பூக்கள் எத்தனை
பூக்கள் எத்தனை?
எழிலன் முகிலன் இருவரும் நண்பர்கள்.
இருவரும் ஒரு குளத்தோரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
ஒரு குளத்தில் நிறைய தாமரைப் பூக்கள்
மலர்ந்து கிடந்தன.
ஆ...எத்துணை அழகான மலர்கள்.!
"எழிலா! சற்று நேரம் இங்கு அமர்ந்து விட்டுச்
செல்வோமா ?"என்றான் முகிலன்.
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது"
என்றான் எழிலன்.
இருவரும் குளத்தோரம் உள்ள ஒரு
மரத்தடியில் அமர்ந்துகொண்டு குளத்தையும்
அதில் அசைந்தாடும் மலர்களையும்
மெல்லத் தொட்டு விளையாடும் தென்றலையும் நுகர்ந்தபடி அமர்ந்திருந்தனர்.
அப்போது எங்கிருந்தோ வண்டுகள் ரீங்காரமிட்டபடி பூக்களை நோக்கி வந்தன.
பூக்களைப் பார்த்த வண்டுகளுக்குச்
சும்மா இருக்க முடியவில்லை.
சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
எவ்வளவு நேரம்தான் சுற்றிக்
கொண்டிருப்பது?
பூக்களில் அமர்ந்தால் தானே மது அருந்த முடியும் என்ற முடிவோடு திடீரென்று
ஆளுக்கொரு பூவாக
ஒவ்வொரு வண்டும் இடம் பிடித்துக்கொண்டது.
இப்போது ஒரு வண்டுக்கு மட்டும் அமர்வதற்கு பூ கிடைக்கவில்லை.
அந்த வண்டு பரிதாபமாகச் சுற்றிச் சுற்றி வந்தது.
"ஐயோ பாவம்" என்றான் முகிலன்.
"ஒரு பூ அதிகமாக பூத்திருக்கக் கூடாதா?" என்றான் எழிலன்.
"ஏன் ...ஒரு வண்டு குறைவாக வந்திருக்கக் கூடாதோ' என்றான் முகிலன்
"எப்போதும் நான் சொல்வதற்கு ஏறுக்கு மாறாகப் பேசுவதுதான் உன் வேலை"குறைபட்டுக்கொண்டான் எழிலன்.
"சரி சரி...கோபப்படாதே விடு .அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் "
என்று எழிலனின் கவனத்தை
குளத்துப் பக்கம் திரும்பினான் முகிலன்.
இப்போது அங்கே பூக்களின் மீது இருந்த மற்ற வண்டுகள் என்ன செய்வதென்று
தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தன.
உடனடியாக ஒரு முடிவெடுக்க முடியாமல் அந்த ஒற்றை வண்டுக்காக
அனைத்து வண்டுகளும் வருந்தின.
அதில் ஒரு புத்திசாலி வண்டு இருந்தது.
அது,"இதற்கு எதற்காக வருந்த வேண்டும்?
ஒரு பூவில் இரண்டு இரண்டு பேராக
அமர்ந்துவிடுவோம்.
அப்படி அமர்ந்தால் யாருக்கும் அமர்வதற்கு
பூ கிடைக்காமல் போகாது "
என்ற ஒரு நல்ல யோசனையைச் சொன்னது.
"சரியான யோசனை.
அப்படியே அமர்வோம் "என்று
அனைத்து வண்டுகளும் ஒத்துக்கொண்டன.
இப்போது ஒரு பூவுக்கு இரண்டு வண்டுகள் வீதமாக அனைத்து வண்டுகளும் அமர்ந்து கொண்டன.
திரும்பிப் பார்த்தால் ஒரு பூ
தன்னந்தனியாக தலையை ஆட்டிக்கொண்டு நிற்பது தெரிந்தது.
"அடடா...ஒரு பூ எஞ்சிவிட்டதே" என்றபடி
எழிலன் வண்டுகளை எண்ண ஆரம்பித்தான்.
முகிலன்" நான் பூக்களை எண்ணுகிறேன்.
யார் முதலில் எண்ணுகிறோம் என்று பார்ப்போம்" என்றான் .
எழிலன் இரண்டாம் வாய்ப்பாட்டைச்சொல்ல
முகிலன் ஒன்று இரண்டு மூன்று என்று பூக்களை எண்ணிக் கொண்டிருந்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் நான் கண்டுபிடித்துவிட்டேன் ...நான் கண்டுபிடித்து விட்டேன் என்று துள்ளிக்குதித்தனர்.
இதுவரை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு
ஒன்றும் புரியவில்லை.
எப்படி இவ்வளவு விரைவாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது?
வியந்து நின்றேன்.
கண்டுபிடித்தது இருக்கட்டும்.
வண்டுகள் எத்தனை?
பூக்கள் எத்தனை?
என்பதைச் சரியாகச்சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்த வேண்டும் போல இருந்தது.
அவர்கள் சொல்லாவிட்டால் என்ன?
உங்களுக்கு தெரியாமலா இருக்கும்?
பூக்கள் எத்தனை?
வண்டுகள் எத்தனை?
நீங்களாவது சரியான விடையைச் சொல்லிவிட்டுப் போங்கள்.
உங்கள் விடைக்காக காத்திருக்கிறேன்.
(கணக்கதிகாரப் பாடல்)
Comments
Post a Comment