இரவு நடத்தும் நாடகம்
இரவு நடத்தும் நாடகம்
கயிற்றுக் கட்டிலில்
மல்லாந்து கிடந்து
அண்ணாந்து பார்க்கையில்
பஞ்சான மேகங்கள்
துஞ்சாமல் ஓட்டம் காட்டும் _ மேகங்கள்
துஞ்சாமல் ஓட்டம் காட்டும்.!
கொஞ்சமாய் ஒளி சிந்தி
கஞ்சமாய் சிரித்து
மிஞ்சும் நேரத்தில்
விஞ்சும் மொழி பேசி
கொஞ்சித் துயில் கெடுக்கும் _ விண்மீன்கள்
கொஞ்சித் துயில் கெடுக்கும்.!
ஊதக் காற்றும்
உரசி என்றன் காதோடு
ஊர்க் கதையைப் பேசி
உச்சி குளிர
உறவாடி நடுங்க வைக்கும் _ காற்று
உறவாடி நடுங்க வைக்கும்.!
கார்மேகம் தேடி
கண்கள் ஓடுகையில்
வெற்று உடம்பைக் காட்டி
சற்றும் கருணை இல்லை
சொல்லாமல் சொல்லி நிற்கும் _ வானம்
சொல்லாமல் சொல்லி நிற்கும்.!
தடாகத்தில் நீந்தி
தத்தளிக்கும் நிலவுப் பெண்ணை
அள்ளி கையில் எடுக்கையில்
துள்ளி ஒளிந்து நின்று
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும் _ நிலவு
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும்!
சிங்கார மெட்டிசைத்து
சிலுசிலுவெனக் கொம்பசைத்து
சிரித்து நிற்கும் காற்றோடு
சில்லென்று பாட்டிசைத்து
சீராட்டித் தூங்க வைக்கும் _சிள்வண்டு
சீராட்டித் தூங்க வைக்கும்.!
பின்னிரவு நேரத்தில்
பிய்த்து வைத்த பஞ்சு தன்னை
புல்லின் மீது
பூசி வைத்து
பூரித்துப் பொங்கி நிற்கும் _பனித்துளிகள்
பூரித்துப் பொங்கி நிற்கும்.!
ஆதவன் முகம் காட்டுமுன்னே
ஆரேழுமுறை கூவி
ஆரடா தூங்குகிறாய்
பாரடா விடியலை
கட்டியம் கூறி நிற்கும் _ சேவல்
கட்டியம் கூறி நிற்கும்.!
Comments
Post a Comment