காளமேகத்தின் கணக்கு

காளமேகத்தின் கணக்கு

இறைவனை தொழுவதற்கு உகந்த 
நேரம் எது? "என்று பாலன் தன்
தன் நண்பர் மதிவண்ணனிடம் கேட்டார்.

"அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத்
தொழுவதற்கு உகந்த நேரம் "என்று 
பதிலளித்தார் நண்பர்.

"அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான்
மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட
முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும்
இல்லாத அமைதியானச் சூழல்
பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான்.
ஆனால் என்னால் அது முடிவதில்லையே"
என்றார் பாலன்.

"நீர் சொல்லுவதும் சரிதான்.
வேலை வேலை என்று சதா
கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு
ஓடுகிறோம். கடவுளைத் தொழ நேரம்
கிடைப்பதே அரிதாக இருக்கிறது"
புலம்பினார் மதி வண்ணன்.

"  இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக்
  கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு
  கால நேரமே கிடையாதா ?
 ஒரு மனிதன் எப்போதுதான்
 இறைவனை வணங்குவது? "

"இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே 
ஆக வேண்டும்."

" யாரிடம் போனால் இதற்குத் தீர்வு
 கிடைக்கும் ?"
 
"வாரும். காளமேகத்திடம் போவோம்.
அவர்தான் இதற்குச் சரியான பதில்
சொல்லுவார்" 

நேரே இருவரும் காளமேகத்திடம்
 வந்தனர்.
 
" ஐயா, தாங்கள் சொல்லுங்கள் .இறைவனைத்
 தொழுவதற்கு உகந்த  காலம் எது?"


" காலம் எது என்பது இருக்கட்டும்.
முதலாவது உங்களுக்குக் கணக்குத் தெரியுமா?"
திருப்பிக் என்று கேட்டார் காளமேகம்.

"கணக்கா....கணக்கு எதற்கு?"

"நான் சொல்லும் கணக்குத் தெரிந்தால்தான்
இறைவனைத் தேடும் காலம் எது
என்பதை அறிந்து கொள்ளமுடியும்."

"சொல்லுங்கள். தெரிகிறதா இல்லையா
என்று பார்ப்போம்."


"முக்காலுக்கு ஏகாமுன்
முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு 
அஞ்சாமுன் -விக்கி
இருமாமுன் மாகாணிக்கு
ஏகாமுன் கச்சி
ஒருமாவின்  கீழரை இன்று ஓது"

பாடி முடித்தார் காளமேகம்.

"இது என்ன முக்கால் அரைக்கால்
நரைக்கால் என்று ஒரே குழப்பமாக
இருக்கிறதே!"

முக்காலுக்கு ஏகாமுன்  - என்றால்...

முதுமை காரணமாக மூன்று காலால் நடப்பதற்கு முன்
அதாவது கால்கள் வலுவிழந்து கோல்
ஊன்றி நடப்பதற்கு முன்னர்  இறைவனைத்
தேட வேண்டும்.

முன் நரையில் வீழாமுன் - என்றால்...

முன் நெற்றியில் நரைமுடி தெரிவதற்கு
முன்பாக இறைவனைத் தேட வேண்டும்.

அக்காலரைக் கால்  கண்டு அஞ்சாமுன்-என்றால்...

காலன் வருவதைக் கண்டு அஞ்சி நடுங்கும்
வயோதிகம் வரும்முன் இறைவனைத்
தேட வேண்டும்.

விக்கி இருமாமுன் - என்றால்...

விக்கல் வந்து இருமி 
துன்பப்படுவதற்குமுன்
இறைவனைத் தேட வேண்டும்.

மாகாணிக்கு ஏகாமுன் - என்றால்...

மயானத்திற்குச் செல்லும் நாள்
வருவதற்கு முன் இறைவனைத் தேட
வேண்டும்.

கச்சி ஒருமாவின் - என்றால்...

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு மாமரத்தின்

கீழரை - என்றால்...

கீழே அமர்ந்திருப்பவரை

இன்று ஓது - என்றால்...

இன்றே வணங்கு

என்பது இப்பாடலின் பொருளாகும்.

"கம்பு ஊன்றி நடக்கும் காலம் வருமுன்,
தலைமுடி நரைத்து முதுமை வரும்முன்,
ஐயோ காலன் வந்து அழைத்துச்
சென்றுவிடுவானோ என்று அஞ்சி
நடுங்கும் காலம் வருமுன்,
விக்கல் வந்து இழுக்கும் காலம்
வருமுன்,மயானம் செல்லும் காலத்திற்கு
முன் இறைவனைத் தேடு.
இறைவனைத் தேடுவதற்கு கால நேரம்
பார்க்காதே. முதுமை வந்தபின் இறைவனைத்
தேடலாம் என்று இருந்துவிடாதே.
கால், கை எல்லாம் நன்றாக இருக்கும்போதே
இறைவனைத் தேடுவாயாக என்கிறீர்கள்
இல்லையா?"

"சரியாக புரிந்து கொண்டீர்கள்"

"ஆமாங்க...இறைவனைத் தேட
கால நேரம் பார்க்கக்கூடாதுதான். ஆனால்
இதில் என்ன கணக்கு இருக்கிறது?"

"முக்கால் =  3/4

அரை = 1/ 2 

கால் =  1/4    

அரைக்கால் =  1/8 

இருமா =  1/ 10

மாகாணி = 1 /16 ( வீசம்)

ஒருமா  =  1/ 20

கீழரை =  1/640

என்று எட்டு பின்ன எண்கள் பின்னப்பட்டிருப்பது
தெரியவில்லையா?"

இதுதான் எண்ணலங்காரமா?
அதுவும் பின்னங்களை நிரல்பட
இறங்கு வரிசையில் அமைத்து
கவி படைத்த தங்கள் புலமையை என்னவென்பது?
பாராட்டிவிட்டுக் கடந்து சென்றனர்
நண்பர்கள். 

நாம் மட்டும் பாராட்டாமல் இருந்தால் எப்படி?

ஒரே சொல்லுக்கு இரு பொருள் வரும்படி
பாடுவதை இரட்டுற மொழிதல் அல்லது
சிலேடை என்று கூறுவோம்.
சிலேடைக் கவியின் பாடலில்
சிலேடை இல்லாமலா?

சிலேடையில் நேரடியாகவே இருபொருள்
தரும் சொல்லான இருமா என்பதை 
எழுதி செம்மொழிச் சிலேடையைப் புகுத்தி
இருபொருளையும் புரிந்து கொள்ள வைத்தியிருப்பார்
காளமேகம் .

தனித்து நிற்கும் போது ஒரு
பொருளும் பிரித்துப் படிக்கும் போது
இன்னொரு பொருளும் தரும் பிரிமொழிச்
சிலேடையை அக்கால் அரைக்கால்
கண்டு அஞ்சாமல் என்ற சொற்றொடரில்
எழுதி கவியை அழகுபடுத்திய
காள மேகத்தைப் பாராட்டாமல் 
இருக்க முடியுமா என்ன?

இறைவனைத் தொழுவதற்கு உகந்த காலம்
எது என கேட்க...
காலத்தோடு கணிதத்தையும் கவின்மிகு
இலக்கண நெறியோடு சொல்லித் தரும்
பாங்கு கவி காளமேகத்தைத் தவிர வேறு
யாருக்கு வரும் ?

Comments

  1. காளமேகத்தின் பாடல் மூலம் வாழ்க்கை நெறியை அழகுற பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete
  2. In this poem, the poet Kalamegam compared mathematics with literature to explain the timing to look unto God. Excellent.

    ReplyDelete

Post a Comment

Popular Posts