நெடுநீர் மறவி மடிதுயில்....

நெடுநீர் மறவி மடிதுயில்.....


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் "
                       குறள்  :  605

நெடுநீர் _ காலம் தாழ்த்துதல்
மறவி   _  மறதி
மடி  _  சோம்பல்
தூக்கம்  _  பெருந்தூக்கம்
நான்கும் _ நாலும்
கெடுநீரார் _ கெட்டுப்போகும் தன்மை உடையவர்
காம _  விரும்பி
கலன் _ அணி, மரக்கலன்

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், பெருந்தூக்கம்
ஆகிய இந்த நான்கும் கெட்டுப்போகும்
இயல்புடையவர் விரும்பி ஏறிச் செல்லும்
மரக்கலனாகும்.

விளக்கம் : 

நாளை நாளை என்று காலம் தாழ்த்தி
ஒரு செயலைச் செய்யாது நீர்த்துப்
போகச் செய்தல் அச்செயலைச் செய்ய 
விருப்பமின்மையைத்தான் காட்டுவதாக
இருக்கும்.
மறந்து போய்விட்டது...மறந்து போய்விட்டது
என்று எதுவுமே செய்யாமல் இருப்பது
ஆர்வம் இல்லாமையால் நிகழும்
நிகழ்வாகவே இருக்கும்.

சோம்பல் முட்டைக் கட்டி மூலையில்
முடங்க வைத்துவிடும்.சோம்பேறியால்
எதுவும் செய்ய முடியாது.

சோம்பலில் முடங்கிக் கிடந்தால் 
பெருந்தூக்கம் பெருங்கரம் நீட்டி
அணைத்துக் கொள்ளும்.
நித்திரை நிரந்தர குடியுரிமை வாங்கி
குடியிருக்கத் தொடங்கிவிடும். 

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல்,
பெருந்தூக்கம் ஆகிய நான்கும்
ஒருவனிடம் குடி வந்துவிட்டால்
அவன் கெட்டுப்போவது உறுதி
என்கிறார் வள்ளுவர்.

கால தாமதப்படுத்துவதைத் தொடர்ந்து
வருவனதான் மறதி, சோம்பல், தூக்கம்
எல்லாமே. 
எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
ஒன்றை விரும்பிவிட்டால் மற்றவை எல்லாம்
தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்.
ஆதலால்தான் இவை நான்கையும் 
ஒரே குறளில் கூறி நம்மை சிந்திக்க
வைத்துள்ளார் வள்ளுவர்.


கால தாமதம்,மறதி, சோம்பல், தூக்கம் 
என்னும் நான்கின் மீதும் ஏறி 
வாழ்க்கைப் பயணம் நடத்துவோமானால்
இறுதியில் போய்ச் சேருமிடம்
இன்னல் நிறைந்ததாகத்தான்
இருக்கும்.

நன்றாக வாழ விருப்பமா?
எந்த ஒரு செயலையும் இன்றே 
செய்து பழகுங்கள்.
மறதி என்ற சொல்லை  உங்கள்
அகராதியிலிருந்து
தூக்கி வீசுங்கள்.
சோம்பலா? 
அருகில் அண்ட விட்டுவிடாதீர்கள்.
பெருந்தூக்கமா?
பேராபத்து. வேண்டவே வேண்டாம்.
எப்போதும் விழிப்புடன் இருங்கள்.
இவற்றை எல்லாம் 
சொல்லாமல் சொல்லி
கவனமாக  வாழ்க்கைப் பயணத்தை
மேற்கொள்ளுங்கள் 
என்பதுதான் இக்குறள் மூலம் நாம்
அறியப்படும் கருத்தாக உள்ளது.

 English couplet :

"Delay, oblivion, sloth and sleep ; these four are
 pleasure_boat to bear the doomed to ruin's shore"

Explanation : 

  Procrastination, forgetfulness ,idleness and sleep
  these four things form the vessel which is desired by
  those destined to destruction .
  
Transliteration :

"Netuneer maravi matidhuyil Naankum
Ketuneeraar kaamak kalan "
  





Comments

Popular Posts