மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோநோக்கி வாழும் குடி "
என்கிறார் வள்ளுவர்.
வானம் வழங்கும் மழையை நம்பித்தான்
உலக உயிர்கள் வாழ்கின்றன.
மன்னவனின் செங்கோலை
நம்பித்தான் குடிமக்கள் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
"தாயைப் போல பிள்ளை;
நூலைப் போல சேலை "
என்பார்கள். பிள்ளைகள் தன்
தாய் எத்தகைய குணநலன்களைப்
பெற்றிருந்தாரோ அதனைப் போன்ற
குணநலன்களையே பெற்றிருப்பர்.
அதுபோல நூல் இருக்கும் தரத்திற்கு
ஏற்பவே சேலையின் தரம் இருக்கும்.
இது நாம் அனைவரும் அறிந்த
ஒரு பழமொழி.
"மன்னன் எவ்வழி :
மக்கள் அவ்வழி "
என்றும் ஒரு பழமொழி உண்டு.
மன்னன் நல்லவனாக இருந்தால்
மக்களும் நல்லவர்களாக இருப்பர்.
மன்னன் கெட்டவனாக இருந்தால்
மக்களும் கெட்டவர்களாகத்தான்
இருப்பர். இதுதான் இதற்கான
பொருளாக இருக்க முடியும்.
மன்னன் செங்கோல் தவறாது
ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும்
மகிழ்ச்சியாக இருப்பர்.
அதனால் களவு, கொலை , கொள்ளை
போன்ற எந்தவிதமான தீய
செயல்களும் நடைபெற வாய்ப்பு
இருக்காது.மன்னன் நம்மை
பாதுகாத்துக் கொள்வான் என்ற
நம்பிக்கையில்தான் மக்கள் எந்தவித
அச்சமுமின்றி தூங்க முடிகிறது.
மாறாக மன்னன் கொடுங்கோலாக...
அளவுக்கு அதிகமாக வரி வசூலிப்பவனாக...
ஆடம்பர பிரியனாக ...இருந்தால்
நாட்டில் நல்லாட்சி நடைபெறாது.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ
முடியாது.
நாட்டில் எப்போது என்ன நிகழுமோ என்ற
ஒரு அச்ச உணர்வோடே வாழ வேண்டி
இருக்கும்.வறுமை குடிகொண்டுவிடும்.
அதனால் களவு, வழிப்பறி, கொலை,
கொள்ளை மிகுந்துவிடும்.
பிரான்சின் பதினாறாம் லூயி
மன்னன் ஒரு மன்னன் எப்படி
அரசாட்சி செய்யக்கூடாது என்பதற்கு
உதாரணமாக இருந்தான்.
அதனால் புரட்சி வெடித்தது.
மன்னனும் அவனது மனைவியும்
ஆடம்பரப் பிரியர்கள்.
அதனால் அவரால் ஆட்சியைத்
திறமையாக நடத்த முடியவில்லை.
நாடு திவாலாகி விட்டது .
"மன்னா! உடனடியாக
சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டும் இல்லையேல் மக்கள்
வறுமையில் வாட வேண்டியிருக்கும்"
என்று எச்சரித்தார் மந்திரி.
"நாடு தானே திவாலாகிவிட்டது.
அதற்கு நமக்கு என்ன? என்று
முந்தி வந்து கேட்டார்
மகாராணியார் மரீ அன்டெனெட்.
அரண்மனை ஆடம்பர
செலவுகளுக்காக மக்களிடம் மேலும்
அதிக வரி வசூலிக்கும்படி
பணித்தார் மன்னர்.
ஏற்கனவே நாட்டில் பஞ்சம்
தலைவிரித்து ஆடியது.
இப்போது மேலும் வரிவிதித்தால் மக்கள்
எங்கு போய் முறையிடுவார்கள் ?
நாட்டு மக்கள் மேலும் அதிக
கொடுமைக்குள் தள்ளப்பட்டனர்
என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒருநாள் மன்னன் மகாராணியோடு
உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார்.
