சங்க இலக்கியத்தில் உவமை

சங்க இலக்கியத்தில் உவமை 

சங்க இலக்கியப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை.
அதைக் கதையாக எழுதலாம்.
கதாப்பாத்திரங்கள் சுமந்துவரும்
கருத்தைச் சுவைத்து மகிழலாம். 
உவமை நயத்தை அள்ளிப் பருகலாம்.
காட்சிகளைக் மனத்துக்குள் வரைந்து களிப்பேருவகை
கொள்ளலாம்.

பருகப் பருகத் தாகம் தணியாது
மேலும் வேட்கையைத் தூண்டும்.
அதிலிருக்கும் ஏதோ ஒரு சுவை
நம்மைக் கட்டி இழுக்கும்.
தம்மோடு பிணிக்கும்.

 சொல்லப்படும் காட்சிகள்.
கையாளப்படும் உவமைகள்.
கண்முன் வந்து நின்று பேசும்.

என்னோடு என் இடத்திற்கு வந்து
பார் என்று நம்மை
கூடவே அழைத்துச் செல்லும்.
நம் உள்ளத்தோடு உறவாடும்  
உயிரோட்டமான வரிகள் யாவும்
உளவியல் அறிந்த சொல்லாடல்கள்.

ஒரு செய்தியைச் சொல்வதற்காக புலவர்கள் கையாளும் உவமைகள்
அது நடந்த இடத்திற்கே
நம்மை அழைத்துச் 
 செல்ல வேண்டும்.
தான் எண்ணிய
சொல்ல வந்த கருத்து
வாசிப்போரைச் சென்றடைய வேண்டும்.
அவரை தம் பக்கமாக ஈர்க்க வேண்டும்.
இதுதான் படைப்பாளியின் நோக்கமாக
இருக்கும்.

கவிதையில் சொல்லப்படும் நிகழ்வைக்
கண்முன் கொண்டுவந்து 
காட்சிப்படுத்த வேண்டும்.

இதோ இங்கே ஒரு புலவர் அப்படி ஒரு
காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்துகிறார்.நிகழ்ச்சி நடந்த
இடத்திற்கே நம்மைக் கூட்டிச்
செல்கிறார்.

ஒரு தலைவனும் தலைவியும்
காதல்வயப்பட்டுவிட்டனர்.
நீயில்லாமல் நானில்லை.
நானில்லாமல் நீயில்லை.
பிரிந்தால் உயிர் தறியேன்
என்று காதல் வசனம் பேசி
நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

எத்தனை நாட்களுக்குத்தான்
இப்படியே காதலித்துக் கொண்டிருப்பது?
திருமணம் என்ற பந்தத்தில்
இணைந்துகொள்ள வேண்டாமா?
இப்படி  ஒரு கேள்வி வந்து
அவர்களைக் காதல் செய்ய விடாமல்
தடுக்கிறது.

காதலி எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? எப்போது திருமணம்
செய்து கொள்வீர்கள் என்று நச்சரிக்கத்
தொடங்கிவிட்டாள்.

காதலனுக்கு மட்டும் திருமணம்
செய்துகொள்ள ஆசை இல்லையா என்ன?

எதுவரை எதிர்காலம் பற்றிய
சிந்தனை இல்லையோ அதுவரை காதல்
இனிக்கும்.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை
வந்துவிட்டால்....
ஆயிரம் கேள்விகள் முன் வந்து
விடை கேட்டு நிற்கும்.
தீர்வு தெரியாமல் திக்குமுக்காட வைக்கும்.

இப்போது திருமணம் பற்றிய முதல் கேள்வி
தலைவன் முன் வைக்கப்பட்டுள்ளது.
வைத்தவர் வேறு யாருமல்ல.
தலைவியே கேட்டுவிட்டாள்.

இதற்கு தலைவன் பதில் 
சொல்லியே ஆக வேண்டும்.
நாளை நாளை என்று எத்தனை நாள்
தள்ளிப் போடுவது?
என்றாவது ஒருநாள் திருமணம்
செய்து தானே ஆக வேண்டும்.
திருமணம் என்றால் சும்மாவா?
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டிருப்பதா வாழ்க்கை?
குடும்பம் நடத்த பணம் வேண்டுமே.

பணம்....பணம்...பணம் 
இந்தப் பணம் காதலர்களுக்கிடையே விளையாட்டுக் காட்டிப் பார்த்தது.திருமணத்திற்குக் 
குறுக்கே தடையாக நின்று கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆணுக்கு கையில் ஒரு வேலை வேண்டும்.
வேலை என்ன நினைத்த உடனே
நினைத்த இடத்தில்  கிடைத்துவிடுமா என்ன?
பொருள் தேட வேண்டிய 
அவசியம்.
உள்ளுரில் அதற்கு வழியில்லை.
வெளியே எங்காவது சென்று
 வேலைபார்த்து
சம்பாதித்து வர வேண்டிய
கட்டாயம்.

மெதுவாக தலைவியிடம்
பொருள் தேடச் செல்ல இருப்பதைக்
கூறுகிறான் தலைவன்.
முதலாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்
தலைவி.
வெகு விரைவில்
வந்துவிடுவேன் என்று சொல்லி 
ஆறுதல்படுத்தி வைத்துவிட்டு
பொருள் தேட சென்றுவிட்டான்.

 நாட்கள் கடந்தன.
நாட்கள் மாதங்களாயின.
பொருள் தேடச் சென்ற 
தலைவன் திரும்பி வந்த பாடில்லை.
தலைவனை எதிர்பார்த்து
காத்திருக்கிறாள் தலைவி.
சாப்பிட முடியவில்லை.
தூங்க முடியவில்லை.
 தலைவன் வருகையை பார்த்துப் பார்த்து 
தலைவியின் உடல் மெலிய
ஆரம்பித்தது.
வருவானோ... மாட்டானோ...
இப்படியொரு ஐயம் மெதுவாக
வந்து எட்டிப் பார்த்து
உள்ளத்தைக் கலங்கடித்தது.

தோழியிடம் சொல்லிச் சொல்லி
புலம்ப ஆரம்பித்துவிட்டாள்
தலைவி.

"இத்தனை நாள் பொறுத்துவிட்டாய்.
இன்னும் கொஞ்சம்நாள் பொறுத்திரு.
வந்துவிடுவார் ...வந்துவிடுவார்"
என்று தேற்றிப் பார்த்தாள்
தோழி.

தலைவியின் மனம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

"கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழிதோழி! உன்கண்
நீயொரு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே"

என்று தோழிக்கு
தன் நிலைமையை எடுத்துச்
சொல்கிறாள் தலைவி.

"காட்டிலுள்ள பாறையில் மயில்
முட்டையிட்டு வைக்கும்.
அப்போது அங்கு வந்து 
விளையாடும் குரங்கின் கண்களில்
மயிலின் முட்டை பட்டுவிடும்.
குரங்கு சும்மா இருக்குமா?
குரங்கு அந்த முட்டைகளைப்
பாறையில் உருட்டி விளையாடும்.
அப்படிப்பட்ட மலை நாட்டைச்
சேர்ந்தவன் என் தலைவன்
என்பதில் எனக்குப் பெருமை உண்டு.
இருந்தாலும் எனது மனதில்
பிரிவைத் தாங்கும் அளவிற்கு
மனவலிமை இல்லையே" என்று
சொல்லி வருந்துகிறாள்.

தோழிக்கு தலைவி எதற்காக 
இந்தக் குரங்கு
கதையைக் கூறுகிறாள் என்று புரியவில்லை.

தலைவியிடம் கையைப் பிசைந்து
"ஒன்றும் புரியவில்லையே" என்கிறாள்.

"புரியாவிட்டால் விடு .
இந்தக் காட்சியை நித்தம்
பார்க்கும் மலை நாட்டுக்காரருக்கே புரியவில்லை.
உனக்குப் புரிந்தால் என்ன ?
புரியாமல் போனால் என்ன ?""
என்று முகத்தைத் திருப்பி
வைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

தோழியும் பின்னாலேயே சென்று
மறைந்து போனாள்.

அவர்கள் இருவரும் போனால் என்ன?
நம் முன் மயில் முட்டையோடு
விளையாடிய குரங்கு வந்து
விளையாட்டு காட்டுகிறதே?
ஏன் இப்படிச் சொன்னாள் ?
இந்தக் குரங்கிற்கும் இவளது தற்போதைய நிலைமைக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இல்லாத ஒன்றை இந்த இடத்தில் சொல்லக் காரணம் என்ன? நம் முன்னர் வந்து நிற்கும் கேள்விகள் இவை.

கையில் பூமாலை கிடைத்தாலே
 நார் வேறு ;
பூ வேறு என்று பிரித்து விளையாடிவிடும்.
முட்டையை மட்டும் பத்திரமாக 
வைத்திருக்குமா இந்தக் குரங்கு?
எப்படியும் கீழே போட்டு உடைக்கத்தான்
போகிறது என்று மனம் திக்திக்கென்று
அடித்துக் கொண்டிருக்கிறதல்லவா?

இந்த அச்சம்தான் தலைவிக்கும்
இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தலைவி ஏன் இந்தக்
குரங்கு விளையாட்டைப்
சொல்லி விட்டுச் சென்றாள்?
பட்டிமன்ற விவாதம் 
ஒன்று மனது நடத்திச் பார்த்துக்
கொண்டிருந்தது.


 எதற்காக இருக்கும்?
எதற்காக இருக்கும்?

இப்போது சற்று புரிகிறது.
முட்டை குரங்கு கையில் அகப்பட்டுவிட்டால்....
முட்டை உடைய போவது என்னவோ உறுதி.

என் காதலும் ....என் காதலும்
ஐயோ நினைத்தாலே பயமாக இருக்கிறதே ....
ஒரு நாள் குரங்கு கை முட்டையாக என் காதலும் உடைந்து  இல்லாமல்
போகுமோ? "இப்படியொரு ஐயத்தைத்தான்
தலைவி இந்த உவமை மூலம்
சொல்லியிப்பாளோ?

காதலின் வலி...அது கைகூடாமல்
போய்விடுமோ என்ற அச்சம்
அதை நேரடியாகச் சொல்ல முடியாத
நிலை.... அதற்காக ஒரு குரங்கையும்
மயில் முட்டையையும் பாறையில் 
உருட்டி விளையாட வைத்து சொன்ன விதம்
என்ன அருமையான உவமை
பாருங்கள்!

யார் இப்படி எல்லாம் இந்தத்
தலைவிக்குப் பேசச் சொல்லிக்
கற்றுக் கொடுத்தது?

மலையும் மலையைச் சார்ந்த
இடமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மலை குறிஞ்சி நிலமாயிற்றே.
மலையோடு கவி பாடும் 
புலமை மிக்கவர் யார்?
வேறு யாராக இருக்கும் .

 கபிலராகத்தான்.இருக்கும்.

நீங்களும் அப்படித்தான் நினைத்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்.
உண்மை.
 இந்த தலைவியை இப்படிப்
பேச வைத்தவர் கபிலர்.

உவமை மூலமாக தான் சொல்ல வந்த
கருத்தோடு நம்மைக் கட்டி
இழுத்துச் சென்று
விளையாட்டு காட்டிவிட்டார் கபிலர்.
குரங்கு உருட்டி விளையாடும் முட்டை
உடைந்து விடக்கூடாதே என்று
கரிசனம் கொள்ள வைத்துவிட்டார்.

சொல்லப்பட்ட
உவமை.
நிகழ்ச்சி நிகழ்ந்த பாறை
பாறை மீது குரங்கு.
 குரங்கு கையில் முட்டை.
அதனைச் சொல்லிய பாங்கு.
அப்பப்பா
எப்படி எப்படியெல்லாம் சொல்லி
நம்மை தம் பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்
இந்தக் கபிலர்.

இப்போது என் கவலை 
குரங்கு முட்டையை
உடைத்திருக்குமா?
உடைக்காது விட்டுச் சென்றிருக்குமா?

இவர்கள் காதல் கைகூடியிருக்குமா
இல்லை....குரங்கு கை முட்டையாக
ஐயோ !என்ன இது?
 மறுபடியும் மறுபடியும்
இந்தக் குரங்கு முட்டையோடு 
முன்னால் வந்து நின்று அச்சமூட்டுகிறது.
 எனக்கு மட்டுமா?
உங்களுக்கு...?






Comments

  1. சங்க இலக்கிய உவமையுடன் கருத்தையும் பதிவிட்டு கூறிய கதையின் நிகழ்வு மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts