அன்பிலாள் இட்ட அமுது
அன்பிலாள் இட்ட அமுது
பந்தியில் சாப்பிட அமர்ந்ததும்
எப்போது சாப்பாடு பரிமாறுவார்கள்.
சாப்பிடலாம் என்று தோணும்.
அதற்குக் காரணம் கண்முன்னே வந்து போகும்
சாப்பாடும் அதன் மணமும்
மட்டுமல்ல. அங்கே உணவு பரிமாறும்
முறையும் விழுந்து விழுந்து கவனிக்கும்
சில கனிவான மனிதர்களுமாகத்தான் இருக்கும்.
மாறாக
பத்தியில் அமர்ந்திருப்போம்.
ஆனால் சாப்பாடு பரிமாறுகிறவரின்
பார்வையும் நடந்துகொள்ளும் விதமும்
நம்மை ஏன்தான் இங்கு சாப்பிட வந்தோமோ என்று கேள்வி எழுப்ப வைக்கும் .சாப்பிட விடாமல் தடுத்து நிற்கும்.
அதனால்தான் ஔவை,
"உண்ணீர் உண்ணீர் என்று
ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடியுறும்"
என்று சொல்லித் தந்தார்.
கொடிது கொடிது பசி
மிகமிகக் கொடிது என்பது உண்மை.
'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பார்கள்.
பசி ருசி அறியாது.பசியில்
யார் எவர் உணவு தருகிறார் என்று ஆராய்ந்து பார்க்க முடியாது.
எந்த இடத்தில் இருந்து சாப்பிடுகிறோம் என்று எண்ணத் தோன்றாது.
பசி, தரம் தராதரம் என்று எதையும்
பார்க்காது.
இதுதான் பசியின் குணம்.
இப்படித்தான் ஒருமுறை ஔவையாரையும் பசி
வாட்டி வதைத்தது. ஆனால் யாரிடமும் கேட்டு வாங்கி உண்ண மனம் ஒப்பவில்லை. அப்போது ஒருவர் ஔவையை தன் வீட்டில் வந்து உணவருந்தும் படி கேட்டுக் கொள்கிறார். ஔவை ஏற்கனவே அந்த மனிதரின் மனைவியைப் பற்றி நன்கு
அறிவார்.அதனால் அந்த மனிதர்
அழைத்ததும் சற்று தயங்கினார்.
ஔவையின் தயக்கத்தை அறிந்த அந்த மனிதர் மறுபடியும் மறுபடியும் வருந்தி அழைத்துப் பார்த்தார்.
அந்தக் கணவனின் நல்ல உள்ளத்திற்குக் கட்டுப்பட்டு அவரின் பண்பிற்காக ஔவை அந்த மனிதர் வீட்டினுள் சென்று
உணவருந்த அமர்ந்தார்.
அந்தக் கணவனுக்கு ஒரே மகிழ்ச்சி, எப்படியோ இந்த அம்மையை உண்ணச் சம்மதிக்க வைத்து விட்டோம் என்று பெருமிதம் கொண்டார்.அந்த மனநிறைவு அவர் முகத்தில் தெரிந்தது.
அப்போது அவன் மனைவி என்னும் அகங்காரி வந்து உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும் நடந்து கொண்ட தன்மையும் ஔவையை வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.
ஔவை அன்புக்குக் கட்டுப்டுப்பட்டவர்.அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் அனலாகக் கொதித்தது.
தன் முன்னர் படைக்கப் பட்டிருந்த சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்.
அதற்கு மேலும் அவரால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை.
அப்படியே எழுந்து வெளியே
போய்விட்டார்.
அந்த அப்பாவிக் கணவன் ஔவையின் பின்னாலேயே ஓடி வந்தான்.
“அம்மையே! உங்களுக்குக் கடுமையான பசியென்பதனை நான் அறிவேன். ஏதோ அவள் குணம் அப்படித்தான் .நடந்ததை நினைத்து மனம் வருந்த வேண்டாம் .விட்டுத் தள்ளுங்கள்.
அதற்காக நீங்கள் என் வீட்டில் உண்ணாமற்போவது கூடாது" என்று மிக வருத்திக் கேட்டுக் கொண்டான்.
அவன் மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்டவன். தன் மனைவியால் ஔவை பசியாறாமல் செல்வதை அவன் மனம் ஏற்கவில்லை . பசியின் கொடுமையை அவன் அறிந்தவன்.தன்னால் ஔவை வேதனையோடு செல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அதனால் மீண்டும் மீண்டும் மன்றாடினான். அப்போது ஔவை ,
"காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதேமாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோஅன்பில்லாள் இட்ட அமுது."
என்று பாடி முடித்தார்.
அதாவது
"தம்பி! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகிறதப்பா.. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே என் உள்ளம் நாணுகிறது.
என் வாய் தமிழ் பாடிப் பெருமை பெற்றது. அந்த உணவை ஏற்கத் திறக்க மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வேன்?
என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்பது ஔவை பாடிய
இந்தப் பாடலின் பொருள்.
ஔவையின் பாடலைப் படிக்கப் படிக்க அவரின் உள்ளக் கொதிப்பு நமக்குப் புரிகிறது .
ஏன் உணவு உண்ண மறுக்கிறார் என்ற உண்மை காரணம் தெரிகின்றது.
ஔவை பெண்கள்பால் அதிக அன்புடையவர்.
எனினும் பெண்ணுருவில் அந்த மனையுள் பேய் இருப்பதனைக் கண்டதும் கொதிப்படைந்தார் என்பதுதான் உண்மை.
அவளை ஔவையால் ஒரு பெண்ணாகவே
பார்க்க முடியவில்லை.
அன்போடு அளிக்கும் கூழையும் வியந்து உண்டு பாராட்டுக்கவி பாடி களிப்படைய வைக்கும் கனிவான உள்ளம் ஔவையுடையது .
அந்தக் கனிவு இன்று
காணாமல் போனது.
கனன்று போனது.
அதனால்தான்,
அன்று கூழுக்குப் பாடியவள்
இன்றுஅமுதே யானாலும்
உண்ணேன் என மறுக்கிறாள்.
உப்புக்கும் பாடுவேன் . புளிக்கும்
பாடுவேன் என்று ஒப்புதல் வாக்களித்தவள்
அமுதே ஆயினும் என் வாய் திறவாது
என்று மறுத்துரைக்கிறாள்.
"அன்பிலாள் இட்ட அமுது. பார்க்கக் கண் கூசுது" என்று அவள் கணவனிடமே நேருக்கு நேராக சொல்லி விட்டாள்.
'மாணொக்க வாய் என்னுடையது. அதாவது தமிழ்ப்பாடும் இந்தப் புனிதமான வாய் உன் மனைவி இட்ட அமுதை உண்பதற்காகத் திறக்க மறுக்கிறது."
என்று தான் உண்ணாமல் எழுந்து செல்வதற்கு இவைதான் காரணம்
என்று சரியான காரணத்தையும் சொல்லிஅவனைப் புரிய வைத்துவிட்டார்.
கண்ணும் கூசுகிறது.
வாயும் திறக்க மறுக்கிறது.
பிறகு எப்படிப்பா உன் வீட்டில் உண்ண
முடியும்?
சரியான கேள்வி தானே கேட்டிருக்கிறார்.
Comments
Post a Comment