திருவிழா கண்ட ஆட்டுக்கல்

திருவிழா கண்ட ஆட்டுக்கல்


எங்க வீட்டு ஆட்டுக்கல் திருவிழாதோறும்

ஆட்டம் போடும்.


வெள்ளைக் கலரை அள்ளிப்பூசி 

விடுவிடுவெனத் தலையை உருட்டி 

கடகடவெனக் கர்ஜித்து

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை 

ஆசுவாசப்படுத்தி  இப்படி ஒரு முறையோடு 

ஆட்டம் போடும்.ஆட்டத்தோடு இசையும் இருக்கும்.


எங்க வீட்டில் மட்டுமல்ல. ஊரில்

உள்ள ஒவ்வொரு ஆட்டுக்கல்லுக்கும்

அன்று கொண்டாட்டம்தான்.


ஆனால் பெண்பிள்ளைகள் எங்களுக்கு 

மட்டும் திண்டாட்டம்.

ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் 

ஒருமணி நேரம் அங்கிங்கு என்று 

எங்கும் நகரவிடாமல் ஆட்டுக்கல்லை ஆட்டுவிக்கும்

பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும்.


நாலு நிமிடத்திற்கு ஒருமுறை அப்படியே

ஊறப்போட்ட அரிசியில் கொஞ்சம் எடுத்து வாய்

அசை போடும்.

உள்ளம் ஊர் முழுவதும் சுத்தி வரும்.

நாளை என்ன என்ன கலரில் வளையல் 

வாங்கணும்...என்னன்ன பொருட்கள் வாங்கணும்...

எப்படி தலை சீவணும்...என்று ஒரு லிஸ்டே

மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்.


வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக

பக்கத்திலேயே டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று இலங்கை வானொலியை ஒலிபரப்பி கொண்டிருக்கும்.


திரைப்படப்பாடல் கேட்டுக் கொண்டே 

வேலை செய்வதால் இரண்டு பக்கா 

மாவு ஆட்டினாலும் வேலை சுமையாகத்

தெரியாது.


இன்றும் திருவிழா கொண்டாட்டத்தை எங்கள்

வீட்டு ஆட்டுக்கல் வெகு விமர்சையாகக்

கொண்டாடிக் கொண்டிருந்தது.

 

வெளியிலிருந்து ஓடிவந்த அண்ணன்

படக்கென்று கட்டிலில் குப்புறப் படுத்துக்

கொண்டு "அம்மா ....அம்மா "

என்று கத்தினான்.


பதறிப்போன அம்மா" என்ன...

என்னாயிற்று "ஓடிவந்து அருகில் உட்கார்ந்து

தலையைத் தடவினார்.


"எம்மா....என்னா இடி முழக்கம்...

என்னா இடிமுழக்கம் ...பயந்தே போய்விட்டேன்"

பயந்து போனவன் போல நடித்தான் அண்ணன்.


" இடிமுழக்கமா ? எங்க...நான் கேட்கல..."என்றார் அம்மா

அப்பாவியாக.


"நான் வடக்குத் தெருவிலிருந்து  நம்ம 

வீடு வந்து சேரும்வரை ஊர் முழுவதும் ஒரே இடி முழக்கம்தான்.

தெருவில்தான் இடிமுழக்கமா இருக்குதே

என்று வீட்டுக்கு ஓடி வந்தால்....

 நம்ம வீட்டுக்குள்ளேயும்

இடி முழங்குது... "சொல்லி நமட்டுச்

சிரிப்பு சிரித்தான்.


"நம்ம வீட்டில் இடிமுழங்குதா...என்னப்பா

சொல்லுற.."அப்பாவி அம்மா மறுபடியும் 

அப்பாவித்தனமாகக் கேட்டார்.


"சும்மா கிண்டல் அடிக்கிறாம்மா...

அவன் பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டு 

நீ வேற..." என்று ஆட்டுக்கல்லிலிருந்து கையை எடுக்காமல குரல்

கொடுத்தேன்.


"கிண்டல் எல்லாம் ஒன்றும் இல்லை...

இடி முழங்கும் உன் கனமழைக்கு

வாய்ப்பு இருக்கு" 


"மேகம் ஒண்ணும் இல்லையே...

இந்த சித்திரமாச வெயிலுலு எங்கிருந்து மழை வரப்போகுது"


"அம்மா....நீ ஒண்ணு என்னை கடுப்பேத்திகிட்டு இருக்காத....

ஏய்..

மழை வரட்டும் ...வந்த பிறகு பார்க்கலாம்

இப்போ நக்கல் பண்ணுறதை நிப்பாட்டு.

நானே தனியாக மாவு ஆட்டுறேனே என்று 

செம கோபத்தில் இருக்கிறேன்.என் கோபத்தைக்

கிளறாத...அப்புறம் நான் மனுஷியா

இருக்க மாட்டேன்."

