நீலச் சிற்றாடைக்கு நேர்

நீலச் சிற்றாடைக்கு நேர் 


கடையேழு வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்து

 எண்ணப்படுபவர் பாரி.

 முல்லைக்கு  தேர் கொடுத்தார் பாரி என்று கொண்டாடுகிறோம்.

 இரக்க குணம் கொண்டவர்.

 வள்ளல்  இப்படி ஊரெல்லாம் புகழும்

 பெருமைக்குச் சொந்தக்காரர்.

 பறம்பு மலைப் பகுதிக்கு மன்னன்.

 எவ்வளவு நல்ல குணநலன்கள்

 பெற்றிருந்தாலும் அரசன் என்றால் எதிரிகள் இருக்கத்தான் செய்வர்.

எதிரிகளோடு போரிட வேண்டிய

ஒரு சூழல் ஏற்படுகிறது.

 அப்படி ஒரு போரில் பாரி இறந்து போகிறார்.

 

பாரிக்கு இரண்டு மகள்கள்.

அங்கவை,சங்கவை

என்று அழகான பெயர் சூட்டி

வைத்திருந்தார் பாரி.

இவர்களுக்கு திருமணம் செய்து

வைக்கும் முன்பாகவே பாரி

இறந்து விடுவதால் இவர்களுக்குத்

திருமணம் செய்து வைக்கும்

பொறுப்பை பாரியின் நண்பரான 

கபிலர் கையிலெடுத்து

வேற்று நாட்டு மன்னர்களோடு

பேசிப் பார்க்கிறார். யாரும்

பாரி மகளிரை மணம் முடிக்க

முன்வரவில்லை.

அந்தக் கவலையில்  இறுதியில் கபிலரும்

உயிர் துறந்து விடுகிறார்.


இதற்கிடையில் மூவேந்தர்கள் பறம்பு நாட்டை 

அபகரித்து கொள்கின்றனர்.

இப்போது பாரி மகளிருக்கு

நாடுமில்லை. இருக்க வீடுமில்லை.

ஆதரிக்க ஆளுமில்லை.

என்ன செய்வது?

யாரிடம் போய் உதவி கேட்டு

நிற்பது?

காட்டிற்குள் ஒரு குடிசை அமைத்து 

அதில் வாழ்ந்து வருகின்றனர்.


பாரியின் மகளிருக்கு திருமணம் செய்து

 வைக்க முடியாத கவலையில்

 கபிலர் உயிர் துறந்தார் என்ற செய்தி

 ஔவையார் காதுகளுக்கு

 வந்து  சேர்ந்தது.

 பதறிப் போகிறார் ஔவை.


அந்தப் பிள்ளைகளைப் பார்த்து எப்படியாவது அவர்களுக்கு 

திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் அவர்களை

 எங்கே போய் தேடுவது?

இதுவரை

நான் அவர்களைப் பார்த்ததும் இல்லை.

இதுவரை  பார்த்திராதவர்களை

எப்படி அடையாளம் 

கண்டு கொள்வது ?

என்ன அடையாளத்தைத் சொல்லி தேடுவது?

இப்படி பல்வேறு குழப்பத்திற்கிடையில் கையில்

கம்போடு காட்டு வழியாகப் 

பயணமாகிறார் ஔவை.


கால்போன போக்கில்

நடக்கிறார். நேரமாகிக் கொண்டே இருந்தது.

வானம் கருமேகம்  சூழ

இருட்டிக் கொண்டு வந்தது.

இப்பவோ இன்னும் சிறிது நேரத்திலோ

மழை கொட்டிவிடும் என்று நினைக்கும் 

அளவுக்கு ஓர் கும்மிருட்டு வந்து

கவ்விக் கொண்டது.

மெதுவாக சிறு தூரல்கள் விழ ஆரம்பித்தன.


மழைக்கு எங்கே ஒதுங்குவது?

எங்கும் வீடுகள் தெரியவில்லையே.

கண்கள் அங்குமிங்கும் ஏதாவது வீடுகள்

இருக்கின்றனவா என்று தேட

தொலைவில் ஒரு பழைய குடில் ஒன்று இருப்பது கண்களில் பட்டது.

வேகவேகமாக நடக்கிறார்.

அதற்குள் சேலை முழுவதும் நனைந்து

போய்விட்டது.

எப்படியோ குடிசை தாழ்வாரத்தில்

போய் நின்று கொண்டார்.


அப்போது உள்ளிருந்து வந்த ஒரு சிறுபெண்

அம்மா...உள்ளே வாருங்கள்

என்று அழைத்தார்.

நிமிர்ந்து பார்த்த ஔவை சற்று 

தடுமாறிப் போனார்.

தயக்கத்தோடு அவளைப்

பார்க்கிறார்.


"ஔவையே வாருங்கள் "என்று

உள்ளிருந்து மற்றுமொரு குரல்.

அசந்து போகிறார் ஔவை.


"யாரம்மா நீங்கள்?

 என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?"

 சாதாரணமாக கேட்கிறார் ஔவை.


