காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும் 


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.

 பாரதியின் பாடல்களில் நாட்டுப்பற்று நிரம்பவே இருக்கும்.

    பெண் விடுதலையைப் பற்றிய பாடல்கள்  உணர்வுடன் கூடியதாக இருக்கும்.

    மொழிப்பற்று விஞ்சி நிற்கும்.

    பாரதியைக் கொண்டாட ஆரம்பித்தால் நாளெல்லாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம்.

   பாரதியின் பாடல் வரிகள் தமிழ்க் கவிதையின் மந்திர சொற்கள்.

   மந்திரத்தை நாளெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்பம் தருவதாகவே இருக்கும். 

   என் எழுத்தும் தெய்வம்; என் எழுதுகோலும் தெய்வம் எனக் கூறியவர் பாரதி.

   பாரதியைப் பற்றி


"      பாட்டுக்கொரு புலவன் பாரதியடா _ அவன்

        பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

        கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா! _அந்தக்

        கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா "

         என்றார் கவிமணி.

          கிறுகிறுப்பூட்டும் அருமையான பாடல்களைப் பாடியவர் பாரதி.

   பாரதியின் பாடல்களில் உணர்வு விஞ்சி நிற்கும். 

   துணிச்சல் , உறுதி ,தன்னம்பிக்கை எல்லாம் கூடி இருக்கும்.

   எல்லாம் இருந்துவிட்டு பொது நலம் இல்லாதிருக்குமா என்ன! 

   அதுவும் உண்டு.

     நமக்காக ...நாட்டுக்காக...பெண்களுக்காக....எனப் பாடிய பாரதிக்கு தனக்கென ஒரு பாடல் பாட வேண்டும் ஆசை.

     அப்படி ஒன்றும் பெரிய ஆசை இல்லை.

     சின்ன சின்ன ஆசைதான்.

     பாரதியின் ஆசைதான் என்ன என்று கேட்போமே !


      நம் எல்லோருக்குமே சொந்தமாக ஒரு வீடுகட்டி குடி இருக்க ஆசை இருக்கும். அதே ஆசைதான் பாரதிக்கும் வந்திருக்கிறது.தனது ஆசையைப் பராசக்தியிடம் கூறுகிறார்.

      காணி நிலம் வேண்டுமாம். அதாவது ஏறத்தாழ ஒரு ஏக்கர் முப்பத்து இரண்டு சென்ட் நிலம் வேண்டுமாம்.

      வெறும் நிலம் மட்டும் தந்தால் போதுமா...அங்கு நல்ல தூண்களெல்லாம் இட்டு நல்ல வண்ணத்தில் ஒரு மாளிகை கட்டித்தர வேண்டுமாம். வெற்று மாளிகை அழகு தருமா சுற்றி மரங்கள் வேண்டாமா? 

      அந்த வீட்டிற்குள் கிணறு வேண்டுமாம்.கிணற்றின் அருகில்  தென்னங்கீற்றுகளையும் இளநீரையும் தலையில் தாங்கிக் கொண்டு  தென்னைமரம் நிற்க வேண்டுமாம். 

      ஒன்று மட்டுமல்ல ..பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் நிற்க வேண்டுமாம்.

      இது மட்டும் போதுமா... போதாதாம்.

     இரவு வேளையில் முற்றத்தில்  முத்துச்சுடரொளி பரப்பி நிலவு வந்து தண்மை தந்து எட்டிப் பார்த்து சிரிக்க வேண்டுமாம்.

     அதாவது வானம் பார்த்த முற்றம் வேண்டுமாம்.

     இரவு காட்சி இப்படியாக முடிந்தது.

     இனி அதிகாலையிலேயே குயில்கள் வந்து காதில் கேட்கும்படியாக கத்திச் செல்ல வேண்டுமாம். 

     இது என்னப்பா எங்காவது குயில் கத்துமா....கேட்கணும்போல் தோன்றுதில்ல.

      குயில் வந்து கூவ வேண்டும் என்பதைத்தான் பாரதி கத்த வேண்டும் என்கிறார்.

      குயில் கூவினால் கூடவே இன்னொரு சுகம் வேண்டுமே! 

      மரங்கள் இருக்குமிடத்தில் தென்றல் வராமல் இருந்தால் எப்படி? 