 என் கோபத்தை அண்ணன்முன் கொட்டினேன்.


 "இப்ப மட்டும் நீ என்ன மனுஷியாவா 

இருக்க...குற்றாலத்துக் குரங்கு மாதிரிதான் இருக்க"


"ஏய் ...இந்த  ஆட்டுக்கல்லைத் தூக்கி

உன் தலையில் போட்டேன்னா"


"போடுவா....போடுவா...நீ போட்டாலும் போடுவா...வேலக்கள்ளி"


"அவன் இப்போ என்ன சொல்லிட்டான்

என்று அவன்மீது சாடுறா...

நீ உன் பாட்டுக்கு மாவை ஆட்டு"பேச்சுக்கு

முற்றுப்புள்ளி வைக்க வந்தார்

அம்மா.


"என்ன நக்கல் பண்ணிட்டேன்.. இடிமுழக்கம் 

என்று சொன்னது தப்பா..."மறுபடியும் முதலாவதிலிருந்து தொடங்கினான்

அண்ணன்.


"நீ என்றைக்கு தப்பா சொன்னேன்

என்று ஒத்துகிட்ட...இன்று ஒத்துக்கொள்வதற்கு...

அட போப்பா...எனக்கு வேலை இருக்கு..

உன்னிடம் பேச நேரம் இல்லை" சொல்லிவிட்டு 

மாவாட்டுதலைத் தொடர்ந்தேன்.


"சரி...சரி சண்டை போடாமல்

மாவை ஆட்டு " என்னை சமாதானப்படுத்த

முயன்றார்  அம்மா.


"அட போம்மா.. மக்கு மாதிரி நீயும் அவனுக்கு

சப்போர்ட் பண்ணிகிட்டு..அவன் ஆட்டுக்கல்லில்

எல்லா வீட்டிலும் மாவாட்டுகிறார்களல்லவா

அதைத்தான் இடிமுழக்கம் என்று சொல்லி

கிண்டலடிக்கிறான்...நீயும் போயி..."

அவன் நையாண்டியின் காரணத்தை அம்மாவுக்குப்

புரிய வைத்தேன்.


"அதையாப்பா சொன்னா...நாளைக்கு திருவிழா இல்ல... அதுதான்

எல்லா வீட்டுலேயும் தோசைக்குப் 

போட்டுருப்பாவ.."

ஏதோ தெரியாதவனுக்கு விளக்குவதுபோல 

அம்மா விளக்கினார்.


"இப்படி ஊரில் ஒரு வீடு தவறாமல்

ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டினால்...இடி முழக்கம்

கேட்காமல் வேறு என்ன கேட்கும் ..

அதுவும் நம்ம வீட்டுக் குந்தாணி மாதிரி

ஐம்பது குந்தாணிகள் ஆட்டுக்கல் லோடு முட்டி மோதினால்...?

வாங்கம்மா ஊரு முழுக்க ஒரு சுற்று 

சுற்றிட்டு வருவோம். "அம்மாவின் கையைப்

பிடித்து இழுத்தான்  அண்ணன்.


"அட விடுப்பா...விளையாட்டுக் காட்டாத.

உனக்கு எங்க பொழப்பு

சிரிப்பா இருக்குது...திருவிழாவுக்கு 

திருவிழா தானே தோசை இட்லி பார்க்க

முடியும். அதுதான் ஒருபக்காவுக்கு கூட

ஒரு பக்கா போட்டு வயிறார தின்போம்

என்று எல்லா வீட்டிலும் போட்டு ஆட்டுவாக...

இதுக்குப் போயி கிண்டல் பண்ணுறியா...

உனக்கு வேண்டாம் என்றால் நாளைக்குத் தின்காத"

என்றார் அம்மா.


"கோவிச்சுக்காதுங்கம்மா...சும்மா

விளையாட்டுக்குத்தான் சொன்னேன்

அதுக்குள்ள என் வயித்துல கை வைகாகப் பார்க்கிறியள" 

அம்மாவையும் என்னையும் 

தாஜா பண்ணினான்  அண்ணன்.

 

" நீ கொஞ்சம் ஆட்டிப் பாரு அப்போ தெரியும்

 இந்த இடிமுழக்கம் எப்படி வருதுன்னு..."


"அதெல்லாம் பெண்கள் டிபார்ட்மென்ட்.

நமக்கெல்லாம் ஒத்துவராது. முழங்குங்க...

நல்லா முழங்குங்க...

அப்போதான்  திருவிழா மாதிரி இருக்கும்"



"எனக்கு வருகிற  கோபத்தில..." ஆட்டுக்கல்லை

வேகவேகமாக  ஆட்ட இடிமுழக்கத்தோடு

வெண் மேகம் திரண்டு வர,

அங்கங்கே முகத்தில் சிறுமேகம்

கலைந்து வந்து 

அப்பி அழகு காட்டிக் கொண்டிருந்தது.






 



 





Comments