நா நெகிழ் சொற்றொடர்கள்
நா நெகிழ் சொற்றொடர்கள்
மொழி விளையாட்டு சொற்களைப்
பிழையின்றி உச்சரிக்கப் பயிற்சி தருவதாக இருக்கும்.
ழகர றகர லகர எழுத்துகள் சரியாக
உச்சரிக்கப்பட சில சொற்றொடர்களைச்
சொல்லிச்சொல்லி
பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக
இத்தகைய சொற்றொடர்களைச்
சொல்லி விளையாடுவர்.
அதுகூட நல்ல தமிழ் உச்சரிப்புக்கு
உதவுவதாக இருக்கும்.
இன்றும்கூட ஒரு சில மாவட்டங்களைச்
சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு
இல்லாமல் பேசுவதைக்
கேட்கும்போது தமிழ்
என்ன பாடுபடுகிறது என
வருந்துவதைத் தவிர
வேறுவழி தெரியாது.
படித்தவர்கள் புத்தகங்களில்
கண்டிப்பாக நல்ல தமிழ்ச் சொற்களை
மட்டுமே படித்திருப்பார்கள்.
அவர்கள் தவறாக உச்சரிக்கும்போது
வியப்பாக இருக்கும்.சரியான உச்சரிப்பு
இல்லை என்றால் பொருள் மாறிப் போகும்.
பிழைபட பேசுவது தவறாகாதா.?...
பிழையில்லாமல் பேச பயிற்சி
எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி என்பதை தமில் மொலி
என்றால் எப்படி இருக்கும்?
வாழைப் பழம் என்று சொல்ல வராது.
வாயப் பயம் என்பவர்களை என்னவென்பது!
" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்"
நாளும் பயிற்சி எடுத்துக் கொண்டால்
நல்ல தமிழ் பேச முடியும்.
நா நெகிழ் சொற்றொடர்கள் அதற்குத்
துணைபுரிவதாக இருக்கும்.
'இங்கு அங்கு எங்கு போனால் நுங்கு தின்னலாம்?' இப்படி ஒரே ஓசையைக் கொண்ட சொற்களை மேலும் மேலும் இணைத்து சொற்றொடர் ஆக்குவதை 'நா நெகிழ் சொற்றொடர்கள்' என்பர்
ஆங்கிலத்தில் இதனை டங் ட்விஸ்டர் (Toungue Twister) என்பர்.
டங் டிவிஸ்டர் சொற்றொடர்களை ஆங்கில மொழிப்பாட ஆசிரியர் கற்றுத் தந்திருப்பார்.தமிழ் எழுத்துகளிலுள்ள வேறுபாடுகளை உணர்ந்து, உச்சரிப்பதற்கு சிறந்த பயிற்சி இந்த நா நெகிழ் சொற்றொடர்கள்.
நாவைப் புரள விட்டுப் பேசிப் பழக பயன்படும் சொற்கள் என்பதால் இதனை 'நா புரட்டு' சொற்றொடர்கள் என்றும் சொல்லலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை உங்கள் நாவைப் புரள விட்டு சத்தமாக படித்து ,நண்பர்களோடு விளையாடி மகிழுங்கள்.
1. கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.
2. கார் சீற நீர் சீறும்; ஏர் கீற வேர் கீறும்.
3. புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா.
4. ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கு.
இப்படிப் பேச்சு வழக்கில் பல நா நெகிழ் சொற்றொடர்கள் இருப்பதுபோல நம் இலக்கியங்களிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
எடுத்துக்காட்டாக, காளமேகப் புலவர் எழுதிய 'த' வரிசை சொற்கள் அதிகம் பயின்று வரும் பாடல் ஒன்றை இங்கே காணலாம்.
'தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதிதுத்தித் துதைதி துதைதத்தா தூதுதிதித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்ததெத்தாதோ தித்தித்த தாது?'
பாடலில் என்ன சொல்ல வருகிறார் காளமேகப் புலவர்?
ஒன்றுமே புரியவில்லையல்லவா.!
பாடலின் பொருள் உங்களுக்காக...
தத்தித் தாதூ துதி - தத்திச் சென்று பூக்களில் உள்ள மகரந்தத்தை ஊதிக் குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி- குடித்தபின் மீண்டும் நீ சென்று விடுகிறாய்
துத்தித் துதைதி - 'துத்தி' என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிச் சென்று விடுகிறாய்
துதைதத்தா தூதுதி - அடுத்த பூவுக்குச் சென்று அந்தப் பூவின் மகரந்தத்தையும் உண்கிறாய்.
தித்தித்த தித்தித்த தாதெது? - மிக மிக இனிப்பான தேன் எது?
தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? -- நீ இதுவரை குடித்த பூக்களின் மகரந்தங்களில் மிகவும் இனிப்பான தேன் எது?
'வண்டே, நீ பல பூக்களைத் தேடிச் சென்று தேனை உண்கிறாய். அப்படி நீ உண்ட தேனில், மிகவும் இனிப்பான பூவின் தேன் எது?'இந்தக் கேள்வியைத்தான் காளமேகப் புலவர் வண்டிடம் கேட்கிறார்.
அருமையான பாடல்.நா பிறழ் பயிற்சி என்பது
ஒத்த ஒலியுடைய சொற்கள்
அடுத்தடுத்துவரும்படி அமைந்த
தொடர்களை விரைவாகவும் பிழையின்றியும்
கூறுமாறு பயிற்சி அளிப்பது
நா பிறழ் பயிற்சி.
பள்ளிப் பருவத்தில் நிறைய
விளையாடியி ருப்போம்.
பழகியவைதான்.
மேலும் சொல்லிப் பழகுங்கள்.
உச்சரிப்பு பிறழாமல் பேச முடியும்.
" ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி
உருளுது புரளுது."
" கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட முட்ட
கட்ட முட்ட"
" இது யாரு தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை "
" வீட்டு கிட்ட கோரை
வீட்டு மேல கூரை
கூரை மேல நாரை"
"அவள் அவவளந்தாள்
இவள் அவலளப்பாள்
இவள் அவலளந்தால்
அவள் அவலளப்பாள்
அவளும் இவளும் அவலளக்காவிட்டால்
எவள் அவலளப்பாள்"
" ஆடுகிற கிளையில
ஒரு கிளை தனிக் கிளை
தனிக்கிளைதனில் வந்த
கனிகளும் இனிக்கல"
" கிழட்டுக் கிழவன்
வியாழக்கிழமை
சடுகுடு விளையாட
குடுகுடுவென ஓடி
வாழைப்பழத் தோலில்
வழுக்கி விழுந்தான்."
" பச்சை நொச்சை கொச்சை
பழி கிழி முழி
நெட்டை குட்டை முட்டை
ஆடு மாடு மூடு"
"காக்கா காக் காவென்று கத்தினதால
காக்கான்னு பேரு வந்ததா
காக்கான்னு பேரு வந்ததால
காக்கா காக் கான்னு கத்துதா"
"ஏணிமேல கோணி
கோணிமேல குண்டு
குண்டுமேல புல்லு
புல்லுக்குள்ள பூச்சி
பூச்சி எங்க என
கேட்டது ஆச்சி
விட்டது மூச்சு"
"சரக்கு ரயிலை
குறுக்கு வழியில்
நிறுத்த நினைத்த
முறுக்கு மீசை மைனர்
சறுக்கி விழுந்தும்
முறுக்கு மீசை இறங்கவில்லை"
"ரெண்டு செட்டு சோளத் தோசையில
ஒரு செட்டு சோளத் தோசை
சொத்தத் தோசை "
இப்படிப்பட்ட நா புரட்டு சொற்களைப் பொழுதுபோக்காக நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி விளையாடி மகிழுங்கள்.தோற்றவர் யாராக இருந்தாலும்
எத்தனை முறை தோற்றாலும் இறுதியில்
தமிழ் உங்களிடம் வென்றுவிடும்
என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை.
தமிழோடு விளையாடுவோம்.
உச்சரிப்புப் பிழையின்றி பேசி மகிழ்ந்திருப்போம்.
நல்லதமிழ் நாவில் தவழ
வாழ்த்துகள் .
Comments
Post a Comment