இரவு நடத்தும் நாடகம்

                         இரவு நடத்தும் நாடகம்

கயிற்றுக் கட்டிலில்
 மல்லாந்து கிடந்து
 அண்ணாந்து பார்க்கையில்
 பஞ்சான மேகங்கள் 
  துஞ்சாமல் ஓட்டம் காட்டும் _ மேகங்கள்
  துஞ்சாமல் ஓட்டம் காட்டும்.!

   கொஞ்சமாய் ஒளி சிந்தி
   கஞ்சமாய் சிரித்து
   மிஞ்சும் நேரத்தில்
   விஞ்சும்  மொழி பேசி
  கொஞ்சித் துயில் கெடுக்கும் _ விண்மீன்கள்
  கொஞ்சித் துயில் கெடுக்கும்.!

   ஊதக் காற்றும்
   உரசி என்றன் காதோடு
   ஊமைக் கதைகள் பேசி
   உள்ளம் குளிர 
   உறவாடி நடுங்க வைக்கும் _ காற்று 
    உறவாடி நடுங்க வைக்கும்.!
                                
  கார்மேகம் தேடி
  கண்கள் ஓடுகையில்
  வெற்று உடம்பைக் காட்டி
  சற்றும் கள்ளம் இல்லை
 சொல்லாமல் சொல்லி நிற்கும் _ வானம்
 சொல்லாமல் சொல்லி நிற்கும்.!

 தடாகத்தில் நீந்தி
 தத்தளிக்கும் நிலவுப் பெண்ணை
அள்ளி கையில் எடுக்கையில் 
துள்ளி   ஒளிந்து நின்று
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும் _ நிலவு
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும்!
                                
சிங்கார மெட்டிசைத்து
 சிலுசிலுவெனக்  கொம்பசைத்து
 சிலிர்க்க வைக்கும் காற்றோடு
  சிருங்கார இசை கலந்து
  சீரான பாட்டிசைக்கும் _சிள்வண்டு
   சீரான பாட்டிசைக்கும்.!
                                   
   பின்னிரவு நேரத்தில் 
  பிய்த்து வைத்த பஞ்செடுத்து
  புல் பூண்டு முகமெங்கும்
  பூசி  குளிர வைத்து
  பூரிப்பு காட்டி நிற்கும் _பனித்துளிகள்
  பூரிப்பு காட்டி நிற்கும்.!

 கீழ்வானம் சிவக்கும் முன்னே
  கூரை ஏறி நின்று
  கட்டில் விட்டெழும்புவென
  கொக்கரக்கோ....கொக்கரக்கோவென
   கூவி எமை எழுப்பும்  _ சேவல்
   கூவி எமை எழுப்பும் !
                   









Comments

Popular Posts