ஒட்டா ஒருமதி கெட்டாய்
ஒட்டா ஒருமதி கெட்டாய்
போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.
ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.
ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக போட்டி போட்டுக் கொள்கிறான்.
தான்தான் பெரியவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக போட்டி போடுகிறான்.
போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....
இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு.
அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று அன்றாடம் அறிவுரை கூறும் பெருமதியாளரிடம் அவை காணப்படும்போது அது நம்மை சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது.
இந்தப் போட்டியும் பொறாமையும் புலவர்களையும் விட்டு வைக்கவில்லை.
குறை கண்டு பிடிப்பதிலேயே சிலர் குறியாக இருப்பர்.
இந்தக் குணம் ஔவையிடம் நிரம்பவே இருந்தது.
எப்போதும் ஔவைக்குத் தனது புலமைமீது ஒரு கர்வம் உண்டு.
ஔவையின் கர்வமும் குறை கூறும் குணமும் யார் யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கிறது பாருங்கள்.
ஒருநாள் ராஜவீதியில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் இரு கால்களையும் நீட்டி ஔவையார் அமர்ந்திருந்தார்.
அப்போது மன்னன் அந்த வழியாக வீதி உலா வருகிறார்.
மன்னனைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்த ஔவை படக்கென்று ஒரு காலை மட்டும் மடக்கிக் கொண்டார்.
அரசருக்கு அருகில் வெண்பா புலி என்று அழைக்கப்படும் புகழேந்தி புலவர் வருகிறார் .
அவரைக் கண்டதும் தன் இரண்டு கால்களையுமே மடக்கி மரியாதையாக அமர்ந்து கொண்டார் ஔவை.
பின்னால் ஒட்டக்கூத்தர் வருகிறார்.
ஒட்டக்கூத்தரைப் பார்த்ததும் பழையபடி தன் இரண்டு கால்களையும் நீட்டி அவமரியாதை செய்வது போல அமர்ந்திருந்தார்.
ஒட்டக்கூத்தருக்கு தன்னை இந்தக் கிழவி வேண்டுமென்றேதான் அவமானப்படுத்துகிறாள் என்பது புரிந்து போயிற்று.
பல்லை நறநறவென்று கடித்தார்
.என்ன திமிர் இந்த கிளவிக்கு....
"ஏய் கிழவி ....நான் வரும்போது ஏன் கால்களை நீட்டி உட்கார்ந்திருக்கிறாய்?
" ஏன் ஏதாவது பிரச்சினையா"
" அரசன் வரும்போது ஒற்றைக் காலை மடக்கினாய்"
"ஆமாம்...மடக்கினேன்...நாடாளும் மன்னனுக்கு மரியாதை கொடுப்பது குடிமக்களின் கடமை"
" புகழேந்தியைக் கண்டதும் இரண்டு கால்களையும் மடக்கினாயே அவர் மன்னனை விடவும் பெரியவரோ?"
"இதிலென்ன சந்தேகம். "
"புகழேந்தி மகாமதியாளர். அதனால் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினேன்."
"என்னைக் கண்டதும் இரண்டு கைல்களையும் நீட்டி அமர்ந்தீரே அதற்கு என்ன அர்த்தம்."
" மரியாதை கொடுக்கிற அளவுக்கு நீர் ஒன்றும் பெரியவரல்ல என்று அர்த்தம்"
ஒட்டக்கூத்தரின் தர்ம சங்கடமான நிலைமை மன்னனுக்கும் புரிந்து போயிற்று.
"ஔவையே தங்கள் புலமையை நான் மெச்சுகிறேன்.
இருப்பினும் ஒட்டக்கூத்தரை அவமானப்படுத்துவதுபோல் தாங்கள் நடந்து கொண்டதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கூறவேண்டும்." என்றார் மன்னர்.
"ஒட்டக்கூத்தர் என்ன ...பெரிய அறிவாளியா நான் அவரை மதிப்பதற்கு? " மறுபடியும் அதே கர்வமான பேச்சு.
"ஒட்டக்கூத்தர் மதியற்றவர் என்று உங்களால் எப்படி கூறமுடியும்.?"
" காரணம் தானே கேட்டீர்கள் .....இதோ நிரூபிக்கிறேன்."
"கடைசி வரியில் மூன்றுமுறை 'மதி' வரும்படி ஒரு பாடலைப் பாடச் சொல்லுங்கள் பார்ப்போம்."
"பாடல்தானே இதோ...இப்போதே பாடுகிறேன்."
மடமடவென்று ஒரே மூச்சில் பாடி முடித்தார் ஒட்டக்கூத்தர்.
" .... பிள்ளை மதிகண்டப் பேதை பெரிய மதியுமிழந்தாளே" என்பது அவர் பாடலின் கடைசிவரி.
" ஒட்டா ஒரு மதி கெட்டாய் "என்று இரட்டை அர்த்தத்தில் பேசி நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ஔவை.
மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இப்போது புகழேந்தியைப் பாடச் சொன்னார்.
புகழேந்தியும் ஒட்டக்கூத்தரைப் போலவே குறைந்த நேரத்திற்குள் பாடி முடித்துவிட்டார்.
"மிக்க நன்று... சரியாகப் பாடினீர்கள் "என்றார் ஔவை.
"காரணத்தைக் கூறினால்தானே எங்களைப் போன்றவர்களுக்குப் புரியும்."
" ... வெங்கட் பிறைக்குங் கரும் பிறைக்கும் மெலிந்த பிறைக்கும் விழியாளே."
என்பது புகழேந்தி பாடிய பாடலின் கடைசிவரி.
"இதில் 'வெங்கட் பிறை' 'கரும் பிறை' 'மெலிந்த பிறை' என்று மூன்று முறை 'பிறை'என்று வந்துள்ளதா.?.."
"ஆமாம்...உள்ளது."
" பிறை என்பது மதியின் மற்றுமொரு பெயர்தானே."
"ஒத்துக்கொள்கிறேன்."
" ஒட்டக்கூத்தர் பாடலில் 'பிள்ளை மதி ' 'பெரிய மதி 'என்று இரண்டு முறைதானே' மதி் 'வந்திருக்கின்றது"
" அதைத்தான் "ஒட்டா ஒருமதி கெட்டாய்" என்று கூறினேன். இதிலென்ன தவறு இருக்கிறது"
இதற்குமேல் மன்னனால் என்ன சொல்ல முடியும்?
மதி கெட்டவனே ...என்று சொல்வதற்கு இப்படியும் ஒரு வழியா?
அப்பப்பா....குறை கண்டுபிடிக்கலாம் .....அதற்கு இப்படியா....?
வெற்றிலை இடிக்கும் நம்ம பாட்டிமார்கள் உரலுக்குள்தான் ஊர்க்கதையைப் போட்டு இடிப்பார்கள்.
கால்களை நீட்டி ...தண்டட்டியை ஆட்டி ஆட்டி ... பேசுவதற்குப் பின்னால் இத்தனைச் சமாச்சாரம் உள்ளதா?
இந்தப் பாட்டிகளே இப்படித்தான்.
எப்படி எப்படி எல்லாம் இருக்கிறாங்கப்பா...
Comments
Post a Comment