"மன்னா! ரொட்டித் துண்டு
கூட கிடைக்கவில்லையே!
எங்கள் பசியைப் போக்க
ஏதாவது வழி செய்யுங்கள்" என்று
கண்ணீரோடு வீதிகளில் நின்று
மக்கள் கதறினர்.
மகாராணியோ ....
" ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன?
கேக் வாங்கி சாப்பிட வேண்டியதுதானே!"
என்றார் நக்கலாக.
மக்கள் வெறுப்படைந்தனர்.
போராட்டத்தில் குதித்தனர்.
மன்னரையும் மாகாராணியையும்
துரத்தித் துரத்தி கல்லால் அடித்தனர்.
மன்னன் சரியாக ஆட்சி புரியாவிட்டால்
மக்களும் தாறுமாறான காரியங்களில்
ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தைத்
தேடிக்கொள்ள வேண்டியிருக்கும்.
அரசன் மக்களைக் காப்பாற்றினாலும்
அந்த மன்னனைக் காப்பாற்றுவது
முறையான ஆட்சிதான்.
பொற்கை பாண்டியன் என்று ஒரு
மன்னன் இருந்தான்.
அந்த மன்னன் காலத்தில் நாட்டில்
எந்த திருட்டு பயமும் இருக்காதாம்.
குடி மக்கள் எந்தவித அச்சமுமின்றி
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இரவு ஊர்க்காவலுக்காக பணியாளர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர்.
இரவு பணியில் இருக்கும் காவலர்கள்
" காவல்...காவல்.."
என்று சொல்லிக் கொண்டே
கதவைத் தட்டிவிட்டுச் செல்வராம்.
இதனால் மக்கள் காவலர் இருக்கின்றனர்
என்று அச்சமின்றி தூங்க முடிந்தது.
ஒருநாள் பாண்டிய மன்னன்
இரவு காவலராக மாறு வேடமிட்டு
நகரைச் சுற்றி வருகிறான்.
பார்பனர் வசிக்கும்
தெருவில் வரும்போது ஒரு வீட்டிலிருந்து
பேச்சொலி கேட்கிறது. என்ன பேசுகிறார்கள் என்று
அந்த வீட்டருகே நின்று கேட்கிறான் மன்னன்.
" பொருள் தேட வெளியூர்
செல்ல வேண்டியுள்ளது .வர நாள் ஆகும்
அதுவரை நீ இங்கேயே இரு" என்கிறான்
கணவன்.
"அதுவரை நான் தனியாகவா
இங்கு இருக்க வேண்டும்?
நீங்கள் இல்லாதபோது எனக்குப் பாதுகாப்பாக
யார் இருக்கிறார்கள் ."ஒருவித அச்சத்தோடு
கேட்கிறாள் மனைவி.
"ஏன் கள்வர் வந்துவிடுவார்கள்
என்று அச்சமாக இருக்கிறதா? "
"இல்லை...தனியாக இருக்க வேண்டுமே
என்று கேட்டேன்"என்றாள் மனைவி.
"நம் மன்னர் ஆட்சியில் கள்வர் பயமா?
நாட்டு மக்களைப் பாதுகாக்கும்
பெரும்பொறுப்பு மன்னன் கையில்
இருக்கிறது.
அவனது காவலுக்கு முன்னால் வேறு
எந்த காவலும் வேண்டுமா என்ன?
நாட்டு மக்களுக்கு ஒரு துன்பம்
என்றால் மன்னன் பொறுத்துக்
கொள்ள மாட்டான்.
கவலைப்படாதே. நான் வரும்வரை
மன்னன் உன்னைப்
பத்திரமாக பாதுகாத்துக் கொள்வான்"
என்று மன்னன்மீதுள்ள நம்பிக்கையில்
மனைவியிடம் ஆறுதலாகப்
பேசுகிறான் கணவன்.
