ஜெபிக்கும் கரங்கள்
ஜெபிக்கும் கரங்கள்
ஜெர்மனி நாட்டில் ஆல்பிரெச் ,ஆல்பிரட் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.
இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை.
ஆனால் ஆசையை நிறைவேற்ற பணம் வேண்டுமே. பணத்திற்கு எங்கே போவது?
வீட்டில் வறுமை.
போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் இருவருக்கும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.
இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.
இறுதியாக ஒருவர் வேலைக்குப் போகலாம். ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும்.
ஒருவர் படிப்பு முடித்து வந்ததும்
அவர் வேலைக்குச் சேர்ந்து இன்னொருவரைப் படிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.
இப்போது யார் முதலாவது படிக்க செல்வது என்பதில் குழப்பம்.
பூவா ...தலையா ...போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை.
பூ ...விழுந்தவர் முதலில் படிக்கச் செல்ல வேண்டும்.
தலை... விழுந்தால் ,அந்த நபர் வேலை செய்து மற்றவரை படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பூவா...தலையா போட்டுப் பார்க்கப்பட்டது.
முடிவு ஆல்பிரட்டுக்குச் சாதகமாக அமைந்தது.
ஆம்...ஆல்பிரெட் படிக்க வேண்டும் என்ற முடிவு வந்தது.
அதன்படி படிப்பதற்காக ஆல்பிரட் வெளி மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஒரு பட்டறையில் வேலை செய்து ஆல்பிரெச் தன் சகோதரன் படிப்பிற்காக மாதம்தோறும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார் .
ஆல்பிரட்டின் படிப்பு நல்லபடியாக முடிந்தது.
படித்து முடித்ததும் நல்ல வேலையும் கிடைத்தது.
இனி ஊருக்குப் போய் தன் சகோதரனைப் படிக்க வைக்க வேண்டும்.
மகிழ்ச்சியோடு நாடு திரும்பினார் ஆல்பிரெட்.
வீட்டில் வந்து சகோதரனைப் பார்த்தார்.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆவலோடு கரங்களைப் பிடித்து முத்தமிடச் சென்றார்.
அப்படியே அதிர்ந்து போனார்.
பட்டறையில் வேலை பார்த்த....சகோதரனின் கை உருக்குலைந்து போய் இருந்தது.
இனி தன் சகோதரனால் ஓவியம் வரைவதற்கு பிரஷ் பிடிக்க கூட முடியாது.
அந்த அளவுக்கு அவர் கை நைந்து போய் இருந்தது.
சகோதரனின் கைகளை விட்டு கண்கள் அகலவில்லை.
கண்கள் பனித்தன.பேச நா எழவில்லை.
தன்னைப் படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வர தன்னையே தியாகம் செய்துவிட்ட தன் சகோதரனை நினைத்து
அப்படியே அதிர்ந்துபோய் நின்றார்.
என் சகோதரனுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று புலம்பினார்.
எனது முதல் ஓவியம் என் சகோதரனின் கரங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பிரஷை எடுத்து சகோதரனின் நைந்து போன கரங்களை ஓவியமாக தீட்டினார்.
அந்த ஓவியம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியது.
இதுதான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஜெபிக்கும் கரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தியாகத்தின் கரம் என்றும் வணங்கப்படத் தக்கது.
என்பதை உலகமே ஒப்புக்கொண்டது.
இன்றுவரை அனைவரும் வணங்கும் கரமாக
ஆல்பிரெச் கரங்கள் இருந்து வருவது
ஆல்பிரெச்க்கு தம்பி செய்த மரியாதை
என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெபிக்கும் கரங்களுக்குப் பின்னால் ஒரு தியாகம் உள்ளது என்பதை இன்றும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது
அந்த ஓவியம்.
Comments
Post a Comment