"பார்த்திருக்கிறேன் ." என்று

ஒற்றை வார்த்தையில் பதில்

சொல்லிவிட்டு 

அத்தோடு நின்றுவிடாமல்

"மழையில் தலையெல்லாம்

நனைந்திருக்கிறதே" என்று

துவட்டிவிட தொடங்கினாள் ஒரு பெண்.


"உடை யெல்லாம் நினைந்திருக்கிறது.

தங்களுக்கு

மாற்றுத் துணி வழங்க எங்களிடம்

விலை உயர்ந்த ஆடை எதுவுமில்லை.

இதோ இந்த

நீலச் சிற்றாடையைத் தவிர வேறு

எதுவுமில்லை. இதனை மாற்றிக்

கொள்ளுங்கள்" என்று கையில்

ஒரு நீல சிற்றாடையை நீட்டியபடி

நிற்கிறாள் இன்னொருத்தி.

நெகிழ்ந்து போகிறார் ஔவை.

துணியை மாற்றிவிட்டு வந்து அமர்ந்த ஔவை "யாரும்மா நீங்கள்?"

என்று கேட்கும் முன்னர் 

உணவு பரிமாறப்பட்டது.


"அறியாத ஒருவர்மீது இவ்வளவு அன்பைப் பொழியும் நீங்கள் 

யார் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? என்கிறார் ஔவை


""நாங்கள் பாரி மன்னனுடைய

மகள்கள்"பணிவாகப் பதிலளித்து

நின்றனர்.


"என்ன...பாரியின் மகள்களா?

அதனால்தான் பாரியின் அதே 

பண்பு உங்களிடமும் 

அப்படியே இருக்கிறது."

கட்டி அணைத்து கண்கலங்கி நின்றார்

ஔவை.


"உணவு உண்ணுங்கள் அம்மையே...

இந்தக் கூழையும் கீரையையும்

தவிர தங்களுக்கு தருவதற்கு

எங்களிடம் வேறு எதுவும்

இல்லை "என்றபடி 

உணவை ஔவைக்கு அளித்துவிட்டு

 அருகில் அமர்ந்தனர் இருவரும்.


கண்களில் பெருகி வந்த

கண்ணீரை மறைத்தபடி

உணவு அருந்தினார் ஔவை.


பாடல் தானாக வந்து

விழுந்தது


"பாரி பறித்த கலனும்- பழையனூர்க்

காரி கொடுத்த களைக்கட்டும் - 

சேரமான்

வாராய் என அழைத்த வாய்மையும்

இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு நேர் "

என்று பாடினார்.


பாரி மகளிர் புன்னகைத்திருந்தனர்.

எனினும் 

அது என்ன நீலச் சிற்றாடைக்கு

நேர் என்று  பாரியையும்

காரியையும் சேரமானையும்

முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஔவை.

இந்த நீலச் சிற்றாடைக்கும் அவர்களுக்கும்

என்ன தொடர்பு?

என்று மெல்லக்

கேட்டுவிடுகின்றனர் .

"அதுவா...கூறுகிறேன் 

 கேளுங்கள் "என்றார் ஔவை.


"நீங்கள் நீலச் சிற்றாடை அளித்து

என்னை மரியாதை செய்தீர்கள்.

இது எதற்கு இணையானது

தெரியுமா?

ஒரு முறை பாரி அரண்மனைக்குள்

சென்றிருந்தேன்

பாரி என்னை நல்லமுறையில்

கவனித்து தனது அரண்மனையில்

நிறைய நாட்கள் வைத்து மரியாதை

செய்தார்.

நாட்கள் பல கடந்தன.

எனக்கு வேறு சில ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.

என் விருப்பத்தை பாரியிடம்

கூறினேன்

பாரிக்கு என்னை

அனுப்ப மனமில்லை.

எனினும் என் விருப்பத்திற்கு

குறுக்காக பேச மனம் வரவில்லை.

பொன்னும் பொருளும் கொடுத்து

அனுப்பி வைத்தார்.


நானும் மகிழ்ச்சியோடு சென்றேன்..


மறுநாள் அரண்மனை வாசலில் வந்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.

"மன்னா! நின் நாட்டில் கள்வரும்

உளரோ ?"

என்றேன்.

" என் ஆட்சியில் கள்வர்களா?

இருக்காது.... இருக்கவும் கூடாது.

தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்."

என்று நம்ப மறுத்தார் மன்னர்.


"நீ வழங்கிய பொன்னையயும் பொருளையும் கள்வர் கவர்ந்து

சென்று விட்டனர். இதுதான் உண்மை.

நீ தான் அவர்களைக் கண்டுபிடித்துத்

தர வேண்டும்."


மன்னர் புன்னகைத்தார்.


"நான் கள்வர் நடமாட்டம் இருக்கிறது என்கிறேன்.

தாங்கள் நம்ப மறுத்து சிரிக்கிறீர்கள்."

சற்று கோபமாகக் கேட்டேன்.


"என் ஆட்சியில் கள்வர் பயம்

என்பதை நான் 

ஒரு போதும் ஒத்துக் கொள்ளமாட்டேன்."


"அப்படியானால்...."


"கள்வர் இல்லை "என்கிறேன்.


"என் பொருளைக் கவர்ந்து சென்றவர்கள்.."


"என் அரண்மனை காவலர்கள்."

"மன்னா...

என்ன சொல்கிறீர்கள்?

அரண்மனைகள் காவலர்கள் கள்வர்களா? காவலர்கள் கள்வர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?"


"கண்டுபிடிப்பது எதற்கு?

நான்தானே அனுப்பினேன்."

"தாங்கள் களவு செய்ய

காவலர்களை அனுப்பினீர்களா?

ஒன்றும் புரியவில்லையே..."


"ஔவையே ! என்னை மன்னித்து

விடுங்கள்.

இன்னும் அதிக நாட்கள் எங்கள்

அரண்மனையில் இருந்து 

தாங்கள் கவி பாட வேண்டும். 

அதை நான் கேட்க வேண்டும்.

தமிழ் இன்பத்தில் திளைக்க

வேண்டும் என்ற ஆசை.

ஆசையல்ல பேராசை.

அதற்கு எனக்குவேறு

வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் தாயே" என்றார்.


அந்தநாள் பாரியின் அன்பில் என்னைத் தொலைத்தேன்.

மேலும் சில நாட்கள்

அங்கேயே தங்கி இருந்து

கவி பாடி மகிழ்வித்தேன்.


"அறிந்த ஒன்று. அந்த பழையனூர் காரி

களை கொட்டுக் கதை என்றீர்களே!

அது என்ன என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?"


"ஓ...அதுவா?

"ஒரு முறை பழையனூரை ஆண்ட

காரி என்ற மன்னன் அரண்மனைக்குச்

சென்றேன்.


மன்னனைப் புகழ்ந்து பாடினேன்

பரிசுகள் வழங்கினார்.

நான் செல்ல வேண்டிய 

அந்த நாளும் வந்தது.


மன்னனுக்கு என்னை அனுப்ப மனமில்லை.

கையில் ஒரு களை வெட்டியைக்

கொடுத்து

தான் வரும்வரை களை எடுக்கும் படி

கூறிவிட்டு சென்றுவிட்டார்.


நானும் வயலில் களை எடுத்தபடி

மேலும் பல நாட்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று."


"தாங்கள் வயலில் களை எடுத்தீர்களா?


"வேறு வழி?... மன்னன் பேச்சுக்கு மறுப்பேதும் உண்டோ?"


"இல்லை...அப்புறம்?"


"அப்புறம் என்ன...?

மன்னன் என்னை  அனுப்ப மனமில்லாதுதான்  இப்படியொரு களை வெட்டியைக் 

கையில் தந்திருக்கிறான் என்ற 

உண்மை அறிந்ததும் நெகிழ்ந்து போனேன். இவர் அன்பிற்கு

முன்னால் அந்த வேலை 

எனக்கு பெரிதாகத்

தெரியவில்லை."


"அருமையாக இருக்கிறதே..

சேரமான் கதையும்  இப்படித்தானோ?"


"சேரமான் கதை சற்று மாறுபட்டது.

ஒருமுறை சேரமான் இரும்பொறை

அரண்மனையில் ஒரு பெரிய

விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.

வாருங்கள் என்று அழைத்தார்.

நானும் மன்னனைக் காணச் சென்றேன்.

நான் போன நேரத்தில்

அரண்மனையில் விருந்து

நடைபெற்றுக் கொண்டிருந்தது. வேற்று நாட்டு மன்னர்கள் ,தளபதிகள் அனைவரோடும்

மன்னர் விருந்தில் கலந்து கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும்

வாராய் என்று அழைத்து 

தன்னோடு  அமர வைத்து 

விருந்தளித்தார்.

இவை எல்லாம்  சாதாரண ஒருவருக்கு 

கிடைக்கும் மரியாதை அல்ல.

அந்த அன்பு இன்றுவரை என்நெஞ்சில்

நிறைந்திருக்கிறது."


"உண்மையிலேயே பெருமைப்பட

வைக்கிறது."


" என்மீது எவ்வளவு பெரிய அன்பு இருந்தால் இவர்கள் எனக்கு

 இவ்வளவு பெரிய மரியாதை

செய்திருப்பார்கள்.

இன்று நீங்கள் எனக்கு அளித்த இந்த

நீலச் சிற்றாடை அந்த மூவரின் 

அன்பிற்கும் நிகரானது.

என்பதைத்தான் அப்படிச் சொன்னேன் "

என்றார் ஔவை.


ஔவையின் விளக்கத்தைக் கேட்டு

பாரி மகளிரான அங்கவை ,சங்கவை இருவரும்

மெய்மறந்து நின்றிருந்தனர்



என்னவொரு அறிவு!

யாரையும் குறைவாக மதிப்பிட

இடம் கொடுக்காத உயர்வு!

இவருக்கு அவர் பெரியவர்

என்று ஒப்பீடு சொல்ல 

இடங்கொடுக்காத

பேரியல்பு!


பாரி பறித்த கலன்,

காரி தந்த களை கொட்டு

சேரமான் வாராய் என்ற அழைத்த சொல்

இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு

நேர்....


Comments