இதைக் கேட்ட மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
"நம்மீது நம் குடிமக்கள் இவ்வளவு
நம்பிக்கை வைத்திருக்கிறார்களா?
கேட்கும்போதே எவ்வளவு ஆனந்தமாக
இருக்கிறது.!"என்று நினைத்தபடி
அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான்.
தன்மீது இவ்வளவு நம்பிக்கையோடு
கணவன் மனைவியை விட்டுச் செல்கிறான்.
ஆந்த குடும்பத்திற்கு நான் ஏதாவது
செய்ய வேண்டுமே "என்று
நினைக்கிறான்.
அந்த வீட்டுக்குத் தேவையான உணவு
தானியங்களைக் கொடுத்தனுப்புவோமா
என்ற எண்ணம் எழுகிறது.
கூடாது....அந்த குறிப்பிட்ட ஒரு
வீட்டுக்கு மட்டும் உதவி செய்தால்
தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும்.
மொத்த ஊர்மக்களுக்கும் உணவு
தானியங்கள் வழங்கினால் யாரும்
தவறாக நினைக்க மாட்டார்கள்"
என்று எண்ணி அனைவருக்கும்
உணவு தானியங்கள் வழங்க
ஆணை பிறப்பிக்கிறான்.
மறுநாள் முதல் மாறு வேடத்தில்
காவலுக்கும் செல்கிறான் மன்னன்.
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது
ஒருநாள் இரவு அந்தப் பார்ப்பனர்
வீட்டிலிருந்து ஒரு ஆண்குரல் கேட்கிறது.
மன்னருக்கு அதிர்ச்சி.
கணவன் வெளியூருக்கு சென்றிருக்கும்போது
வீட்டிற்குள் யார் இந்த ஆண்மகன்?
கள்வனா? இல்லை வேறு யாரேனும்
இருக்குமா ?என்று
ஒரு ஐயம் மன்னன் மனதில்
ஒருகணம் வந்து போகிறது.
ஒரு வேளை கள்வனாக இருந்தால்....
காவலுக்கு ஆள் இருக்கிறது என்பதை
எப்படி தெரிவிப்பது?
அதனால் அந்த வீட்டுக்
கதவைத் தட்டி விடுகிறான் மன்னன்.
"யாரது" உள்ளிருந்து கோபத்தோடு
ஆண் குரல் வருகிறது.
அதிர்ந்து போகிறார் மன்னர்.
குரலுக்கு உரியவன் அவளுடைய
கணவன் அல்லவா!
இவன் எப்போது திரும்பி வந்தான்?
என்ற குழப்பத்தோடு நிற்கிறான் மன்னன்.
இப்போது வீட்டிற்குள் இருக்கும் கணவன்
மனைவிமீது சந்தேகத்தோடு "யாரவன் ?"
என்று மனைவிப் பார்த்துக் கேட்கிறான்.
கணவன் சந்தேகத்தோடு கேள்வி
கேட்பதைக் கேட்டு அழுகிறாள் மனைவி.
"பாண்டிய மன்னன் ஆட்சியில்
கள்வர் வர முடியாது. மன்னன்
உன்னை காத்துக்கொள்வார்
என்றுதானே விட்டுச் சென்றீர்கள்.
இப்போது அந்த மன்னன் எனக்குக்
காவலாக இருக்காமல் எங்கு சென்றார்? "
என்று கூறி அழுகிறாள்.
"நான் கதவைத் தட்டியதால் அல்லவா
இந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு
நெருக்கடி ஏற்பட்டுவிட்டது."
என்ற குற்ற உணர்வோடு நிற்கிறான்
மன்னன்.
"இந்தச் சிக்கலிலிருந்து அவளைக்
காப்பாற்ற வேண்டும் என்றால்....
என்ன செய்யலாம்.?
ஒரு வீட்டில் மட்டும் தட்டி இருந்தால்
அந்த வீட்டுப் பெண் மீது சந்தேகம் ஏற்படும்.
