முரண் தொடை என்றால் என்ன ?

முரண் தொடை என்றால் என்ன ?

எழுத்தை அசையாக்கி
சீரமைத்து
தளையால்  கட்டி
அடிதொறும் தொடையால்
அணி செய்து படைப்பது சிறந்த
செய்யுளாகிறது.

இப்படிப்பட்ட பாடல்கள் 
படிப்போரைக் கட்டி இழுக்கும்.
மறுபடி மறுபடி  எனைப்படி என்று
என்று அழைக்கும்.
தூக்கத்திலும் அசைபோட வைக்கும்.

எழுத்து
அசை 
சீர்
தளை
அடி 
தொடை 
ஆகிய ஆறு உறுப்புகளால்
செய்யுள் கட்டப்படுகிறது.

இவற்றுள் தொடை என்ற உறுப்பின்கீழ் வரும்
முரண் தொடை பற்றி காண்போம்.

அடிகளிலோ சீர்களிலோ  சொல்லோ பொருளோ 
மாறுபட்டு அமைவது முரண் தொடை எனப்படும்.


எடுத்துக்காட்டாக 
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

என்ற தொடரை எடுத்துக் கொள்வோமானால்
முற்பகல், பிற்பகல் என்று இரண்டு
முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன.
இவ்வாறு மாறுபட்ட பொருள்தரும்
சொற்கள் அமைவதை முரண் தொடை
என்கிறோம்.

நன்மை - தீமை
இரவு  - பகல்
காலை - மாலை
இருள் - ஒளி
மேடு _ பள்ளம்
வாழ்வு - தாழ்வு
இகழ்ச்சி - புகழ்ச்சி
இன்னா - இனிய
இன்பம் - துன்பம்
கருமை - வெண்மை


இப்படி பொருள் மாறுபட்டு வருவதை
பொருள் முரண் என்கிறோம்.

சொல்லும் பொருளும் முரணுதல்
ஐந்து வகைகளில் அமைதல் உண்டு.

முதலாவது சொல்லும் சொல்லும்
முரணுதல்.

இரண்டாவது பொருளும் பொருளும்
முரணுதல்.

மூன்றாவது சொல்லும் பொருளும்
சொல்லொடு முரணுதல்.

நான்காவது சொல்லும் பொருளும்
பொருளொடு முரணுதல்.

ஐந்தாவது சொல்லும் பொருளும்
சொல்லொடும் பொருளொடும்
முரணுதல்.

முரண்தொடையானது

1. அடி முரண்
2. இணை முரண்
3. பொழிப்பு முரண்
4. ஒரூஉ முரண்
5. கூழை முரண்
6. மேற்கதுவாய் முரண்
7. கீழ்க்கதுவாய் முரண்
8. முற்று முரண்

என எட்டு வகையாக வரும்.


1. அடி முரண் : 

"அடிதோறும் சொல்லினும் பொருளினும்
முரணுதல் முரணே "
            
என்கிறது தொல்காப்பியம்.

அடிதோறும் முதற்சொல் மாறுபடத் 
தொடுப்பது அடி முரண்
எனப்படும்.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை"

கெடுப்பதூஉம் - முதலடி முதலாம் சீர்
எடுப்பதூஉம் - இரண்டாம் அடி முதல் சீர்

ஆகியவற்றில் முரண்பட்ட
பொருளில் சொற்கள் வந்துள்ளமையால் 
அடி முரண் ஆகிறது என்பதைக்
கண்டறிக.

2.  இணை முரண் : ( 1 , 2 )

ஓரடியின் முதல் இரண்டு சீர்களில்
முரண் அமைவது இணை முரண்
எனப்படும்.

"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனில் "

பொய்ம்மை, வாய்மை என முதலாம்
இரண்டாம் சீர்களில் முரண்பட்ட
சொற்கள் வந்துள்ளமையால்
இணைமுரண் ஆகிறது.


3.  பொழிப்பு முரண் : ( 1, 3 )

ஓரடியில் முதற்சீர் மற்றும் மூன்றாம்
சீர்களில் முரண் அமைவது
பொழிப்பு முரண் எனப்படும்.

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு "

செல்விருந்து என முதலாம் சீரிலும்
வருவிருந்து என மூன்றாம் சீரிலும்
முரண்பட்ட சொற்கள் வந்துள்ளமையால்
பொழிப்பு முரணாகிறது.

4.   ஒரூஉ முரண் : ( (  1 , 4 )

ஓரடியின் முதலாம் மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது ஒரூஉ முரண்
எனப்படும்.

"புறந்தூய்மை நீரின் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் "

புறந்தூய்மை - முதல் சீர் 
அகந்தூய்மை - நான்காம் சீர்

ஆகியவற்றில் முரண்பட்ட பொருளில்
சொற்கள் வந்துள்ளமையால்
 ஒரூஉ முரண் ஆகிறது.

5.  கூழை முரண் : ( 1, 2 3 )

ஓரடியின் முதல் மூன்று சீர்களிலும்
முரண் அமைவது கூழை முரண்
எனப்படும்.

கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றன் என்னும்

கருமிடற்றன் - முதல் சீர்
செஞ்சடையன் - இரண்டாம் சீர்
வெண்ணீற்றன் - மூன்றாம் சீர்

என்று முதல் மூன்று சீர்களிலும் தொடர்ந்து
முரண்பட்ட சொற்கள் வந்துள்ளமையால்
கூழை முரண் ஆகிறது.

6.   மேற்கதுவாய் முரண் : (1 , 3 , ,4 )

ஒன்று , இரண்டு மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது மேற்கதுவாய்
முரண் எனப்படும்.

வெண்வளைத் தோளும் சேயரிக் கருங்கண்ணும்

வெண்வளை - முதல் சீர்
சேயரி     - மூன்றாம் சீர்
கருங்கண் - நான்காம் சீர்

என்று மாறுபட்ட பொருளில் சொற்கள்
வந்துள்ளமையால் மேற்கதுவாய்
முரண் எனப்படுகிறது.

7.  கீழ்க்கதுவாய் முரண் : ( 1 , 2 ,4 )

முதல், இரண்டு மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது கீழ்க்கதுவாய்
முரண் எனப்படும்.

இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்

இருக்கை- முதல் சீர் 
நிலை     - இரண்டாம் சீர்
இயக்கம்  - நான்காம் சீர்

ஆகியவற்றில்  முரண்பட்ட
பொருளில் வந்துள்ளமையால் கீழ்க்கதுவாய்
முரண் ஆகிறது.


8.   முற்று முரண் ( 1 , 2 , 3 , 4 )

ஓரடியின் நான்கு சீர்களிலும் முரண் அமைவது
முற்று முரண் எனப்படும்.

"காலை  மாலையும் இரவும் பகலுமென
ஓயா மழையில் ஓடையான தெரு "

காலை ,மாலை, இரவு, பகல்
என்று முதல் நான்கு சீர்களிலும்
முரண்பட்ட பொருளில் சொற்கள்
வந்துள்ளமையால் முற்று முரண்
ஆகிறது என்பதைக் கண்டறிக.

இப்போது முரண்தொடை  பற்றிய தெளிவு
கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

கவிதையில் முரண்பட்ட
சொற்களைப் பயன்படுத்தி
அழகுபடுத்துங்கள்.

வாழ்த்துகள்!





Comments

  1. முரண் தொடைப் பற்றி தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. இவ்வளவு எளிமையான விளக்கம் .முரண்தொடையின் பிரிவுகள் மிகவும் தெளிவாக புரிந்தது.நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular Posts