இரட்டைத் தாழ்ப்பாள்

இரட்டைத் தாழ்ப்பாள் 


தூது இலக்கியம் பற்றி பெரும்பாலும்

நாம் தெரிந்து வைத்திருப்போம்.

நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப்

பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க

முடியாது.


 காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே தலைவனும்

தலைவியும் பாங்கனையும் பாங்கியரையும்

கூடவே வைத்திருப்பர்.

இது சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம்

நாம்  அறியும் செய்தி.


இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத்

துணையாக இருப்பவரைத் தூதுவர் 

என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள்

இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள் 

அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில்

ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக

நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்.


பண்டைக் காலத்திலும் தூது நடைபெற்றிருக்கிறது.

அது இலக்கியமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

 தமிழிலுள்ள சிற்றிலக்கிய 

வகைகளுள் ஒன்றான தூது இதற்குச் 

சான்றாக அமைகிறது.


முதன் முதலாக தமிழர் நெஞ்சைத்தான்

தூதாக விட்டு வந்தனராம்.

முதல் தூது இலக்கியமே நெஞ்சுவிடு தூது

என்பதாக கூறப்படுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு

தூது, மேகம் விடு தூது, காக்கை விடு தூது,

மான்  விடு தூது, கிள்ளை விடு தூது என்று

 தூதுவர்கள்

அதிகமாகிக் கொண்டே வந்தனர்.

 உயிர் உள்ளவற்றைத் தூதாக அனுப்பியதுபோக 

 உயிரில்லா காற்றையும் மேகத்தையும் அனுப்பிய

பெருமை உடைத்து தமிழ் இலக்கியம்.


ஆரம்ப காலத்தில் இவை எல்லாம் 

காதலுக்காக மட்டுமே தூதாக அனுப்பப்பட்டன.


பின்னர் அதியமானுக்காக தொண்டைமானிடம்

போர் சமரசம் செய்ய ஔவையார் போனதாகப்

படித்திருப்போம்.

இது காதல் தூதைவிட ஒருபடி உயர்ந்தநிலை.


இதற்கு அடுத்த நிலையாக

மன்னனுக்குப் பெண் கேட்பதற்காக

வேற்று நாட்டிற்கு  தூது சென்றாராம் ஒட்டக்கூத்தர்

என்ற புலவர்.

இதுவும் சமூகப் பணிதான். 

பாராட்டிவிட்டுப் போகலாம்.


குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்டு அரசி

கதவை மூடிக்கொண்டு அரண்மனையிலுள்ள தன்

அறையில் அமர்ந்து கொண்டாள்.


மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று 

சொல்ல தூது போனார் ஒட்டக்கூத்தர்

என்ற புலவர்.


 வேடிக்கையாக  இருக்கிறதல்லவா!

 அதுதாங்க உண்மை. போய் என்ன சொன்னார்

 தெரியுமா?

 

 பாடல் இதோ உங்களுக்காக...


நானே இனியுன்னை வேண்டுவதில்லை


நளினமலர்த் தேனே கபாடந் திறந்திடு


திறவா விடிலோ


வானேறனைய வாள் விரவிகுலாதிபன்


வாசல் வந்தால்


தானே திறக்கு நின் கையிதழாகிய


தாமரையே !



அழகான  மலரில் இருக்கும் தேன்

போன்ற இனிமையான பெண்ணே!

மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று

உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும்

என்ற அவசியம்  எனக்கில்லை.

வானளாவிய புகழ் கொண்ட

ஆண் சிங்கத்துக்கு நிகரானவன்

என் மன்னன் குலோத்துங்கன். 

வாள் வீரனாகிய குலோத்துங்கன் 

உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.

தாமரை போன்ற உன் கைகள்

தானாக வந்து கதவைத் திறந்து

வைத்துவிடும் .


என்று மமதையாக ஒரு பாடலைப் பாடி

முடித்தார் ஒட்டக்கூத்தர்.

மன்னிப்பு கேட்கவில்லை.

என் மன்னன் பெரியவன்.

வீரன் .மன்மதன்.

என்ற தொனியில் பாடல் இருக்க

அட போய்யா உன் மன்னன் யாராய் இருந்தால் எனக்கென்ன 

 என்று முன்பைவிட

அதிக கோபம் கொண்டவளானாள் அரசி.


அதுவரை ஒற்றைத் தாழ்ப்பாளை மட்டுமே

போட்டு வைத்திருந்த அரசி இன்னொரு 

ஒட்டக்கூத்தர் பாடலைக் கேட்டதும் இரட்டைத் தாழ்ப்பாளையும் சேர்த்துப் போட்டு கதவைச் 

சிக்கென்று மூடிக் கொண்டாள்.


ஒட்டக்கூத்தர் அவமானப்பட வேண்டியதாயிற்று.


இதனால்தான் "ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத்

தாழ்ப்பாள் "என்ற சொற்றொடர் உருவானது.


மன்னனுக்குத் தகவல் சொல்லப்பட்டது.


 செய்தி கேட்ட மன்னனுக்கு என்ன செய்வதென்றே

புரியவில்லை. 

கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார்.


அரசிக்கு ஏனிந்த கோபம்?

 சற்று யோசித்துப் பார்த்தார்.

அப்போதுதான் உண்மை புரிந்தது.


பாண்டிய நாட்டு இளவரசியை தான் திருமணம்

செய்து அழைத்து வந்த போது கூடவே

பாண்டிய மன்னன் தன் மகளுக்குத் துணையாக

புகழேந்தி என்ற புலவரையும் அனுப்பி வைத்திருந்தார்.

புகழேந்தி மீது அரசியும் அதிக மரியாதை 

வைத்திருந்தாள். இனி ஒட்டகூத்தரை

நம்பி பலனில்லை.

புகழேந்தியால் மட்டுமே அரசியோடு பேசி சமாதானம் செய்து வைக்க முடியும் 

என்று நம்பினார்.உடனே

 புகழேந்தியை

அழைத்து வர வீரர் ஒருவரை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.


புகழேந்தி யுகம் வந்து சேர்ந்தார்.

மன்னர் அரசிக்கு தன் தன் மீதுள்ள கோபத்த்திற்கான காரணத்தைச் சொல்லி புரிய வைத்தார்.


சரி...எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றபடி புகழேந்தி அந்தப்புரத்துக்குப்

போகிறார்.


புகழேந்தி அரசியின்

அறையின் முன் நின்று பாடுகிறார்.


 

 பாடல் இதோ உங்களுக்காக...


இழையொன்றிரண்டு வகிர் செய்த

நுண்ணிடை யேந்தியபொற்


குழையொன்றிரண்டு விழியணங்கே!

கொண்ட கோபந் தணி


மழையொன்றிரண்டு கைப் பிணபரண

நின்வாசல் வந்தால்


பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற்

பிறந்தவரே !


என்று அமைதியாகப் பாடி முடித்தார்.


அதாவது


"நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது

போன்ற மெல்லிய இடையுடை பாண்டியன் மகளே!

பொற்குழை மலர் போன்ற

பேரழகான விழியுடை பெண்ணே!

உன் கோபத்தை நீ தணித்துக்கொள்ள

மாட்டாயோ!

 இரு கைகளாலும் எதிரிகளின் மேல் 

மழைபோல பாணங்களைப் பொழியும்  

ஆற்றல் மிக்க உன்  குலோத்துங்க சோழன்

செய்த பிழை ஒன்றிரண்டு இருக்கலாம்.

அதற்காக கோபம் கொள்ளலாமா?


உன்னைப் போன்ற நற்குடி பிறந்த 

பெண் பிழையைப் பொறுத்துக் 

கொள்ள மாட்டாரோ!


என்று சாதுரியமாகப் பாடி முடித்தார்.


புகழேந்தியின் இந்தப் பாடலைக் கேட்டதும்

அரசி ஓடி வந்து தாழ்ப்பாளைத் திறந்தாராம்.

ஒட்டக்கூத்தருக்குப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாள்

புகழேந்தி பாடலுக்காகத் திறக்கப்பட்டது.


தூது போவது பெரிதில்லை.

இடம் பொருள்  ஏவல் அறிந்து

பேசத் தெரிந்திருக்க வேண்டும். 

அப்படிப் பேசத் தெரியாதவர்களை

அனுப்பி வைத்தால்  இப்படித்தான்  

ஏறுக்குமாறாக ஏதாவது நடைபெற்றுவிடும்.


வேடிக்கையான தூது இல்லையா?

அவர்களின் வேடிக்கையிலும் நமக்கு சுவையான  தமிழ் விருந்து படைக்கப்பட்டி ருக்கிறது.

  


இழையொன்றிரண்டு 


குழையொன்றிரண்டு 


மழையொன்றிரண்டு 


பிழையொன்றிரண்டு 


பொறாரோ?





 

Comments