இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் .....

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்....



"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"

                             குறள் :. 1062

இரந்தும்- பிச்சையெடுத்தும்
உயிர் - உயிர்
வாழ்தல் - வாழ்தல்
வேண்டின்- வேண்டியிருந்தால்
பரந்து- அலைந்து திரிந்து
கெடுக - கெடுவானாக
உலகு - உலகினை
இயற்றியான் - படைத்தவன்


பிச்சையெடுத்து உயிர் வாழவேண்டிய நிலை
சிலருக்கு ஏற்பட்டால் அதற்குக் காரணமான
உலகைப் படைத்தவன் அலைந்துதிரிந்து
 கெடுவானாக


விளக்கம் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்றார் வள்ளுவர்.பிறப்பு  ஒன்றாய் 
இருந்தால் வாழ்க்கையும் ஒன்றுபோல்
இருக்க வேண்டுமல்லவா?
அப்படியிருக்க ஒருவர் வசதியாக
வாழ்கிறார். இன்னொருவர் உணவுக்கே 
அடுத்தவரிடம்  கையேந்தும் நிலையில் இருக்கிறார்.
 
ஏனிந்த ஏற்றத்தாழ்வு?
இப்படி ஓர் ஏற்றத்தாழ்வோடு படைத்தவன்
யார்?
அப்படி ஓர் ஏற்றத்தாழ்வோடு 
ஒரு சிலர் படைக்கப்பட்டிருந்தால்
குற்றம் யாருடையது?
படைத்தவன்தானே குற்றவாளி.
குற்றவாளிக்குத் தண்டனை 
கொடுக்க வேண்டுமல்லவா?

அதனால்தான்,
"பிச்சையெடுத்து வாழும் நிலையை
ஒரு சிலருக்கு மட்டும் வழங்கியிருப்பதால்
அதற்குக் காரணமான
படைப்பாளி அங்குமிங்கும் அலைந்து திரிந்து
கெட்டொழிவானாக "என்று  படைத்தவனுக்கே
தண்டனையையும் வழங்கிவிட்டார் வள்ளுவர்.

என்ன ஒரு கோபம்?
படைத்தவனையே கெட்டொழிவாயாக என்று
சொல்லுமளவிற்கு கோபம்.
எதனால் வந்தது?
இறைவன் பாரபட்சம் உடையவனல்ல.
ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டும்
ஏனிந்த நிலையைத் தர வேண்டும்?
என்பதுதான் வள்ளுவரின் கேள்வி.
நியாயமான கேள்வி.

அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும்.
இல்லையேல் படைத்தவன்
கெட்டொழிந்திட வேண்டும்.
அப்பப்பா....எப்படி ஒரு கோபம்.!

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
என்ற பாரதியின் கோபமும்
 இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது.
 
அனைவருக்கும் உலகு இறைவனின் படைப்பு
என்பதில் நம்பிக்கை உண்டு. அதே நம்பிக்கை
திருவள்ளுவருக்கும் இருந்திருக்கிறது.
அதனால்தான் உலகு இயற்றினான் என்று
நம் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும்படி
இந்தக் குறளை எழுதியிருக்கிறார்.
உலகப் பொதுமறை என்பது இதனால்தானோ?


English couplet :

"If he that shaped the world desires that men 
should begging go,
Through life's long course let him 
a wanderer be and perish so"


Explanation : 

"If the creator of the world has decreed 
even begging as a means of livelihood
may he too go abegging and perish"


Transliteration:

"Irandhum uyirvaazhdhal ventin parandhu
ketuka ulakiyatri yaan"





Comments

Popular Posts