ஈஸ்டர் முட்டையின் வரலாறு

 ஈஸ்டர் முட்டையின் வரலாறு
ஈஸ்டர் என்றதும்  
 இறைமகன் ஏசு உயிர்த்தார் 
 என்பதுதான் நினைவுக்கு வரும்.
கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது
கிறிஸ்துவின் பிறப்பு.

கூடவே கிறிஸ்துமஸ் தாத்தாவும் 
நினைவுக்கு வருவார்.
கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்கள்
கொண்டு வருவார் என்று குழந்தைகள்
தூங்காமல் காத்திருப்பர்.

அதுமட்டுமா....கிறிஸ்துமஸ் என்றால் 
 கேக் இல்லாமலா...என்ற கேள்வியும் எழும்.
வகைவகையான கேக் தயாரித்து 
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்
கொடுத்து மகிழ்வதில்தான் பண்டிகை கால
மகிழ்ச்சியே இருக்கிறது.

 கிறிஸ்துமஸ் என்றால் கேக் என்பதுபோல
 ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது முட்டை.
 
ஆனால் இந்த முட்டைகளைக் கொடுத்து
"இயேசு உயிர்த்தெழுந்தார் "என்று வாழ்த்துச்
சொல்லியிருக்கிறோமா என்றால்...
இல்லை என்பதுதான் பலரின் பதிலாக
இருக்கும்.
 ஏன் முட்டையைக் கொடுத்து வாழ்த்துச் சொல்ல
 வேண்டும் என்கிறீர்களா? 

ஈஸ்டர் நாளின் சிறப்பே 
முட்டையில்தாங்க இருக்கிறது.

 இந்த ஈஸ்டர் முட்டையில் பெரிய வரலாறே
 அடங்கியிருக்கிறது.
 
முட்டை உயிர்த்தெழுதலின் அடையாளம்.

முட்டைக்கும் கிறிஸ்து உயிர்தெழுதலுக்கும் 
நெருங்கிய தொடர்பு 
இருந்ததாக ஹீப்ரு மொழி கதைகள் கூறுகின்றன.
மறுபிறப்பின் அடையாளமாக முட்டை
இருந்து வந்திருக்கிறது.
பழைய காலத்தில் புதிய வாழ்வின்
குறியீடாகவே முட்டை பார்க்கப்பட்டதாம்.

இந்த ஈஸ்டர் முட்டையைப் பற்றி
மாறுபட்ட கதைகளைக் 
கூறி வருகின்றனர்.

யூதர்களின் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் 
இருந்து வந்திருக்கிறது. அந்த நாளில்
வேக வைக்கப்பட்ட முட்டைகள் உப்புநீரில்
முக்கப்பட்டு ஜெருசலேம் கோயிலில்
பண்டிகைக் கால காணிக்கையாக
வைப்பது அக்கால மக்களின் வழக்கமாக
இருந்து வந்திருக்கிறது.

பஸ்கா பண்டிகை வாழ்த்து கூறும்போது
முட்டைகளைத் தந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
என்று வாழ்த்தும் வழக்கம் 
நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

இந்த ஈஸ்டர் முட்டையில் சிவப்பு முட்டை
பற்றிய கதைகள் சுவாரசியமானது.

இயேசு மரித்த மூன்றாம்நாள் 
அதிகாலையிலேயே  இயேசுவைக் காண 
மகதலேனா மரியாள்
மற்றொரு பெண்ணுடன் கல்லறைக்கு
வருகிறார். வரும்போது உண்பதற்காக 
கையில் வேக வைத்த முட்டைகளையும் ்
கொண்டு வந்திருந்தாராம்.
கல்லறைக்கு வந்த மகதலேனாவிடம்
மரித்த இயேசு உயிர்த்தெழுந்த 
நற்செய்தி சொல்லப்படுகிறது .

அவர் இயேசுவைக் காண வேண்டும் என்று
அங்கிருந்து திரும்பிச்  செல்கிறார்.
இயேசுவை வழிலேயே பார்த்துவிடுகிறார்.
உயிர்த்தெழுந்த இயேசுவைப் பார்த்ததுமே
மகதலேனா கையிலுள்ள முட்டை சிவப்பு
நிறமாக மாறிவிட்டதாம். 
அதனால் முட்டை இயேசு உயிர்த்தார்
என்பதற்கான அடையாளம் என்கின்றனர்.

இப்படி ஒரு கதை இருக்க
மற்றுமொரு சாரார் வேறுவிதமான
ஒரு கதையைக் கூறுகின்றனர்.

மகதலேனா இயேசு உயிர்த்தெழுந்து
விண்ணுலகுக்குச் சென்றுவிட்டார்
என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரிடமும்
சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
முதலாவது மன்னனிடம் போய் சொல்ல வேண்டும்
என்று அரண்மனையை நோக்கி
ஓடுகிறார்.
ரோம மன்னனிடம் போய் "என் இயேசு 
உயிர்த்தெழுந்தார் "என்று கூறி
வாழ்த்து சொல்கிறார்.
மன்னனுக்கு அதிர்ச்சி.

" அது எப்படி மரித்தவர் உயிரோடு எழும்பி
 இருக்கமுடியும் ? அதை நான் எப்படி
 நம்புவது? "என்று சந்தேகத்தோடு மகதலேனாவைப்
 பார்க்கிறார் மன்னர்.
 
இதனை  எப்படி மெய்ப்பிப்பது என்ற குழப்பத்தோடு
 மகதலேனா நின்றிருக்கும்போது
 மன்னர் தன் வேலைக்காரரிடம்
 ஒரு முட்டையை எடுத்துவரச் சொல்கிறார்.
 முட்டை கொண்டு வந்து மேசைமேல் 
 வைக்கப்படுகிறது.
 
".இந்த வெள்ளையான முட்டை சிவப்பாக
மாறும்வரை நான் இயேசு உயிர்த்தெழுந்தார்
என்பதை நம்பப் போவதில்லை" என்கிறார் மன்னர்.

எல்லோரும் என்ன நடக்க போகிறதோ 
என்று காத்திருக்கின்றனர்.

சற்று நேரத்தில் முட்டை சிவப்பாக மாறிவிட்டதாம்.
அதன்பிறகுதான் மன்னர் இயேசு 
உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை 
நம்பினாராம்.இப்படி ஒரு கதையும் உண்டு.

எது எப்படியோ முட்டை இயேசு
உயிர்த்தெழுந்தார் என்பதின் அடையாளமாக
இருந்து வந்திருந்திருக்கிறது என்பது மட்டும்
உண்மை.

முட்டையைப் புதிய வாழ்வுக்கான அடையாளமாகவே
மேற்கத்திய நாடுகளில் பார்க்கின்றனர்.
முட்டையோடு சேர்ந்து முயலும் இந்த ஈஸ்டர் முட்டை
கதையில் இணைந்துள்ளதை நாம் அறிய 
முடிகிறது.
கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய
சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர்
இயோஸ்டர் எனப்படும் வசந்த கால 
தேவதையை வணங்கி வந்தனராம்.
இந்தத் தேவதைக்கு 
 சம இராப்பகல் நாளான மார்ச் 21 ஆம்
நாள் விருந்து படைத்து மகிழ்வது
அவர்களது வழக்கம்.அதன்படி
விருந்தில் முட்டை பறிமாறப்படுகிறது.
இந்த தேவதையின் விருப்பமான விலங்காக
முயல் இருந்து வந்திருக்கிறது.

எப்போதும் தேவதையோடு முயலும் இருக்குமாம்.
இந்தத் தந்திரக்கார முயல்கள் 
முட்டைகளை எடுத்து மறைத்து வைத்து
விடுமாம்.அந்த முயல்களிடமிருந்து
முட்டைகளை கண்டுபிடிப்பது
ஒரு சுவாரசியமான நிகழ்வாக
அன்றைய காலகட்டத்தில் இருந்திருக்கிறது.
இப்படி முட்டையோடு முயலுக்கும்
தொடர்பு இருந்திருக்கிறது.
அதனால்தான் இன்றும் ஈஸ்டர் வாழ்த்து
அட்டைகளில் முட்டைகளோடு
முயலும் இருப்பதைக்
காணலாம்.

சாக்லேட் முட்டைகள், ஜெல்லி பீன்கள்
போன்ற உண்ணக்கூடிய பொருட்களை
பிளாஸ்டிக் முட்டைகளில் வைத்து முயல்
தந்திரமாக மறைத்து வைத்திருக்குமாம்.

