பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
திருமதி.ரோஸ்லின் ராபின்சன்
ஆசிரியை,
திலக் நகர் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி.
மும்பை.
நாள்: 29.03.2024
வீரம்விளை நெல்லை எல்லை அகமிருப்பு
தீரம்நிறை சான்றோர் உறை துரைகுடியிருப்பு
திருமிகு சுவாமிநாதன் அனஸ்தா
இணை மடியிருப்பு
சீரமை செவ்விதழ்விரிய பூத்ததிந்த ரோசாப்பூ!
அத்தான் ராபின்சனோடு இல்லற பிணைப்பு
கெத்தாய் ஆராரோ பாடவைத்தது பேருவப்பு
முத்தாய்ப் பிள்ளை இருவர் பெற்ற
பூரிப்பு
நற்றாயென நல்லோர் பாராட்டுவதால் வந்ததிந்த சிறப்பு!
முதலடி ஜோகேஸ்வரி பள்ளியில்
கிடைத்த வரவேற்பு
குறளடி திலக்நகர் பள்ளியில்
தடம் பதிப்பு
சிந்தடி தாகூர்நகர் பள்ளியில் முத்திரை
பதிப்பு
அளவடி திலக்நகர் பள்ளியில் முடித்தது
பணிக்கோர் முத்தாய்ப்பு!
கற்பித்தலில் கொண்டீர் தணியா விருப்பு
-அதனால்
கற்றவர் அனைவர்க்கும் தித்திக்கும் செங்கரும்பு
பெற்றவர் யாவர்க்கும் ஆசிரியை நல்அருமருந்து - மாணவர்
எறும்பாய்ச் சுற்றிவர படைத்தீர்
கல்விவிருந்து!
வான்மதியோ பூம்பொழிலோ உன்றன் வனப்பு
அன்பலையோ தமிழ்ப் பண்பலையோ உன்றன் உதடசைப்பு
மலையிடைப் பிறந்த குறிஞ்சியோநீ என்பதென் குறும்பு
நாட்டிடை நறும்பூவாய் மலர்ந்து நிற்கும் ரோஸ்லின் ஒரு மகிழம்பூ!
ஓய்வறியா உழைப்பால் வந்திடும் சிறுகளைப்பு -அதனால்
ஓதிவைத்தனர் ஐம்பத்தெட்டில்
பணியில் இருந்து விடுவிப்பு
ஓயாது உழைத்தது போதும் உழைப்புக்கு
விடுக நிரந்தரவிடுப்பு
ஓதாமல் இருக்க அவ்வையிடம் கேட்டேன் அனுமதி மறுப்பு!
எஞ்சிய காலம் என்றென்றும் கொள்வீர்
அகமகிழ்வு
விஞ்சிய நலம் கண்டிட வேண்டும் என்பது
என்விழைவு
கஞ்சமிலாப் பாமாலை இன்று கையில் வந்தது புதுவரவு!
நெஞ்சம் நெகிழ வாழ்த்தி மகிழ்வதில்
கொண்டேன் மனநிறைவு!
- செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment