.
என்ன செய்ய வேண்டும்?
புரியும்படிச் சொல்லுங்கள்
என்கிறீர்களா?
குடிநீர் தேங்கும் குளங்களை அமைத்துத் தாருங்கள்.
எல்லா உயிர்களும் நீரருந்தி உயிர் வாழட்டும்.
மரங்களை நட்டு நல்ல காடுகளை வளருங்கள்.தூய காற்று கிடைக்கட்டும்.
காடுகளில் செல்வதற்கு நல்ல வழிகளை ஏற்படுத்தித் தாருங்கள்.பாதை செவ்வனே அமைந்தால் போக்குவரத்து எளிதாக இருக்கும்.
உள்ளன்போடு உழுதுண்ண வயல்களை உண்டாக்கிக் கொடுங்கள். விவசாயம் நல்ல முறையில் நடைபெறட்டும்.
நல்ல இனிமையான நீர் ஊறும் கிணறுகளை வெட்டுங்கள்.மக்கள் தாகம் தீர்த்துக் கொள்ளட்டும்.
இப்படிப்பட்ட ஐந்து அறச்செயல்களைச் செய்யுங்கள் .
உங்களுக்கு சொர்க்கம் செல்லும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு .
அதாவது சொர்க்கம் செல்லும் வாய்ப்பு யாருக்குத் கிடைக்கும் என்றால் நீர்நிலைகளை உருவாக்கித் தருபவர்களுக்கே சொர்க்கம் செல்லும் வாய்ப்பு கிட்டுமாம்.
நல்ல கருத்து.
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழச் சொல்லித் தந்த பாடல்.
நீரின்றமையாது உலகு. அந்த நீராதாரத்தைப் பெருக்குவதுதான் சிறந்த அறச் செயலாக கருதப்படும் என்பது இதுவரை நாம் நினைத்துப் பார்த்திராத மாறுபட்ட சிந்தனை இல்லையா?
நல்ல சிந்தனை.
சொர்க்கம் செல்லும் பாதையை கைகாட்டி விட்டார் புலவர்.
வேறென்ன?
உடனே பயணத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான் ...இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக