அப்பா
அப்பா
கல்லூரி வாசலில் ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர்.
"என்ன தம்பி...இடம் வந்துட்டா "என்றார்
செல்லையா.
"ஆமாம் ...நீங்க சொன்ன கல்லூரி வந்தாச்சு.
இறங்குங்க..."
தலையை வெளியில் போட்டு எட்டிப்பார்த்த
செல்லையா",தம்பி சரியா பாத்தியா...
என் மவன் படிக்கிற காலேஜ் இதுதான"
"உங்கள் மவன் படிக்கிற கல்லூரி இதுவா....
அது எப்படி எனக்கு தெரியும்? நீங்க சொன்ன காலேஜ் இதுதான்...இறங்குங்க'
"கொஞ்சம் பொறு தம்பி..
ஒரு நிமிஷம் ..
இந்தபுள்ளைகளிடம்
கேட்டு வாரேன்."
"நான் அடுத்த சவாரி போகாண்டாமா?
பணத்தை தந்து என்னை கட்பண்ணுங்க"
என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே
பெரியவர் கொண்டு வந்த வாழைக்குலையையும் குட்டிச் சாக்கு மூட்டையையும் எடுத்து கீழே வைத்தார் ஆட்டோ டிரைவர்.
"பொறு தம்பி...சாக்கை வேகமாக வைக்காத..
முறுக்கு நொறுக்கிப் போயிடும்"என்றபடி
படக்கென்று குட்டிச்சாக்கை வாங்கி தன் கால் பக்கத்தில் மெதுவாக வைத்தார்.
இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை எடுத்து பணத்தை எடுத்தார்.
"எவ்வளவு பணம் சொன்ன...."
"இருநூறு..."
"பத்து நிமிஷத்துல கொண்டுவந்து
உட்டுபுட்டிய...கொஞ்சம் பணம் குறைச்சுகிடப்பிடாது"
"ஏன் நாலு தெருவு சுத்தி கொண்டு வந்து விடணுமாக்கும்.பெரியவர...
உங்களுக்குத்தான் இருநூறு
ரூபா...வேறு யாரும்னா முந்நூறு ரூபாய்க்கு
ஒத்த பைசா...குறைச்சிருக்க மாட்டேன்."
"சரி தம்பி கோவிச்சிக்கிடாத" என்றபடி கையில் எடுத்த பணத்தை ஒரு முறைக்கு நாலு முறை திருப்பித் திருப்பிப் பார்த்து இருநூறு ரூபாய் என்று உறுதி செய்த பின்னர் டிரைவர் கையில் கொடுத்தார்.
சுருக்குப் பையில் நிறைய பணம் வைத்திருந்ததைப் பார்த்த ஆட்டோ டிரைவர்
"பெரியவர...பணம் பத்திரம்...இங்க கள்ள பயக்க லாந்துவானுவ..."
என்று சொல்லி வைத்தார்.
"அதெல்லாம் பத்திரமா வச்சுகிடுவேன் ... தம்பி"
என்று சொல்லும்போதே கண்கள் கல்லூரிக்குள் கூட்டமாகச் செல்லும் மாணவர்கள் மீது விழுந்தது.
ஒரு ஐந்து நிமிடம் அங்கேயே நின்று
அந்த மாணவர்களுக்கிடையே தன்மகனைத் தேடினார் செல்லையா.
அதில் தன் மகன் இல்லை..
ஒரு வேளை வேறு கல்லூரியாக
இருக்குமோ...யாதுக்கும் அட்ரசைக்காட்டி
ஒருமுறை விசாரிக்க நினைத்து
சுருக்குப் பையைத் திறந்து அட்ரஸ் இருந்த தாளை எடுத்தார்.
அப்போது இரண்டு மாணவிகள்
அந்த வழியாக வந்தனர்.
"தாயி...தாயி..இந்த அட்ரஸில் உள்ள பள்ளிக்கூடம் இதுதானம்மா." வலிய போயி கையில் வைத்திருந்த தாளை நீட்டினார்.
தாளை வாங்கிப் பார்த்த ஒரு மாணவி
"ஆமாம் இதுதான்ங்க...ஆமாம்...யாரைப் பார்க்கணும் நீங்க" என்றாள்.
"தங்கராசு... என் மவன்"
"தங்கராசு வா...எந்த தங்கராசு?
எந்த வகுப்பு படிக்கிறார்?"என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர் அந்த மாணவிகள்.
"...காலேஜ் படிக்கிறான்."
"காலேஜ் தான் தாத்தா...எந்த வகுப்பு படிக்கிறான் என்பது தெரியாமல்
எப்படி தேட முடியும்?"
"பன்னிரண்டு படிச்சுட்டாம்மா...
காலேஜ் படிக்க வந்தான்"
"அப்போ பஸ்ட் இயரா இருக்கும்டி."
என்றவள்
"தாத்தா உங்க பையன்
இங்க தங்கி படிக்கிறாரா...?"
"ஆமா தாயி...தங்கி படிக்கான்"
"அப்படியா ..
அப்போ அங்கே பக்கத்துல தெரியுது பாருங்க அந்த மஞ்சள் பெயிண்ட் அடித்த கட்டடம் .அங்கு போயி கேளுங்க...அங்குதான்
ஹாஸ்டலுல தங்கிப் படிக்கிற புள்ளைகள் இருப்பாங்க "
"சரி தாயி..."என்றபடி குட்டிச்சாக்கை தலையில் எடுத்து வைத்துக் கொண்டு
வாழைத்தாரை தோளில் தொங்கப் போட்டபடி மஞ்சள் கட்டிடம் நோக்கி நடந்தார்.
ஐந்து நிமிடத்திற்குள் மஞ்சள் கட்டடம் முன்னால் போய் நின்றார் செல்லையா.
பெரியவரைப் பார்த்ததும் வாசலில் நாற்காலியில் அமர்ந்திருந்த காவலாளி
எழும்பி வந்து,"ஐயா யாரைப் பார்க்கணும்?" என்றார்.
"தங்கராசு...என் பையன்" என்று சொல்லி முடிக்குமுன்னே
"தங்கராசு தம்பிய பார்க்கணுமா...
ஒரு நிமிஷம் இந்த பெஞ்சில் உட்காருங்க நான் போயி தம்பியைக் கூட்டிட்டு வாரேன்" என்றபடி
உள்ளே போனார் காவலாளி.
பெரியவர் பெஞ்சில் உட்கார்ந்து உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு பெரிய கட்டிடம்.!
தன் மகன் இவ்வளவு பெரிய
கல்லூரியில் படிக்கிறான் என்பதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
இந்தப் படிப்பு முடிஞ்சதும் வெளிநாட்டில் போய் வேறு என்னவெல்லாமோ படிக்கணும் என்றான்.
எல்லாம் படிக்க வச்சுடணும்.
கடவுள் கண்முழிச்சி பார்த்தா எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி மேல பார்த்து கைகூப்பி கும்பிட்டார்
காவலாளி உள்ளே போயி ரூம் பக்கம் பார்த்தார். அறை மூடியிருந்தது. "இந்த நேரத்தில் தம்பி எங்கே போயிருப்பார்..?.ஒருவேளை கேன்டீன் பக்கம்
இருந்தாலும் இருப்பார் "என்று
கேன்டீன் பக்கம் போய் பார்த்தார்.
அவர் நினைத்தபடியே
அங்கே மாணவர்களோடு இருந்து சிரித்துப்
பேசிக் கொண்டிருந்தார் தங்கராசு...
"தம்பி தங்கராசு தம்பி...
உங்களைப் பார்க்க உங்க அப்பா வந்துருக்காங்க என்று நினைக்கிறேன்.
வெளியில் உட்கார வைச்சுட்டு வந்தேன்.
வாங்க"
"எங்க அப்பாவா... இருக்காது"
"தங்கராசு நீங்க தான...?
என் மவன் தங்கராசுவப் பார்க்கணும்ன்னுதான் சொன்னார்
அந்தப் பெரியவர் "என்று மரியாதையோடு பேசினார் காவலாளி.
"போங்க... வந்து யாருன்னு பார்க்கிறேன்"
என்ற தங்கராசுவுக்கு உடம்பெல்லாம்
வியர்த்துக் கொண்டு வந்தது.
"இந்தக் கிழம் சும்மா கிடக்காம இங்க வந்து என் மானத்த வாங்கதுக்கு வந்துருக்குது..போல." "மனசுக்குள் திட்டியபடியே
காவலாளியின் பின்னால் வந்தான் தங்கராசு.
தங்கராசுவைப் பார்த்ததும் எழும்பிய பெரியவர் கையைப் பிடித்தபடி "எப்படியய்யா இருக்கா?
செத்த வாட்டமா தெரிஞ்ச மாதிரி இருக்கு?படிப்பு கஷ்டமோ...?"
என்று கேட்டார் கரிசனையாக.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல...
உங்கள யாரு இங்க வரச் சொன்னது.?"
