வீரத்தாய்
வீரத்தாய்
போரில் விழுப்புண் பெற்று வீர மரணமடைந்த வீரர்களை உலகம் கொண்டாடும்.
வீரன் என்று போற்றும்.
ஊர் போற்றட்டும்.
உற்றார் உவக்கட்டும்.
பெற்றோர் உவக்கலாமா?
பெற்ற பிள்ளை போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான்.எந்தப் பெற்றோரும் பதறியடித்துக் கொண்டு
போர்க்களம் நோக்கி ஓடுபவர்.
இங்கேயும் ஒரு தாய் ஓடுகின்றாள்.
ஓட்டம் மகனைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் மட்டுமல்ல. அவன் எப்படி
இறந்தான் என்பதை யான் அறிய வேண்டும்.
என்பதுதான் அந்தப் பெண்ணின்
ஆர்வம்.
இறந்து பட்டான் என்ற சொல் அம்பாக நெஞ்சைத் தைக்க
பேச்சுமூச்சற்று கீழே சாயவில்லை.
மூலையில் இருந்து ஒப்பாரி வைக்கவில்லை.
பேசுகிறாள்.
இறந்த என் மகன் எப்படி இறந்தான் என அறிதல் வேண்டும் என்கிறாள்.
கையில் வாளொன்றை எடுத்தாள் எதற்காக.?
தன் மகனை போரில் வீழ்த்திய எதிரியின் தலையைக் கொய்து வரவா?
முதுமகளாயிற்றே...
இது இவளால் கூடுமோ?
இயலாத ஒன்றைச் செய்வதற்காக ஏனிந்த ஓட்டம்?
இயலக்கூடிய ஒன்றைக் கண்டு வரப் போகிறாளாம்?
அப்படி யென்ன கண்டு வரப் போகிறாள் என்கிறீர்களா?
என் மகன் என்ன கோலத்தில் இறந்து கிடக்கிறான் என்பதைக் கண்டுவரப் போகிறேன்.
அவன் புறமுதுகில் புண் பட்டு வீழ்ந்து கிடப்பானாயின் அவன் பாலுண்ட என் மார்பை அறுத்து வீசி விடுவேன்.
அப்படியே வீராவேசத்தோடு போர்க்களம் நோக்கி ஓடுகிறாள்.
அங்கே கிடந்த உடல்களைப் புரட்டிப் புரட்டிப்
பார்க்கிறாள்.
இறந்து கிடக்கும் மகன் முகம் பார்க்கிறாள்.
மகன் முகம் பார்த்து மகிழ்ந்து போகிறாள்..
இறந்து கிடக்கும் மகன் உடலைப் பார்த்ததும்
மகிழ்ந்து போனாளா?
யாரிவள்?
பெற்ற பிள்ளை போரில் இறந்து
கிடக்கிறான்.
எந்தத் தாய்க்குத்தான் வாய்பேச முடியும்?
வாய் பேசுவதை விடுங்கள்.
கண்கூடவா கலங்கவில்லை....
இவள் என்ன கல் நெஞ்சக்காரியா?
இவள் ஒரு பெற்ற தாயா?
இப்படி ஏதேதோ கேள்விகள்
குறுக்கும்மறுக்குமாக வந்து விடை கேட்டு நிற்கின்றன.
அப்படி அவள் மகிழ்ச்சி அடையும்படியாக
என்ன கண்டாள்?
ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால் அவள் மட்டும் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டாள்.
"காரணம் மகன் மார்பில் வேல் தாங்கி இறந்துகிடக்கிறானாம். என் மகன் கோழை அல்ல.
என் வீரன். நான் கோழைக்குப் பாலூட்டி வளர்க்கவில்லை.
வீரனுக்குத்தான் பாலூட்டி இருக்கிறேன்" எனப் பெருமிதம் கொண்டு நிற்கின்றான்.
பாடல் உங்களுக்காக...
"நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிண
ம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே."
காக்கைக் பாடினியார் பாடிய இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பாடல்
தமிழ்த்தாயின் வீரத்தை இன்று வரை பறைசாற்றி நிற்கிறது.
"ஊரெல்லாம் உன் மகன் போரில் புறமுதுகிட்டு ஓடி இறந்து போனான் என்று கூற
புறமுதுகிட்டு ஓடி என்மகன் இறந்து போயினன் ஆயின் அவன் பாலுண்ட என்
மார்பகத்தை அறுத்து எறிந்து விடுவேன்
என்று கோபத்தோடு கையில் வாளேந்தியவளாக போர்க்களம் நோக்கி ஓடி அங்கு தன் மகன் இறந்து கிடந்த
மகனைப் புரட்டிப்
பார்த்ததும் அவள் கண்டகோலம் அவனை ஈன்ற நாளை விட பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்தது.
" என்கிறார் காக்கைப் பாடினியார்
நச்செள்ளையார்.
சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணுஉ
ஈன்ற ஞான்றினும்
பெரிது உவந்தனளே!
ஒரு தாய்க்கு தன் பிள்ளையைப் பெற்ற நாளினும்
பெரிதும் உவக்க வைப்பது
வேறெதுவும் இருக்க முடியுமா?
இருக்க முடியும்.
தான் தன் பிள்ளையைக் கோழையாக
வளர்க்கவில்லை.வீரனாகவே வளர்த்திருக்கிறேன்
என்பதை உலகு அறியும்
நாளாகத் தான் இருக்கும் என்று நம்புகிறாள்.
போரில் விழுப்புண் ஏந்தி இறந்த வீரர்களுக்கு பெருமை உண்டு.
அந்த விழுப்புண் மார்பில் இருக்க வேண்டும்.
மார்பில் விழுப்புண் இல்லை என்றால் கோழை என்று உலகம் அவமதிக்கும்.
வீரனைப் பெற்ற இந்த வீரத்தாய்
தமிழ் இருக்கும் வரை கொண்டாடப்படுவாள்.
Comments
Post a Comment