முதல் வகுப்பில் நான்

முதல் வகுப்பில் நான் 


மூன்று வயதினில் கையில் 

டம்ளரோடு பள்ளி வாசலில்

நின்றிருந்தேன்.

பள்ளியில் சேர்த்துவிட்டால்

தன் கடமை முடிந்தது என்று

கையைப் பிடித்து தரதரவென்று

பள்ளிக்குள் இழுத்துச் சென்றார் அம்மா.

 

பள்ளிக்குள் நுழைந்ததும்

"பள்ளிக்கூடத்தில் சேர்க்கணுமா

அதோ அந்த அறையில் ஒன்றாம்

வகுப்பு ஆசிரியை இருப்பார்.

போய் சேருங்கள் " கை காட்டிவிட்டார்

பள்ளி ஊழியர் கமலம்.


கமலம் கை காட்டிய அறையை நோக்கி

சென்று, நானும் அம்மாவும் சேர்ந்து

எட்டிப் பார்த்தோம்.

"பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க

வந்தீங்களா...வாங்க...வாங்க "வரவேற்றார்

ஒன்றாம் வகுப்பு ஆசிரியை விமலா.


"ரொம்ப சின்ன பொண்ணாக 

தெரிகிறாளே...வயசு ஐந்து 

ஆயிட்டுதா..." கேட்டார் ஆசிரியை.


"வயசு ஆயிற்றோ ஆகலியோ...

பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும் "

அம்மா ஏதோ 

கடையில் வேலைக்குச் சேர்த்துவிட

வேண்டும்  என்ற முனைப்பில் இருப்பதுபோல பேசினார்.


"அது எப்படிம்மா சேர்க்க முடியும்.

பிறந்த சான்று ஏதேனும் இருக்குதா..."

கேட்டார் ஆசிரியர்.


"ஒண்ணும் இல்லை...எண்ணைக்குப் பிறந்தா எப்போ பிறந்தா யார் கண்டா ..."அடுதவள் பெற்றுப் போட்ட பிள்ளை போல பேசினார் அம்மா.


"என்ன பெரியம்மா சொல்றீங்க? இவள் உங்க மகள் இளையவள் தானே?"


"இளையவள்தான்...சதா பள்ளிக்குத் துவக்கும் போவேன் பள்ளிக்குடத்துக்குப் போவேன் என்று ஒரு பையை தோளுல தூக்கிப்போட்டுட்டு ஒரே அலப்பற"


"அதுக்கு எங்கள் என்ன செய்ய சொல்றீங்க?"




".இவளை பள்ளியில்

சேர்த்துப் போடுங்கன்னு சொல்றேன்"".மறுபடியும் அம்மா

பிடிவாதம் பிடித்தார்.


அம்மாவின் பிடிவாதம் தாங்க முடியாமல்

"இங்க வாம்மா...பக்கத்தில் "அழைத்தார்

ஆசிரியை.


தயங்கி தயங்கி அம்மா முகத்தைப்

பார்த்தேன்.


"போ...பள்ளிக்கூடத்துக்குப் போகணும்..

பள்ளிக்கூடத்துக்குப் போகணும் என்று

அழுதால்ல.... டீச்சர் கூப்புடுறாவ இல்ல போ.......போ..அடிக்க மாட்டாவ."முதுகைப் பிடித்து

ஆசிரியை முன் தள்ளிவிட்டார் அம்மா.


அம்மாவின் கையை விடாமல் இழுத்துக்

கொண்டே ஆசிரியர் அருகில் போய்

நின்றேன்.


தலைக்குமேல் கையைக்

இழுத்து காதைத் தொட்டுவிடச்

சொன்னார் ஆசிரியை.


சட்டென்று கையை வைத்து 

தொட்டு விட்டேன்.

"நல்ல சாமர்த்தியம்..."சிரித்துக்கொண்டே

கையை தலைக்கு மேலே இழுத்து காதைத் தொட உதவி

செய்தார் ஆசிரியை.


முடியவில்லை...இழுத்து இழுத்துப் பார்த்தேன்...எடுவேனா பார் என்று காது காலு விரற்கடைக்குக் கீழே இருந்து கொண்டது.


"கை எட்ட மாட்டேங்குது பாருங்கள்...வயசு இன்னும் ஆகலில...

அடுத்த வருடம் கூட்டிட்டு வாங்க..."

என்று சொல்லி அம்மாவின் கோரிக்கையை

நிராகரித்துவிட்டார் ஆசிரியை.


"கை எட்டலன்னா என்ன ...வகுப்பில் ஓர் ஓரமாக வச்சுகிடுங்க"

அம்மா இறங்கி வந்து பேசிப்  பார்த்தார்.


"அப்படி எல்லாம் வைக்க முடியாதுங்க...

யாராவது அதிகாரி வந்தால் எங்களால் பதில்

சொல்ல முடியாது...."தனது தரப்பு 

ஞாயத்தை எடுத்து வைத்தார்

ஆசிரியை.


"நான் தோட்டத்துக்குப் போன பிறகுபள்ளிகூடத்து வாசலிலேயே நிற்கிறா...என்று எல்லாரும் சொல்றாவ

எப்படியாவது உள்ள வைக்கப் பாருங்க"

கெஞ்சிப் பார்த்தார் அம்மா.


"நானும் பார்த்திருக்கிறேன் எப்பவும்

பள்ளிக்கூடத்தில் பால் ஊற்றும் நேரம் கையில்

டம்ளரோடு வந்து நிற்பாள்."



"பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால்...

பால் கிடைக்கும்..சோறு கிடைக்கும்.

இல்லை என்றால் ஒருநாள்

பாவம் பார்த்து கொடுக்கிறார்கள்...ஒருநாள்

துரத்தி விட்டுவிடுகிறார்கள்.

அழுதுகிட்டே  வீடு வருகிறாள்..."

எதற்காக பள்ளியில் சேர்க்க வேண்டும்

என்பதற்கான விளக்கத்தைத் தந்தார் அம்மா.


ஆசிரியர் அம்மாவின் எந்த விளக்கத்தையும் 

கேட்பதாகத் தெரியவில்லை.


அடுத்த வருடம் வாருங்கள்

என்று சொல்லி திருப்பி அனுப்பி

காத்திருப்புப் பட்டியலில் வைக்க

முடிவு செய்துவிட்டார் ஆசிரியர்.


அம்மாவும் விடுவதாக இல்லை.


"பள்ளியில் சேர்க்காவிட்டாலும்

பரவாயில்லை.என்ன செய்வியளோ ஏது செய்வியளோ வகுப்பில் ஓர்

ஓரமாய் இருக்க வையுங்கள்"

என்று அம்மாவும் பிடிவாதத்தோடு 

என்னை ஆசிரியர் கையில்

பிடித்துக் கொடுத்துவிட்டு

கிளம்பிவிட்டார் .


ஆசிரியருக்கு இப்போது வேறு வழி 

தெரியவில்லை.

"அந்த சுவர் ஓரமாக போய் உட்கார்"

தரையில் ஓர் ஓரமாக இடம் பிடித்துத்

தந்தார் ஆசிரியை.


தயங்கித் தயங்கி மற்ற பிள்ளைகளைப் பார்த்தபடி நடந்தேன்.என்னையும் பள்ளியில் சேர்ந்தாயிற்று. 

 பெருமையாக அனைவரையும் பார்த்தேன்.

 படக்கென்று உட்கார்ந்து கையோடு 

 கொண்டு வந்த பையைக் கெட்டியாகப்

 பிடித்தபடி மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தேன்.

 

வகுப்பில் இருக்கும் அனைவர் கண்களும்

என்னையே பார்த்துக் கொண்டிருந்ததன.

எனக்கு கூச்சமாக இருந்தது.உதட்டோரமாக ஒரு புன்னகை வந்து எட்டிப் பார்க்க முகம் ஒரு பக்கமாக சரிய ஓரக் கண்ணால் பார்த்தேன்.


எல்லோர் கண்களும் உனக்குத்தான் பலகையில் இடம் கிடைக்கிறதே என்று கிண்டலாகப் பார்ப்பது போல இருந்தது.


 

பலகையில் இருக்கும் பிள்ளைகளைப் 

பார்க்க...பார்க்க எனக்கும் பலகையில்

இருக்க இடம் கிடைக்காதா என ஏக்கமாக

இருந்தது.


