சாதி இரண்டொழிய

சாதி இரண்டொழிய ....


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 

என்றார் வள்ளுவர்.

பிறப்பால் அனைவரும் ஒன்று.

மேல் கீழ் என்ற பாகுபாடு இல்லை என்று

உச்சந்தலையில் ஓங்கி அடித்துச் சொல்லித் தந்துவிட்டார்.


சாதி என்னும் பாகுபாடு இருக்கும்வரை

சமூகநீதி முற்றிலுமாக கிடைத்துவிடும்

என்று நம்பமுடியாது.


நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களும்

 இன்று சாதிய அமைப்புகளை 

 வைத்துக்கொண்டு

சாதி கூட்டங்களை நடத்திக்கொண்டு

வருவது சற்று நெருடலாகத்தான்

உள்ளது.

 

 சாதி என்ற பெயரால் ஏற்றத்தாழ்வு

 அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.

 அது முற்றிலும் களையப்பட வேண்டும்

 என்றால் சமூக நீதியை நோக்கியே

 நம் பயணம் இருக்க வேண்டும.

 

இப்போது ஔவை சாதியைப் பற்றி

என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.


"சாதி இரண்டொழிய வேறில்லை

சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார்

இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி"


என்கிறார் ஔவை.


உலகில் எத்தனை சாதி உண்டு

என்று கேட்டால் இரண்டே சாதிதான்

உண்டு.

ஒன்று ஆண்சாதி.

இன்னொன்று பெண்சாதி என்று

சிலர் பெருமையாகச் பேசுவர்.


ஆண்,பெண் என்பது சாதி அல்ல.

அது இனம்.


ஆனால் ஔவையாரும் சாதி

இரண்டுதான் என்கிறார்.

அவர் ஆண் ,பெண் என்று

சொல்லி விளையாட்டு பண்ணிக்கொண்டு

கடந்து போகவில்லை.


அறநூல்களில் உள்ளபடி

பார்ப்போமானால் சாதி

இரண்டு மட்டுமே உண்டு.

ஒன்று பிறருக்கு கொடுத்து

உதவும் பண்பு கொண்ட

உயர் குலத்தவர்.

 மற்றது பிறருக்கு

கொடுக்கும் பண்பு இல்லாத

இழிகுலத்தவர் .


கொடுக்கும் பண்பு தான்

ஒருவரை மேல் ,கீழ் என்று

பகுத்து வைக்கும்.

மற்றபடி சாதி என்று இல்லை

என்பது ஔவையின் கருத்து.


இதுதான் சாதியைப் பற்றி

ஔவையின் கண்ணோட்டம்.


பாரதியாருக்கும் சாதியப் பாகுபாட்டில்

உடன்பாடில்லை.

அதனால்தான்,


"சாதிகள் இல்லையடி பாப்பா"

என்று பாப்பாவிற்குச்  சொல்லித்

தந்தவர் "குல தாழ்ச்சி உயர்ச்சி

சொல்லல் பாவம்"

என்று சொல்லி,

சாதி உயர்வு தாழ்வு கற்பித்தல்

ஒரு பாவம் என்றே பதிவு

செய்கிறார். 


"சாதி இரண்டொழிய

வேறில்லை என்றே

தமிழ்மகள் சொல்லிய சொல்

அமிழ்தம் "


என்ற ஔவையின் கருத்தை அனைவரும்

ஏற்றுக்கொண்டால் மட்டுமே

சாதியின் பெயரால் நடைபெறும்

பூசல்கள்  நடைபெறாமல்

இருக்க வாய்ப்பு ஏற்படும்.


சாதி இரண்டொழிய வேறில்லை.




Comments