இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
ஆட்சியாளர்கள் என்றால் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைக் கண்டும் காணாமலும் கடந்து போகக்கூடாது.
தன்னைவிட மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஆட்சியாளர்களால் தான் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்.
ஆனால் எல்லா ஆட்சியாளர்களும் அப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
இல்லை என்றால் விட்டுவிடுவோமா?
கேள்வி கேட்கத் தானே நாங்கள் இருக்கிறோம் .
திருந்து அல்லது திருத்தப்படுவாய்
என்கிறார் ஒரு புலவர்.
யாரப்பா அந்தப் புலவர்?
அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா? வாருங்கள் யார் என்று பார்த்துவிடுவோம்.
மன்னனைவிட மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக அக்கால புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.
மன்னன் புகழ் பாடி பரிசில் பெற்றுச் செல்வது மட்டும் தங்கள் நோக்கம் அல்ல.
மன்னன் தவறு செய்யும்போது இடித்துரைப்பதும்
அவர்களை நல்வழிப்படுத்துவதையும் தங்கள் கடமையாக கொண்டிருந்தனர்.
அதியமான் ஔவை நட்பு போலவே நலங்கிள்ளிக்கும் கோவூர் கிழார் என்னும் புலவருக்கும் நல்ல நட்பு உண்டு.
மன்னன் துவண்டு நிற்கும் போதெல்லாம் வந்து நின்று அறிவுரை வழங்குவார்.
ஆறுதல்படுத்துவார்.
ஒருமுறை மன்னன் நெடுங்கிள்ளி
ஆவூர் கோட்டைக்குள் இருந்தபோது நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான் ஆவுரை முற்றுகை இட வருகிறார்.நெடுங்கிள்ளி தன்னுடைய கோட்டையை அடைத்துக் கொண்டு கோட்டைக்குள்ளேயே இருக்கிறார்.
மன்னன் மக்களைக் காக்க வேண்டிய தன் பொறுப்பை மறந்து கோட்டைக்குள் இருந்துவிட்டார் .மக்கள் உண்ண உணவும் குடிக்க நீருமின்றி பட்டினி கிடக்கின்றனர்.
இதைக் கேள்விப்பட்ட கோவூர் கிழார்
மிகவும் வருந்தினார்.
என்ன இது?
குடி காக்கும் மன்னன் செயலா இது?
போரிட மனமில்லை என்றால்
சரணடைந்து விட வேண்டியதுதானே!
தான் மட்டும் பாதுகாப்பாக கோட்டைக்குள்
இருப்பது என்ன அறமாகும்?
நெடுங்கிள்ளியைக் கண்டு பேச வேண்டும்.
இது மன்னனுக்கு அழகா என்று
கேட்க வேண்டும் என்று கோபத்தோடு வருகிறார்.
நெடுங்கிள்ளியைப் பார்த்ததும் உள்ளத்தில் உள்ள குறைகளை எல்லாம் கொட்டி இது நியாயமோ என்று கேட்கிறார் .
உன்னுடைய பட்டத்து யானைக்கு
குளிக்க நீரில்லை.
உண்பதற்கு ஒரு கவள உணவில்லை. மிகுந்த சோர்வுடன் படுத்துக் கிடக்கிறது.
நாட்டிலுள்ள குழந்தைகள் எல்லாம் பால் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் தலையில் பூக்கள்
சூட முடியாமல் வருந்தி கிடக்கின்றனர்.
குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல்
தாகத்தால் நா வறண்டு மக்கள் அழுது அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
மக்களைக் காக்க வேண்டிய மன்னன் நீயோ
கோட்டையை மூடிக்கொண்டு உள்ளே பத்திரமாக இருந்துகொண்டிருக்கிறாய்.
ஏன் இந்த அச்சம்?
யாருக்குப் பயந்து கோட்டைக்குள்
பதுங்கி இருக்கிறாய்?
யாரும் நெருங்க முடியாத சிங்கத்தைப் போன்றவன் நீ.
உன்னை எதிர்த்து போரிட்டு வெற்றிபெற
யாராலும் கூடாது.
போர் வேண்டாம் என்று அறவழியை விரும்புகிறாயா?
அப்படியானால்
கோட்டை அவனுடையது என்று கூறி திறந்துவிட்டுவிட்டு சரணடைந்து விடு.
இல்லை மறவழியை விரும்பினால் போர் செய்வதற்காக கோட்டையை திறந்து விடு.
போரிட்ட முடிவெடு.
வெற்றி தோல்வியோ எதுவானாலும் மோதிப்பார்த்து விடு. இப்படி இரண்டும் செய்யாமல் கோட்டைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது
வீரமுள்ள மன்னனுக்கு அழகல்ல.இது
வெட்கப்பட வேண்டிய செயல் "
"என்கிறார் கோவூர் கிழார்.
எவ்வளவு துணிச்சலான கேள்வி!
மன்னனை இடித்துரைத்து கோவூர் கிழார் பாடிய பாடல் இதோ உங்களுக்காக...
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே - புறநானூறு 44
மன்னனுக்கு மக்களைப் பாதுகாக்கும் திறன் இருக்க வேண்டும்
இல்லையா...நீ எல்லாம் என்ன மன்னன்
என்று கேட்பது போல் இருக்கிறது.
மன்னனாக இருந்தால் மக்கள் பாதுகாப்புக்குத்தான் முதலிடம்
கொடுக்க வேண்டும்.
தான் மட்டும் பாதுகாப்பாக கோட்டைக்குள் இருப்பது ஒரு வீரமுள்ள மன்னனுக்கு அழகல்ல என்று அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக