கன்னா பின்னா
கன்னா பின்னா
கன்னாபின்னாவா.....வேண்டாமப்பா உங்க கன்னாபின்னா.
ஏதாவது கன்னாபின்னா என்று பேசிப்புடுவேன்...கேட்கிறது...கேட்கிறது ....
கன்னாபின்னா என்று என்னைத் திட்டுவது கேட்கிறது.
உங்கள் மனதின் குரல் எப்படி எனக்கு கேட்கிறது என்று கேட்கிறீர்களா?
இப்படி கன்னாபின்னா என்று நீங்கள் கத்துவது முதல் முறையா என்ன?
வீடு ஏன் கன்னாபின்னா என்று கிடக்குது எத்தனை முறை திட்டி இருப்போம்.
திட்டும் வாங்கி இருப்போம்.
" என் முன் நிற்காத ஓடிடு.
கன்னாபின்னா என்று அடிச்சுபுடுவேன் "தம்பியை துரத்திவிட்டு காட்டுகத்தல் கத்தியிருபோம்.
தேர்வு எழுதும்போது ' கன்னா பின்னா' என்று எதையாவது எழுதி வைத்துவிட்டு தத்தக்குபித்தக்கு என்று விழித்தவர்கள்தானே நாம்.
கன்னாபின்னாவென்று எதையாவது நோட்டு புத்தகத்தில் கிறுக்கி வைத்தோமே நினைவில்லையா?
" கன்னா பின்னா என்று ஏதாவது பேசுறாம்பா...ஒரு அறிவும் கிடையாது " அப்பாவிடம் போய் அண்ணனைப்பற்றி புகார் பத்திரம் வாசித்தது நினைவில் இல்லையா என்ன....
" கன்னாபின்னா என்று எதையாவது உடுத்திருப்பா..".சிலர் ஆடை அணிவதைப்பற்றி பேசாமலா இருந்தோம்.
" கன்னாபின்னான்னு ஓடாத...பார்த்துப் போ" அம்மா எத்தனை முறை அறிவுரை சொல்லி அனுப்பி இருப்பார்கள்.
இப்படி இந்த கன்னாபின்னாவை கன்னாபின்னா என்று பயன்படுத்தியவர்கள் அல்லவா நாம்.
ஆனால் இதுவரை கன்னா பின்னாவுக்கு என்ன பொருள் உண்டு என்று என்றாவது சிந்தித்தது உண்டா?
இதற்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது?
கன்னாபின்னா என்றால் கன்னாபின்னாதான் என்றுதான் நினைத்திருப்போம்.
அப்படி நினைத்திருந்தால் உங்கள் நினைப்பை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.
எல்லா சொல்லும் பொருளுடையதுதான்.
நாம் பேசும் இடத்திற்கு ஏற்ப பொருள் வேறுபட்டுக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் ஒரே சொல்லை வெவ்வேறு பொருளில் வெவ்வேறு இடங்களில் நம்மால் பயன்படுத்த முடிகிறது.
நான் சொல்ல வந்த கன்னாபின்னாவே வேற...வேற...வேறெங்க.
இது இலக்கிய நயமிக்க ஒரு கன்னாபின்னா.
சோழ நாட்டில் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு மனிதன்.
நாட்டில் மழைதண்ணி இல்லாமல் கொடும்பஞ்சம். சாப்பாட்டுக்கு வழியில்லை.
மனிதன் முட்டைக்கட்டிகிட்டு ஒருமூலையில் முடங்கி கிடந்தார்.
" எத்தனை நாட்களுக்குதான் பட்டினி கிடப்பது.?
ராஜாவைப் புகழ்ந்து பாடி ஏதாவது சன்மானம் வாங்கி வாருங்கள். "
மனைவி ஒரே நச்செரிப்பு.
"எனக்கு கவிதை எழுத தெரியாதே...! பிறகு எப்படி பாடுவது? " "நாலுவரி எழுத தெரியாதா "
" கவிதையைப் பற்றிய அரிச்சுவடே தெரியாதே.அரசவையில் பாட வேண்டும் என்றால் சும்மாவா?
"என்னசெய்வியளோ ஏது செய்வியளோ ...நீங்க போயே ஆக வேண்டும். அல்லது நானும் பிள்ளைகளும் பட்டினயில் சாவ வேண்டியதுதான்" புலம்பி தள்ளினாள் மனைவி.
மனைவியின் தொணதொணப்பு தாங்காமல் வெளியில் புறப்பட்டான் அந்த அப்பாவி.
" கவிதை எழுது...கவிதை எழுது ...என்கிறாள்.
எப்படி எழுதுவது?
சொற்களை எப்படி கையாளவேண்டும் என்றே தெரியாதே" என்று புலம்பியபடியே வீதியில் நடந்தான்.
நீச்சல் தெரியாதவனை குளத்தில் பிடித்து தள்ளிவிட்டது போன்ற நிலைமை. இனி நீந்தித்தான் ஆக வேண்டும்.
கவிதை எழுதித்தான் ஆக வேண்டிய கட்டாயம்.
தெருவில் சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர் .
சிறிது நேரம் விளையாட்டாக அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
பெண் பிள்ளை ஒருத்தி சிறிய இலையில் மாப்பிள்ளைக்கு மண் சோறு படைத்து 'இந்தா சாப்பிடு' என்றாள்.
முதல் வரி கிடைத்தாயிற்று.
" மண்ணுண்ணி மாப்பிள்ளையே " என்றுமுதல் வரியை எழுதிக் கொண்டான்.
அப்படியே காலார நடந்து செல்ல.... அருகில் உள்ள மரத்தில் இருந்து காகம் கரைவதும் .....குயில்கள் கூவுவதும் ....காதில் வந்து விழுந்தது.
அடுத்து " காவுறியே கூவுறியே" என்று எழுதிக்கொண்டான்.
பக்கத்திலுள்ள கோவிலுக்குள் பெருச்சாளி ஒன்று ஓடி மறைவதைப் பார்த்ததும் "உங்கப்பன் பெருச்சாளி "என்று அடுத்த வரியையும் சேர்த்து எழுதியாயிற்று.
இதற்கு மேல் எப்படி எழுதுவது என்று புரியவில்லை.
தன் நண்பனிடம் போய் காட்டினான்.
வாசித்துப் பார்த்த நண்பன் "என்னடா கன்னா பின்னா என்று எதையோ எழுதி வைத்திருக்கிறாய்.
மன்னனைப் புகழ்ந்து ஒரு வரி கூட இல்லையே....இதை தூக்கிட்டா மன்னனிடம் போகப்போகிறாய்." சிரித்தான்.
"அட ...சரியாக சொன்னாய். " அடுத்த வரியும் கிடைத்தாயிற்று.
விறுவிறுவென்று " கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்க பெருமானே!" என்று எழுதி முடித்தான்.
எழுதியதை அரசவையில் கொண்டு நீட்ட ...படியுங்கள் என்றார் அரசர்.
படித்ததுதான் தாமதம் அரசவையில் இருந்த அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.
மன்னனைப்போய் இப்படி கன்னா பின்னா என்று எழுதியிருக்கிறானே சிலர் முணுமுணுத்தனர்.
பாடியவரின் முகம் அப்படியே கூம்பிப் போயிற்று.
பரிதாபமாக அவையோரைப் பார்த்தான்.
கம்பர் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
தன் வறுமை காரணமாகவே புலவர் இங்கு வந்திருக்கிறார்.
அவருக்கு ஏதாவது சன்மானம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைத்தார்.
" ஏன் சிரிக்கிறீர்கள். ?
அருமையான பாடல்தானே எழுதி வந்திருக்கிறார். "
" அருமையான பாடலா. ?"
" எப்படி .....அப்படியானால் நீங்களே பொருள் சொல்லுங்கள்" என்றான் மன்னன்.
எல்லா வரிகளுக்கும் பொருள் சொல்லிவிட்டு இறுதியில் கன்னாபின்னாவுக்கு வந்தார் கம்பர்.
கன்னா பின்னாவுக்கு என்ன சொல்ல போகிறார் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கன்னா என்றால் கொடுப்பதில் கர்ணனைப் போன்றவனே!
பின்னா என்றால் கர்ணனுக்குப் பின்னால் பிறந்த நீதி வழுவாத தர்மன் போன்றவனே!
தென்னா மன்னா என்றால் தென்னாட்டை ஆளும் மன்னனே!
என்று பொருள் கூறி அனைவரையும் அசர வைத்தார் கம்பர். அனைவரும் அசந்து போயினர்.
கன்னா பின்னாவுக்குள் இத்தனை சமாச்சாரமா வியந்துபோன மன்னன் பாராட்டி பரிசளித்து அனுப்பி வைத்தார்.
கன்னா பின்னா இப்போது கவிதையாகிப் போனது.
இது தாங்க தமிழ்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"
பாரதிதாசன் இதனால்தான் இப்படி பாடியிருப்பாரோ?
Comments
Post a Comment