உழைப்பாளர் தினம்

                          உழைப்பாளர் தினம்
       

   உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
  "  பத்து விரல்களும் பதறாது உழைத்தால்
   அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம் "என்பார்கள்.
  ஆனால் உண்மையில் இதுதான் நிலைமையா?
   நாள் முழுவதும்  கூன் ஒடிய 
உழைத்தாலும் கூலி என்னவோ 
அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான்.
இதுதான் உழைப்பாளிகளின் இன்றைய நிலை.
உழைப்பாளி தன் உழைப்புக்கு
ஓய்வு கொடுத்துவிட்டால் ஒட்டுமொத்த
உலக இயக்கமே நின்றுவிடும்.

 உழைப்பாளி வர்க்கம் நாள் 
முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தது.
 உழைத்து உழைத்து  நைந்துபோன 
கைகளில் மலர் கொடுத்து, 
அவன் வைரம் பாய்ந்த மார்புக்கு
ஆரம் சூட்டி அழகு பார்க்கும் 
நாள்தான் இந்த உழைப்பாளர் 
தினமான மே தினம்.

உழைப்பாளர்கள் பட்ட இன்னல்கள்
தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக
அவர்கள் கடந்துவந்த  பாதை,
சிந்திய செந்நீர் என்று இந்த உழைப்பாளர்
தினத்திற்கு நெஞ்சை நெகிழ வைக்கும்
ஒரு நெடிய வரலாறு உண்டு.

 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்  
வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள்
 12 மணி முதல் 18 மணி நேரம் வரை 
கட்டாயமாக வேலை செய்யும்படி 
நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனால் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் 
மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நாள் முழுவதும் வேலை .ஆனால் சம்பளம்
மட்டும் போதுமானதாகபடி  வழங்கப்படவில்லை.
அப்போதுதான் உழைப்பாளர் மனதில்
தமக்கான உரிமைகளுக்காக குரல்
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்
உதயமானது.வேலை நேரம் குறைக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழும்பியது.

தொழிலாளர் எண்ணங்களை வெறும்
 கோரிக்கைகளாக எழுதி
கொடுத்துவிட்டால் மட்டும் போதாது.
போராட்ட களத்தில் இறங்கி போராட வேண்டும்.
தனிமனிதனாக நின்று போராட முடியாது.
அதற்காக தொழிலாளர்களை எல்லாம்
ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு தேவை.

இதனால் ஆறு முக்கிய கோரிக்கைகளை 
முன் வைத்து இங்கி்லாந்தில் 'சாசன இயக்கம் '
என்ற ஒரு அமைப்பு  முதன்முதலாக 
உருவாக்கப்பட்டு,
போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியது.

இந்த அமைப்பு முன்னெடுத்த போராட்டம்
படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவியது.
உலக நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும்
தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க
ஆரம்பித்தனர்.
 இந்தப் போராட்டம்தான் பின்னாளில்  
ரஷ்ய புரட்சிக்கும் வித்திட்டதாக 
கூறப்படுகிறது.
அமெரிக்கா போன்ற பல நாடுகளில் 
எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம்  
வலுப்பெறத் தொடங்கியது. 
 'அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு'
 என்ற இயக்கம் 8 மணிநேர வேலை 
என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில்
தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அமெரிக்காவில்
பல இடங்களில் புரட்சி வெடித்தது.

போராட்டத்தின்போது
துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறின.
முன்னணித் தலைவர்கள்  பலர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.போராட்டக்காரர்களின்
குரல்வளையை நசுக்க அரசு கடுமையான
சட்டங்களைக் கொண்டு வந்தது.
 இந்தப் போராட்டத்தின்போது
தொழிலாளர் தலைவர்கள் எட்டு பேர்  
தூக்கிலிடப்பட்டனர்.
 இந்த நிகழ்வு தொழிலாளர்கள் இடையே பெரும் 
கொந்தளிப்பை  ஏற்படுத்தியது. 
உலக நாடுகளில் உள்ள அனைத்து
தொழிலாளர்களும் தொழிலாளர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக
குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இப்போது உலக நாடுகள் அனைத்திலும்
உள்ள தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை
என்ற பிரச்சினையைக் கையில் எடுத்து
தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  1889 ஜூலை மாதம் பாரிசில் சர்வதேச 
தொழிலாளர் மாநாடு நடத்தப்பட்டது.
 இதில் உலக நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் 
கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய
எட்டு மணி நேர வேலை  என்ற கொள்கையை 
கையில் எடுத்து தீவிரமாக
போராட வேண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 அமெரிக்காவில் நடைபெற்ற கொடூர
கொலையை வன்மையாக கண்டித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போதுதான்   1890 மே ஒன்றாம்நாள்
 சர்வதேச அளவில் தொழிலாளர் 
இயக்கங்களை நடத்த வேண்டும் 
என்று அறைக்கூவல் விடுக்கப்பட்டது.

இத்தகைய போராட்டங்களும் சிகாகோ உயிர்த்
தியாகமும் உழைப்பாளர் தினம்
உருவாக காரணமாக அமைந்தது.

போராட்டத்தின் தீவிரத்தை
உணர்ந்த  அமெரிக்கஅரசு  மே முதல் நாளை
தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொண்டது.
எட்டுமணி நேர வேலை ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

" உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்."
இது தான் மே தின முழக்கமாக  உள்ளது.

தமிழகத்தில் தோழர் சிங்காரவேலர் 
தலைமையில் சென்னையில்
முதன்முதலாக தொழிலாளர்தின
 உறுதிமொழி எடுக்கப்பட்டது.
"உழைப்போரே உயர்ந்தோர்;
உழைப்போருக்கே உலகம் உடைமை"
என்ற கொள்கையை உயிர்மூச்சாகக்
கொண்டு குரல் கொடுத்து வந்தவர்
தோழர் சிங்காரவேலர்.

 மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் விதத்திலும்  
அன்றைய முதல்வர் காமராசர்  உத்தரவின் 
பேரில் 1959ஆம் ஆண்டு சென்னை 
மெரீனா கடற்கரையில்  உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
   
           விரல்களை ரணமாக்கி
           வியர்வையை உரமாக்கி
            உழைப்பை ஊருக்காக்கி
           தோள்களில் உலகைத் தூக்கி
            
    உழைக்கும் வர்க்கதின்
    உரிமையை மீட்டெடுத்தநாள் 
    உழைப்பாளர் திருநாள்!

Comments

Popular Posts