சினத்தைப் பொருளென்று கொண்டவன்....

சினத்தைப் பொருளென்று கொண்டவன்....



"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைப்பிழையா தற்று"

                               குறள் :. 307

சினத்தை -கோபத்தை,வெகுளியை
பொருள் - செல்வம்
என்று- என்பதாக
கொண்டவன் - எண்ணிக் கொண்டவன்
கேடு - கெடுதல்
நிலத்து- நிலத்தின் மீது
அறைந்தான் - அடித்தவன்
கை - கையானது
பிழையாது - தப்பாது
அற்று- அது போன்றது


நிலத்தை அறைந்தவன் கையானது
வலியிலிருந்து எப்படித் தப்ப முடியாதோ
அதுபோல
கோபம் கொள்பவனும் தான்
கெடுவதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.


விளக்கம் : 


என்னிடம் வலிமை இருக்கிறது.
செல்வம் இருக்கிறது. கூடவே
கோபமும் இருக்கிறது.
இப்படிப்பட்ட பெருமை
 சிலருக்கு உண்டு.
 கோபம் வந்தால் சட்டென்று அறைந்துவிடுவேன்
 என்று சொல்லும் ஆட்களும் உண்டு.
 இன்னும் சிலர் கோபம் வந்தால்
 கண்மண் தெரியாமல் பேசிவிடுவிடுவேன்
 என்பர்.
 இந்தக் கோபத்தை ஒரு பொருளாக
 தன்னுடனேயே வைத்திருப்பதில் என்ன பெருமை
 இருக்கிறது? அப்படி கோபத்தை 
 உங்களோடு வைத்திருப்பது
 உங்களுக்கு நீங்களே கேட்டினை
 தேடி வைத்துக் கொண்டிருப்பது போன்றது.
 
நாம் சினத்தை வெளிப்படுத்தும் இடம்
எப்போதும் நம்மைவிட வலிமையில்
குறைவானவர்களிடம்தான் இருக்கும்.
சினம் கொள்ளுவது என்பது உங்கள் கையால்
நீங்களே நிலத்தை ஓங்கி அறைவது போன்றது.


நிலத்தை அறைவதால் நிலத்திற்கு
எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. 
மாறாக
உங்கள் கைதான் சிதைந்து போகும்.
உடைந்து போகும். வலியைக் கொடுக்கும்.

அது போன்றதுதான் சினத்தை
ஒரு பொருளாகக் கருதிக்
கொண்டிருந்தால்
அது ஒருநாள் உங்களுக்குக் கேட்டினைத்தான்
கொண்டு வந்து சேர்க்கும் .

செல்வத்தைச் சேர்க்கலாம்.
சினத்தை ஒருபோதும் நம்மோடு சேர்த்து வைத்துக்
கொள்ளக்கூடாது. அப்படிச் சேர்த்துக் கொண்டால்
அது தீங்காகத்தான் அமையும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"The hand that smites the earth unfailing feels the Sting;
So perish they who nurse their wrath as noble thing"


Explanation:

Destruction will come upon him who regards
anger as a good thing, as surely as the hand
of him who strikes the ground will not fail.


Transliteration :

"Sinaththsip porulendru koNtavan kaedu
Nilaththaraindhaan kaipzhaiyaa tharu"













"










Comments

Popular Posts