பவளவிழா வாழ்த்து
பவளவிழா வாழ்த்து
தலைமையாசிரியை ஞானம் செல்லப்பா
அவர்களுக்கு
பொங்கு புனல் பொருநை நதிநடக்க
அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க
நெல்லை இராமையாபிள்ளை கோமதி
இணை மடி சுமக்க
மெல்ல சிரித்தாள் ஞானம் முகம் சிவக்க!
மன்னன் செல்லப்பா மகிழ்ந்திருக்க
மங்கை வளைகரம் பற்றினார் மணம் முடிக்க
மங்கல சாட்சியாய் மக்கள் நால்வர் பிறந்திருக்க
மாட்சியாய் நடந்தது நல்லறம் என்றும் சிறக்க!
ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில்
கால் பதிக்க
தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பெண்டி பஜாரெனப் பயணிக்க
மகுடம் சூட்டி முல்லுண்ட்
அணி சேர்க்க
பணி நிறைவு செய்தார் பெயர் நிலைக்க!
குன்றா மொழிப் புலமை கண்டோர் மலைக்க
மண்டும் மதிகண்டு வான்மதி நாணி நிற்க
பார்த்தேன் படித்தேன் என உள்ளம் குதுகலிக்க
படி தேன்உண்டு திழைத்தே கிடந்தேன்
இவரில் என் மதிமயங்க!
பவளவிழா நாயகியாய் இவர்
வீற்றிருக்க
பார்த்த கண்கள் அத்தனையும் நிலைகொண்டிருக்க
இளமையின் மறைபொருள் நன்மக்கள் வாய்த்தலென மொழிந்து வைத்த
இலக்கணமே இவரென வழிமொழிகிறேன் பிசிராந்தையார் வழி நிற்க!
பசிப்பிணிப் போக்கும் மருத்துவம் பெற்றோரிடம் கற்றிருக்க
புசிக்க வைக்கும் பண்பு குருதியோடு கலந்திருக்க
அறுசுவை படைக்கும் உணவுச்சாலை
இல்லமிருக்க
ஆதிரையின் அட்சயப்பாத்திரம் கிடைத்தது இவர் கையில் நாம் வியக்க!
இறைவா....
வரம் ஒன்று கேட்கின்றேன்
இன்றுபோல் என்றும்
உவகை சூழ்ந்திருக்க
நாளும் நல்லவை நடந்திருக்க
தோளோடு தோழமையாய்த்
தோள் சாய்ந்து யாம் மகிழ்ந்திருக்க
இன்னொரு வெள்ளிவிழா
ஆண்டு கூட்டித் தந்திடுக
நூற்றாண்டு விழா அரங்கில்
கூடி யாம் களித்திருக்க!
-செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment