வானரம் மழைதனில் நனைய...

வானரம் மழைதனில் நனைய...


காட்டில் மிகுதியான மழை . 

ஒரு தூக்கணாங்குருவி தன் கூட்டில் பத்திரமாக இருந்தபடி வெளியில் எட்டிப்பார்த்தது. கீழே ஒரு குரங்கு மழையில் நனைந்தபடி வெடவெடத்துப் போய் இருந்தது.

தூக்கணாங்குருவிக்கு குரங்கு மீது பரிதாபம் உண்டாயிற்று.

உடனே,

"குரங்கண்ணே!குரங்கண்ணே! ஏன்  மழையில் நனைந்து கொண்டிருக்கிறீர்கள் ?

என்னைப் பாருங்கள் 

நான் உங்களைவிட சிறிய பறவை. எவ்வளவு பாதுகாப்பான கூடுகட்டி மழையில் நனையாமல் இருக்கிறேன்!. நீங்களும்

 கூடுகட்டி இருந்தால் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கலாம் அல்லவா?"என்றது.

உடனே குரங்குக்கு ஒரே கோபம்.

என்னை சோம்பேறி என்கிறாயா என்றபடி

விடுவிடுவென மரத்தில் ஏறியது.

படபடவெனக் கூட்டைப் பிய்த்து வீசிவிட்டு

கடகடவெனக் கீழே இறங்கிப் போய்விட்டது.


நல்லது சொன்ன தூக்கணாங்குருவி

இப்போது மழையில்

நடுங்கிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று.

அதேபோல

 ஒருநாள் காட்டு வழியாக

ஒரு பெரியவர் கையில் ஒரு இசைக்கருவியை வைத்துக்கொண்டு  பாடல் பாடியபடி வந்து கொண்டிருந்தார்.

 ஒரு கள்வன் ஒருவன்

எதிரில் வருவதைப் பார்த்தார்.

தம்பி,  என்று அழைத்தார்.

"என்ன....என்ன வேணும்" என்பதுபோல ஏற இறங்கப் பார்த்தான் கள்வன்.


"ஏதாவது வேலை செய்து வேலை பிழைக்கலாம் ஏ" என்றார் 

"ஏன் ... வேலை கொடுக்கப் போகிறீர்களா?"

நக்கலாகக் கேட்டான் கள்வன்.

"அடுத்தவர்கள் பொருளைத் திருடுவது தப்பில்லையா?"

அடுத்தவர்கள் பொருளைத் திருடுவது தானே தப்பு. உங்கள் பொருளைத் திருடினால் தப்பில்லையே என்றபடி கையில் வைத்திருந்த இசைக்கருவியை பிடுங்கிக்கொண்டு ஓடினான்.கள்வன்.

மூர்க்கனுக்கு அறிவுரை சொல்ல போய் கையிலிருந்து இசைக்கருவியை

இழந்து போய் நின்றார் பெரியவர்.

இந்தக் கருத்துக்களைச் சுமந்து நிற்கும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உள்ளது.

குரங்குக்கு நல்லது சொல்லி கூட்டை இழந்து போய் பரிதாபப்பட்டு நிற்கும் தூக்கணாங்குருவியைப் போல நூல்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை மூர்க்கருக்கு புகட்டி

அவர்களைத் திருத்த நினைத்தால் நாம்

துன்பப்பட்டுப் போகும் சூழல் ஏற்படும்  என்கிறார்

விவேக சிந்தாமணி ஆசிரியர்.


இதோ பாடல் உங்களுக்காக..


"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”.

                                 -விவேகசிந்தாமணி


வானரம்-குரங்கு

நெறி-வழி

ஈனர்-மூர்க்கர்

இடர் -துன்பம்

அருமையான பாடல் இல்லையா?


இதன்மூலம் யாரிடம் என்ன பேச வேண்டும் 

என்பதை அறிந்து பேச வேண்டும்.

நல்லது செய்கிறேன் என்று தகுதி இல்லாதவர்களிடம்  பேசி துன்பத்தில் நாமாக போய் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ளலாம்.


"மூர்க்கனுக்கு அறிவுரை சொன்னால் 

துன்பம் வந்து சேரும்" என்பதைத்

தூக்கணாங்குருவியே புரிந்துகொண்டது.

நாம் புரிந்துகொள்ளாமல் இருப்போமா என்ன?

"சொல்லப்படும் வார்த்தை

கேட்பவர் மனநிலைக்கு ஏற்ப

புரிந்து கொள்ளப்படும்"




Comments