என்னை யாராவது பலகையில் இருக்கக்

கூப்பிடமாட்டார்களா என ஏக்கத்தோடு

ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.


இடம் இருந்தாலும் எனக்கு மட்டும்

பலகையில் அமர தடை.


பள்ளியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியை 

முழுவதுமாக என்னால் அனுபவிக்க முடியாமல்  பலகை கண்ணுக்குள் வந்து உறுத்திக் கொண்டே இருந்தது.


ஒதுக்கப்பட்ட மனநிலையிலேயே

உட்கார்ந்திருந்தேன்.


இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும்.

ஒருநாள் .....பள்ளி ஆய்வாளர்

வருவதாக தகவல் வந்தது.

பள்ளி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

சுவர் முழுவதும் வண்ண வண்ணப் பதாகைகள் எழுத்தையும் பாட்டையும் கதையையும் சுமந்தபடி 

கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.


ஒரே நாளில்  உயரத்தில் போய் உட்கார்ந்து கொண்ட மகிழ்ச்சி தெரிந்தது.


என் கண்கள் என் இடத்தை 

சுற்றி சுற்றிப் பார்த்தன.


தனிமையில் நான்...தவிர்கப்பட்ட இடத்தில் நான்...ஒரு அவமானம் வந்து உதடுகளோடு போராட்டம் நடத்தியது.


யாரைக் கேட்பது?...

எல்லோர் பக்கத்திலும் இடம் இருக்கிறது.

ஆனால் எனக்குத்தான் அனுமதி மறுப்பு.


வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியையை கண்டதும் அக்கா வணக்கம் என்று அனைவரும்  வணக்கம் சொல்லினர்.


ஆசிரியை ஓரமாய் அமர்ந்திருந்த என்னை

பலகையில் போய் அமரச் சொன்னார்.


உண்மையாகவா...ஒரு தயக்கத்தோடு எழும்பி ஆசிரியையைப் பார்த்தேன்.

"போ...போய் உட்காரு. இன்றிலிருந்து நீ பலகையில் இருக்கலாம்"

என்றார் ஆசிரியர்.


முதல்வகுப்பில் என்னை சேர்த்தாயிற்று.

வருகைப் பதிவேட்டில்

பெயர் எழுதி மேசை மேல்

வைத்தார் ஆசிரியர்.


அதுவரை பலகையில் அமர அனுமதி

மறுக்கப்பட்ட எனக்கு  பதவி உயர்வு

அளித்து பலகைக்கு மாற்றியநாள்

நினைக்க நினைக்க மனசு முழுவதும்

பட்டாம்பூச்சி பறப்பதுபோல்

இருந்தது.


பலகையில் மற்ற மாணவிகளோடு

முதல்நாள் அமர்ந்த அந்த நிமிடம்....

மனம் இறக்கை கட்டிப் பறந்தது.


அம்மாவிடம் போய்ச் சொல்லணும்...

 ஆவல் மேலிட பள்ளி முடியும்வரை

 காத்திருந்தேன்.

 

பள்ளியில் மணியடித்தது்தான் தாமதம்.

பையைக் கைகளில் தூக்கிவிட்டு

ஓடி வந்தேன். எதிரில் அக்கா.

எக்கோ என்னைப் பள்ளியில் சேர்த்தாயிற்று.

சந்தோச மிகுதியில் அக்காவிடம்

முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்தேன்.



"வயசு ஆயிட்டா "அக்கா என்னிடமே திருப்பிக்

கேட்டாள்.


"தெரியாது" உதட்டைச் பிதுக்கினேன்.


என்னைப் பலகையில் உட்கார வைத்தாயிற்று....

அடுத்த தகவல் அம்மாவுக்கு.

"சரி ...என் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில்

சேர்த்தாச்சா...நல்லா படிக்கணும்

என்ன " அம்மா அக்கறையோடு

சொல்லி வைத்தார்.


ஆமாம்... என்னை பள்ளியில்

சேர்த்தாச்சு.

என் கால்கள் தரையில் பதிய மறுத்தன.

முற்றத்தில் நின்று உரக்க கத்த வேண்டும் போல இருந்தது.

எதிரே வந்த கன்றுக்குட்டி காதில் ஓதினேன்.


இன்றுமுதல் முதல் வகுப்பில் நான்...




Comments