குழந்தைகள் அதனைத் தேடி கண்டுபிடிப்பது
ஈஸ்டர் விளையாட்டுகளுள் முக்கியமான
விளையாட்டாக இன்றும் பல நாடுகளில்
 நடைபெற்று வருவதைக் காணலாம்.

வசந்த காலத்தில் பூமி
துளிர்த்து நிற்பதை  முட்டையிலிருந்து
குஞ்சு பிறப்பதுபோல உருவகப்படுத்திப்
 பார்த்திருக்கின்றனர்.
 உயிர்த்தெழுதல்  நிகழப் போவதற்கான 
 ஒரு அடையாளமாகவே முட்டையை
மக்கள் பார்த்தனர்.
முட்டையானது கல்லறையின் குறியீடாகவும்
அதனை உடைப்பதன்மூலம் வாழ்க்கை
புதுப்பிக்கப்படுகிறது அல்லது
மீட்டெடுக்கப்படுகிறது என்பதும்
சுட்டிக்காட்டப்படுகிறது.

ஈஸ்டர் நாளில் ஸ்காட்லாந்து, வட இங்கிலாந்து
 போன்ற நாடுகளில் வண்ணம் பூசப்பட்ட 
 முட்டைகளை உயரமான மலையிலிருந்து 
 உருட்டிவிட்டு விளையாடும்
வழக்கம் இன்றும் நடைபெற்று வருகிறது.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில்
ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும்
நிகழ்வு சமதளத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு 
சிறுவர்களை
தேடி கண்டுபிடிக்க வைக்கும் விளையாட்டு
இன்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில்
நடைபெற்று வருகிறது.

ஈஸ்டருக்கான முட்டைகளை வேக
வைக்கும்போது வெங்காயச் சருகுகளையும்
சேர்த்து வேக வைப்பராம். 
அதனால் முட்டை சற்று சிகப்பு
நிறமாக மாறிவிடுமாம்.

வட இங்கிலாந்தில் முட்டை அமுக்குதல்,
முட்டை தட்டுதல்
முட்டை ஜார்ப்பிங் போன்ற பல முட்டை
விளையாட்டுகள் ஈஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டில் கடைசிவரை
முட்டையை உடையாமல் பாதுகாத்து
வைத்திருப்பவரே வெற்றியாளராவார்.

தோல்வியடைந்தவர்கள் உடைந்த 
முட்டையை உண்ண வேண்டும்.

ஈஸ்டர் பண்டிகை நாளில் முட்டை நடனமும் 
சில நாடுகளில் நடைபெற்று வருவதைக் காணலாம்.
முட்டைகளுக்கு நடுவே 
முட்டைகள் உடையாதபடி
நடனம் ஆடுவதுதான் இந்த நடனத்தின்
சிறப்பு.
இந்த நடனம் பார்ப்பதற்கு 
 திகிலாக இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் லெந்து நாட்களில் 
முட்டை தடை செய்யப்பட்ட 
உணவாக இருந்து வந்திருக்கிறது.

கிழக்கத்திய நாடுகளில் இறைச்சி, 
பால்படு பொருட்களும்
லெந்து காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.

லெந்துகாலம் தொடங்குவதற்கு முந்தைய
செவ்வாய்க்கிழமை கடைசியாக 
முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வார்களாம்.
 அதன் பின்னர் நாற்பது நாட்கள் 
 முட்டையைக் கையில் எடுப்பதில்லை.
மறுபடி ஈஸ்டர் நாளில் 
வாழ்த்து சொல்வதற்காகத்தான் 
முட்டையைக் கையில் எடுப்பார்களாம்.

அதை நினைவுபடுத்துவதற்காகத்தான்
இன்றும் முட்டை வடிவ சாக்லெட் 
கொடுத்து வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

அடேங்கப்பா... முட்டைக்கும் ஈஸ்டருக்கும்
இத்தனை தொடர்பா?
வியப்பாக இருக்கிறதல்லாவா!

இதோ ...முட்டையோடு இயேசு உயிர்த்தெழுந்த நாள்
வாழ்த்து உங்கள் இல்லம்தேடி வருகிறது.
பண்டிகைநாள்  மகிழ்ச்சி உங்கள் இல்லங்களிலும்
உள்ளங்களிலும்  நிரம்பி வழியட்டும்.

   


Comments

Popular Posts