     மனம் இன்பம் கொள்ள தென்றல் காற்று மெல்ல வந்து காதோடு  கவி பேச  வேண்டுமாம். அப்பப்பா இது சின்ன சின்ன ஆசை இல்லங்க ...பேராசைதான்.

     ஆசை யாரை விட்டது பாருங்க..

     இவ்வளவு ரம்மியமான இடத்தில் ஒரு பெண் வேண்டாமா ! 

      தப்பா எடுத்துக் கொள்ளாதீங்க...பத்தினிப் பெண்ணோடு அங்கு இருக்க வேண்டுமாம். அதாவது மனைவியோடு அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி.

        கூடி இன்புற்று கவிதைகள் பல படைத்திடல் வேண்டுமாம்.

        இப்படி  கற்பனையில் கிடக்கும்போது அம்மா நீ எம்மைக் காத்திடல் வேண்டும் என்று பராசக்தியைக் காவலுக்கு அழைக்கிறார் பாரதி. 

        இப்படி ஒரு அருமையான இடத்திலிருந்து அற்புதமாக நான் படைக்கும் கவிதையால் இந்த உலகத்தைக் பாலித்திடவேண்டும் தாயே என்று முடிக்கிறார் பாரதி.

        இந்த சின்ன சின்ன ஆசையை எளிய வரிகளில் எப்படி தந்திருக்கிறார் பாரதி என்பதைப் பாருங்கள்.

        பாரதியின் ஆசை சின்ன சின்ன ஆசையா....

        பேராசையைய்யா.... பேராசை.

        காட்டுவெளியிலிலே தன்னந்தனியாக அழகு மாளிகை.நீரின் தண்மையோடு கூடிய சூழல்.

        குயிலின் பாடலோடு தென்றல் தொடு சிலிர்ப்பு.

        பக்கத்தில் காதல் மனைவி.

        கொஞ்சிப் பேசும்போது பொறாமை நெஞ்சத்தார் கண்பட்டுவிடாமலிருக்க பாதுகாப்பு.

        இதெல்லாம் எதற்காக வேண்டுமாம்...இத்தகைய சூழலில்தான் அழகு கவிதை பிறக்குமாம். அந்தப் பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்க வேண்டுமாம்.

        என்னவெல்லாமோ கேட்டு வைத்து அவை எல்லாம் கவிதை எழுதத்தான் .அந்தக் கவிதையும் உங்களுக்காகத்தான் என்று முடித்துவிட்டார். 

        

        

   உங்களை மகிழ்ச்சிப்படுத்த பாரதி பராசக்தியிடம் என்ன கேட்கிறார்.பாடலைப்  பாருங்கள்.


       காணி நிலம் வேண்டும்  _ பராசக்தி


       காணி நிலம் வேண்டும்  _ அங்கு


       தூணில்  அழகியதாய்  _  நன்மாடங்கள்


       துய்ய நிறத்தினதாய்  _ அந்தத்


      காணி  நிலத்திடையே  _ ஓர் மாளிகை

     

       கட்டித் தர வேண்டும் _ அங்கு


       கேணியருகினிலே  _ தென்னைமரம்


      கீற்று  மிளநீரும்.



       பத்துப் பன்னிரண்டு  _ தென்னைமரம்


       பக்கத்திலே வேணும்  _ நல்ல


       முத்துச் சுடர்போலே _  நிலாவொளி


        முன்பு வரவேணும்  _  அங்கு


       கத்துங் குயிலோசை  _ சற்றே வந்து


       காதிற்  படவேணும்  _ என்றன்


       சித்தம்  மகிழ்ந்திடவே  _ நன்றாயிளந்


        தென்றல் வரவேணும்


        பாட்டுக்  கலந்திடவே   _  அங்கேயொரு


        பத்தினிப்  பெண்வேணும் _  எங்கள்


        கூட்டுக் களியினிலே  _  கவிதைகள்


        கொண்டுதர வேணும்   _ அந்தக்


        காட்டு வெளியினிலே  _  அம்மா! நின்றன்


          காவலுற வேணும்  _  என்றன்


          பாட்டுத் திறத்தாலே _  இவ்வையத்தைப்


           பாலித்திட வேணும்.

      


      அருமையான பாடலில்லையா?...இரண்டு மூன்று முறை படித்துப்பாருங்கள்.

       பாரதியின் உணர்வு நமக்குள்ளும் தொற்றிக் கொள்ளும்.


     

Comments