எல்லா வீட்டிலும் தட்டிவிட்டால்....
அதுதான் சரி என்று முடிவெடுத்து
அந்தத் தெருவிலுள்ள அனைத்து
வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு
சென்றுவிடுகிறார் மன்னன்.
காவலர்களாக இருந்தால் காவல்...காவல்...
என்று குரல் கொடுத்திருப்பார்கள்.
குரல் கொடுக்காமலேயே அனைத்து
வீடுகளிலும் கதவு தட்டப்பட்டிருக்கிறது.
வீட்டில் இருந்தவர்கள் யாரோ
திருடன்தான் வந்துவிட்டான்
என்று நினைத்து கலங்கிப்போய்
இரவு முழுவதும் தூங்காமல் விழித்தே
இருந்திருக்கின்றனர்.
மறுநாள்...
அனைவரும் அரண்மனையை நோக்கி
ஓடி வந்தனர்.
" மன்னா!
நாட்டில் திருடர்கள் பெருகி விட்டனர்.
நேற்று இரவு எங்கள் வீட்டுக் கதவை
யாரோ ஒரு திருடன் தட்டினான் .
நல்லவேளை நாங்கள் திறக்கவில்லை.
அதனால் நாங்கள் தப்பித்தோம்.
நீங்கள்தான்அந்தத் திருடனைக்
கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டும்.
தக்க தண்டனை கொடுத்தால்தான்
மறுபடி நாட்டில் திருடர் பயம்
இருக்காது "என்று மன்னனிடம்
கோபமாகக் கூறினர்.
"திருடனை கண்டுபிடித்துவிட்டால் என்ன
தண்டனை கொடுக்க வேண்டும் என்று
நினைக்கிறீர்கள் "என்று கேட்டான் மன்னன்.
"தட்டிய கையை வெட்டி எடுக்க வேண்டும். "
என்றனர் அனைவரும்.
மன்னன் குற்ற உணர்வில் குறுகிப் போனான்.
"நானல்லவோ தவறு செய்துவிட்டேன்.
நான் காவல்...காவல் என்று குரல்
கொடுத்துக்கொண்டே அல்லவா
கதவைத் தட்டியிருக்க வேண்டும்.
எனது சிறிய தவறால் மக்களுக்கு
எவ்வளவு பெரிய தீங்கை
இழைத்துவிட்டேன். "
என்று சொல்லி ,கதவைத் தட்டிய
தன் கையை வெட்டி விட்டான் மன்னன்.
"அனைவரும்...ஆ..என்ன காரியம்
செய்துவிட்டீர்கள்!"என்று பதறிப்போய்
ஓடி வந்தனர்.
அதன் பிறகு மன்னனுக்குச் செயற்கையாக
பொற்கை பொருத்தப்பட்டதாம்.
அதனால்தான் பொற்கைப் பாண்டியன்
என்று அழைக்கப்பட்டான் என்பது வரலாறு.
"ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை "
அதாவது குற்றங்களைத் தெளிவாக
அறிந்து, தனக்கு வேண்டியவர்
வேண்டப்படாதவர் என்று பாரபட்சம்
பாராது உரிய தண்டனை
வழங்குவதுதான் முறை.
அதைத்தான் பொற்கை பாண்டியன்
செய்தான்.வரலாற்றில் தனக்கென
தனியிடம் பிடித்தான்.
இப்படிப்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்தால்
திருட்டு பயம் இருக்குமா என்ன ...!
" மன்னன் எவ்வழி;
மக்கள் அவ்வழி "
பொற்கை பாண்டியனைப் போன்ற ஆட்சியாளர்களை தற்காலத்தில் காண்பது மிக அரிது.மிகச்சிறப்பான பதிவு.
ReplyDeleteநன்றி.
Deleteவிமர்சனங்கள்
எழுதுங்கள்.
எங்கே தவறு
இருக்கிறது என்பதை
வாசகர்கள் தான்
கூறமுடியும்.