"உன் அம்மாதான் கொஞ்சம் பச்சமாவு வறுத்து வச்சிருக்கேன். முறுக்கு சுட்டுருக்கேன் . ஒரு எட்டு பிள்ளைய போய் பார்த்துட்டு வாரும்ன்னு ஒரே நச்சரிச்சாள்.
ஒரு மட்டி வாழைக்குலை ஒண்ணு தன் பழம் பழுத்துருந்துது.அதையும் வெட்டி எடுத்தாந்தாந்தேன். பழுக்கப்பழுக்க தின்பா இல்லியா "என்றபடி குட்டிச் சாக்கையும் வாழைக்குலையையும் கைகாட்டி எடுத்துட்டுப் போ என்றார் பெரியவர்.
"இதுக்கு மெனக்கெட்டு வந்தியளாக்கும்...
எப்போ போறியா...."
"போறேம்பா....நீ முதலாவது அந்த சாமான் எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ள வை.
அடுத்த பஸ்சு எப்போ இருக்குய்யா?"
"நாலு மணிக்கு வந்துடும் பத்தாரமா...போங்க...தேரமா போனா தான் பஸ் கிடைக்கும் "
"நான் பத்துரமா போயிடுவேன்.நீ சவுரியமா இருக்காலியா...இன்னா உன் அம்மா உனக்குன்னே சிறுவாடு சேர்த்து வச்ச துட்டு...குடுத்துவாரும்ன்னா" என்றபடி முணுஞ்சி வச்சிருந்த பணத்தை எடுத்து நீட்டினார் .பணத்தை வாங்கி கொண்டான்.
"அம்மக்கி வேறு வேலை கிடையாது...
நீங்க போங்க...எனக்கு வகுப்பு இருக்கு
என்றவன் ,"எண்ணே சாமான் இங்க இருக்கட்டும் .நான் திரும்ப வந்து எடுத்துக்கிடுறேன் "என்றபடி உள்ளே திரும்பினான்.
அங்கே நண்பர்கள் அனைவரும் இங்கேயே பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.
"போங்க ....ஏன் நின்னுகிட்டு இருக்கிற"என்றவன் கையில் ஒரு கட்டு பணத்தை திணித்தார் பெரியவர்.
"போதுமா வேணுமாப்பா..."
"போதும் ... போதும் நேரத்துல போய் சேருங்க" துரத்துவதிலேயே
குறியாக இருந்தான் தங்கராசு..
"போறம்பா உடம்ப பத்துரமா பாத்துக்க.
நல்லாபடி... "என்றபடி திரும்பினார்.
அதற்குள் நண்பன் ஒருவன் பின்னால் நின்று
"யாரு அப்பாவா...."என்றான்.
"சே...இல்ல எங்க தோட்டத்துல வேலை செய்றவரு...வீட்டுல இருந்து சாமான் கொடுத்துவிட்டுருக்காங்க "என்றான் நா கூசாமல்.
செல்லையாவுக்கு முதுகில் சாட்டையால் யாரோ சுளீரென்று அடித்தது போல இருந்தது.
வலி தாங்க முடியாமல் ஒரு நிமிடம்
தடுமாறினார் .
மறு நிமிடம் சுதாரித்துக் கொண்டு
திரும்பிப் பார்த்தார்.
அங்கே தங்கராசு கையில் வாழைக் குலையோடு கொஞ்சம் கொஞ்சமாக மறைவது மங்கலாகத் தெரிந்தது.
தலை சுற்றுவது போல் இருந்தது.
காலுக்கு கீழே இருந்த மண் சரிவு போல இருந்தது.சுதாகரித்துக் கொண்டு
அப்படியே கீழே உட்கார்ந்தார்.
"என்னாச்சு பெரியவர"ஓடி வந்தான் காவலாளி.
ஒண்ணுமில்ல...என்பது போல காவலாளியைப் பார்த்தார்.
நெஞ்சுக் குழி மேலும் கீழும் ஏறி இறங்கியது.
காவலாளி ஓடிப் போயி தன் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து "கொஞ்சம் தண்ணீர் குடியுங்க சரியாகிடும்" என்றார்.
தண்ணீரை வாங்கி குடித்த செல்லையா...
மறுபடியும் ஒரு முறை ஹாஸ்டலைத் திரும்பிப் பார்த்தார்.
யாரோ மண்டையில் கல்லை விட்டு எறிந்தது போல மண்டைக்குள் விண்விண் என்று தெறித்தது. உள்ளுக்குள்ளே ஊமையாய் அழுதபடி ஊருக்குக் கிளம்பினார் செல்லையா.
Comments
Post a Comment