கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
பள்ளி பருவம் முதல்
பார்த்திருந்த நல்மகன் செல்லப்பா
இன்னும் கொஞ்ச காலம்
காத்திருக்க மனமில்லாது
காலனோடு நடந்தனன் என்ற
செய்தி கேட்டு
இதயம் நொறுங்கியது
சொல்லாடாது உறைய வைத்தது
ஆவரைகுளத்து உயிர்களெல்லாம்
அசையாது நின்று போனது
போன்றதொரு உணர்வில்
இதயம் ஒரு கணம்
துடிக்க மறந்தது
நினைவலை எங்கெங்கோ ஓடியது
படிப்பில் முதல் வரிசையில் நின்றார்
பண்பில் விஞ்ச ஆளில்லாதிருந்தார்
அன்பில் முதல்தரமாயிருந்தார்
அதனால்தான் காலனோடும் முதல்
வரிசையில் செல்வேன் என்று
அடம்பிடித்து முந்திச் சென்றாரோ?
ஊருக்கெல்லாம் செல்லப்பிள்ளை
இந்தச் செல்லப்பா
உறவுகள் மத்தியில் ஓயாது
கேட்ட பெயர் செல்லப்பா
பள்ளி வளாகமெங்கும்
எதிரொலித்த பெயர் செல்லப்பா
மும்பை மாநகராட்சி
தமிழாசிரிய குழுமத் தலைமைக்குத்
தகைமையான பெயர் செல்லப்பா
செல்லத்துரை பெற்ற சீர்மிகு
தலைமகன் செல்லப்பா
உயிர் இன்று காற்றோடு கரைந்தது
ஏற்க மனம் மறுக்கிறது
இதயம் கனக்கிறது!
ஆன்மீகத்தில் முழு மதிப்பு
சொல்லில் தனி ஈர்ப்பு
சொல்லொண்ணாப் பெருமதிப்பென
மாநகராட்சி எங்கும்
உலா வந்த செல்லப்பா
நாவாடாது கிடந்தாரென
உச்சரிக்க என் நா மறுக்கிறது!
ஆற்றாமையால் மனம்
அலைமோதி உடைகிறது
ஆறாத் துயர் தந்து
மீளாத் துயில் கொண்டு
கேளாது
இளைப்பாற சென்றதேனோ?
மும்பை மாநகராட்சித்
தமிழாசிரியர்களுக்குத்
தனி வரலாறு எழுதியவர்க்கு
கண்ணீர் பூக்களால் இன்று
கடைசி உரை எழுதுகிறேன்!
Comments
Post a Comment